எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-37
————-
அரசு செயலாளர் என்ற முறையில், அனைத்துத் துறைத் தலைவர்களையும் அழைத்து, நிதி ஒதுக்கீடு பற்றிய ஒரு கூட்டம் நடக்கும். அப்போது நான் ஊரில் இல்லை. நான் சார்ந்த துறையின் இணைச் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர், அப்போதிருந்த ஐஏஎஸ் அதிகாரிகள், அந்தக் கூட்டத்தை நடத்தினார்கள்.
அந்த அதிகாரிகள், ஒரு கடிதத்தை, வழக்கம் போல எல்லோருக்கும் அனுப்பி விட்டனர். அதற்கடுத்த நாள் காலை நடந்த கூட்டத்தில், நான் பங்குகொண்டேன். இசைக்கல்லூரியில் இருந்து யாரும் வரவில்லை. அது ஒன்றும் பெரிதில்லை. நான் தொகையை ஒதுக்கிவிட்டு, அந்த அம்மையாருக்குச் சொல்லிவிடலாம் என்று அந்த அதிகாரிகளிடம் சொன்னேன். திடீரென்று அன்று மாலை 4 மணிக்கு, முதலமைச்சர் எம்ஜிஆர் அழைத்தார். என்ன? நீங்கள் பானுமதிக்குக் கடிதம் அனுப்பி, கூட்டத்திற்கு அழைத்தீர்களாமே? என்று கேட்டார். நான் ஒன்றும் அழைக்கவில்லை. இயக்குநர்களை அழைப்பது வழக்கமானதுதான் என்றேன் நான். இல்லையில்லை. அந்தம்மா பெரிய முன்கோபி, அவரைப் பார்ப்பதென்றால், நீங்கள் போய்ப் பார்த்து விடுங்கள். அவரைக் கோட்டைக்கு வருமாறு சொல்லாதீர்கள் என்றார் எம்ஜிஆர். நான் சொன்னேன். கடிதம்கூட, நான் எழுதவில்லை. இணைச் செயலாளர் நடத்திய கூட்டம் அது என்று மெல்லச் சொன்னேன்.

Add a Comment