அறிவியல் முத்தாரம் அறிஞர் மணவை முஸ்தபா !
===============================================
அறிவியல் அறிஞர் ஆசிரியர் பெருந்தகை முஸ்தபாவின் மறைவு மனத்தை நெகிழ்விக்கிறது. பல்லாண்டுகளாக அவர் யுனெஸ்கோ கூரியர்–ல் பதிப்பாசிரியராக ஓய்வின்றி அலைந்து அந்த உலக நல்லிதழுக்கு ஒளியூட்டிய பெருமகனாவார். நான் அரசு செயலாளராக இருந்தபோது நாள் தவறாமல் அலுவலகம் வந்து என்னிடத்தில அன்போடு பேசி மகிழ்வார்.
கலைமாமணி விருது, தமிழக நூலாசிரியர் விருது மற்றும் தம் மக்கட் செல்வங்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்ற மாட்சி இவைகளெல்லாம் ஈடுசொல்ல முடியாதவை.
செம்மொழி உருவாக்கத்திற்கு இரவு பகலாக உழைத்து வெற்றி கண்ட பெருந்தகை அறிஞர் திரு.மணவை முஸ்தபா ஆவார். அவர் கண்ட கனவுதான் செம்மொழிச் செம்பயிறுக்கு நீராக அமைந்தது. தனி ஒருவராக இருந்து அறிவியல் தமிழுக்கு ஆக்கம் கண்டதோடு அறிவியல் கலைக்களஞ்சியங்களை உருவாக்கிய அவரின் ஆற்றலை எவரும் ஈடு செய்ய முடியாது.
ஓய்வில்லாமல் உலகம் சுற்றிய நண்பர் முஸ்தபா, பாரீஸ் மாநகரில் ஒரு நிகழ்ச்சியின்போது சரிந்து விழுந்தார். அந்த சரிவு அந்த இமயத்திற்கு அசைவைத் தந்தது. அந்த அசைவுதான் அவருடைய எஞ்சிய வாழ்வுக்கு இடறாக முடிந்தது.
அவருடைய அருமைத் துணைவியர், நண்பர் மணைவையாரை கண்ணுங் கருத்துமாக காத்து வந்தார்.
அவருடைய நன்மக்கள் மருத்துவ மாமணிகளாய் திகழும் அண்ணலும், செம்மலும் மணைவையாரின் அறிவியல் தமிழ் கனவுகளை ஈடு செய்வார்களாக !
—–பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

Add a Comment