மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
===================
பாடல் – 2
——————–
அருணன் இந்திரன்திசை அணுகினன், இருள்போய்
அகன்றது, உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ, நயனக்
கடிமலர் மலர, மற் றண்ணல் அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன, இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே,
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே,
அலைகடலே; பள்ளி எழுந்தரு ளாயே !
விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானே ! திருவருட் செல்வத்தை வழங்கவரும் இன்ப மலையே ! அலைகடலே ! இருள் அகன்று போயிற்று, உன் திருமுகம் ஆன உதயகிரியில் உன் கருணையாகிய சூரியன் மேலே எழுந்தோறும் அண்ணலாகிய தேனை நாடும் (அடியார்களாகிய) வண்டுகளின் திரள்கள் முறையே தோத்திர முழக்கம் செய்கின்றன. இவற்றை உணர். திருப்பெருந்துறையில் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய சிவபெருமானே, மருளாகிய செல்வத்தை விலையாகக் கொடுத்து வாங்கத் தகுமானால் பெறவுரிய ஆநந்த மலையே ! அலைகடலன்ன கருணையே திருப்பள்ளி எழுந்தருள்வாயாக!.

Add a Comment