POST: 2016-06-26T12:06:28+05:30

அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945
பகுதி – 10

இதுகாறும் கண்டவற்றால் உயிரும் மனமும் உடம்பும் தம்மில் ஒன்றினென்று ஈர்ப்புண்டு இயங்குதற்குத் திருவருளின் பரிப்பியக்கமே இன்றியமையாத முதல் என்பது கண்டோம். சுருங்கச் சொல்லுமிடத்து, திருமூலர் அருளியதுபோல நாம் “அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு அருளில் அழிந்து இளைப்பாறி” வாழ்கின்றோம் என்பது தெளிவாம். உயிர் என்பது யாது? உணரும் தன்மையும், அறிவு விழைவு செயல் என்ற மூவகை ஆற்றலுமுடைய ஒரு பொருள். திருவருளின் பரிப்பால் இம்மூன்று ஆற்றலும் உயிர்ப் பொருளின்கண் கிளந்து நின்று செயற்படச் செய்யும். எல்லா அண்டங்களையும் பொருள்களையும் பரித்து இயக்கும் திருவருளின் பேராற்றல் அளப்பரும் தன்மை வாய்ந்த்து. உயிர்ப் பொருளின் ஆற்றலை நோக்க அது மிக மிக உயர்ந்திருத்தலால் அதன் வேகம் கெடுத்து ஆள்வதற்கென மூன்று வகைத் தத்துவங்கள் உயிரைச் சூழ்ந்து நிற்கின்றன. அவை வித்தை, அராகம், கலை என்று பெயர் கூறப்படுகின்றன. திருவருள், கலையின் வாயிலாகச் செய்கையாற்றலும், அராகத்தின் வாயிலாக விருப்பமும் வித்தை வாயிலாக அறிவாற்றலும் உயிரின்பால் எழச் செய்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *