அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945
பகுதி – 9
இனி, உயிரின்கண் கிளர்ந்தெழும் பரிப்பு உடம்பையும் மனத்தையும் இயக்குகிறது. அதனால் உயிர் மனத்தைக் கொண்டு நினைத்தலும் உடம்பைக் கொண்டு உரையும் செய்கையுமாகிய செயலும் செய்து கொள்கிறது. மனமும் உடம்பும் இல்லையானால் உயிர்க்குச் செயலில்லை; வினையில்லை. “இருவினை என்பது என்னைக்கொல் அருளிய, மனமே காயம் வாக்கெனும் மூன்றின், இதமே அகிதமே எனும் இவை” என்று அருணந்தி சிவனார் கூறுவது காண்க. மனத்தின்கண் நினைவு இயல்பும் வாய் உடம்புகளில் உரையும் செயலுமாகிய தொழிற் பண்பும் திருவருளின் பரிப்பியக்கமாகும். இதனால் உயிர் திருவருளியக்கத்தின் துணைகொண்டே மனம் உடம்பு ஆகிய கருவிகளை இயக்கி வாழ்க்கைத் தொழிலைச் செய்வது இனிது தெளியப்படும். திருமூலனாரும்,
“பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள்அந்த நேசத்தில்
கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலைஅரு ளாமே”
என்றும், “அருள் ஐங்கருமத்து அதிசூக்கம் உன்னார், அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே” என்றும் குறித்தருளினார். இதைத்தான் “அழிப்பு இளைப்பாற்றல்” என்ற சிவஞான சித்தித் திருவிருத்தத்தில், “பார்த்திடின் அருளே எல்லாம்” என்று அருணந்தி சிவனார் முடித்துக் காட்டினார்.

Add a Comment