வெள்ளை இருளாயிற்று….
=========================
வெள்ளையாம்பட்டு சுந்தரம், என் மனங்கனிந்த நண்பர். சேகர் பதிப்பகத்தின் உரிமையாளர். வெள்ளை உடையும் வெள்ளை மனதும் கொண்டவர்.
நான் சென்னைக்கு வந்த நாள் முதல் என்னோடும், என் குடும்பத்தோடும் நெருங்கிப் பழகியவர்.
டாக்டர் அம்மாவை (என் மனைவியை) வற்புறுத்தி, உங்களிடத்தில் இருந்து எப்படியாவது ஒரு கட்டுரையைப் பெற்று நான் வெளியிட வேண்டும், அதுதான் என் இலட்சியம் என்று மனமுருக பேசுவார்.
எங்கள் நட்பு வளர வளரத்தான், உவமைக் கவிஞர் சுரதாவின் தேன்மழை வெளியிட்ட நிகழ்ச்சி, ஒப்பரிய கவிஞர் நீலமணி நூல்களை தேடித்தேடி வெளியிட்டது, புதுவையில் வாழ்ந்த அறிவியல் அறிஞர் பி.எல்.சாமி அவர்களின் நூல்களை வெளியிட்டது என அரிய பதிப்புகளை கொண்டுவந்தது போன்ற நிகழ்வுகள் இனிய நிறைவேறின.
அவருடைய 60ஆம் ஆண்டு விழாவை நான் அரசு செயலராக இருந்து கொண்டாடி மகிழ்ந்தேன். எனக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டதும், துடித்துப்போன வெள்ளையாம்பட்டு சுந்தரம், “சொல்லிவிட்டு வருகிறேன்” என்று தொலைபேசியில் பேசினார். இப்போது “சொல்லாமல் என்னை விட்டுச் சென்றுவிட்டார்”.
கோடியில் ஒருவர் வெள்ளையாம்பட்டு சுந்தரம். எந்த இழப்பையும் பதிப்பகத்துக்காக இதயத்தில் சுமந்தவர். அவருடைய வாழ்வு ஊதியத்திற்கு இழப்பானாலும் உழைப்புக்கு அமைந்த வெற்றியாகும்.
….. ஔவை நடராசன்

Add a Comment