எப்போது பார்ப்பது?
======================
கவிக்கோ அப்துல் ரகுமான் மாணவர்க்கு மாணவர். தோழருக்கு தோழர். உடன்பிறப்பாக எனக்கு இளையவர்.
மதுரையிலிருந்து நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தோம். ஒன்றாக மகிழ்ந்தோம்.
அமுதும் தேனுமாக கவிதைகளை எழுதி அண்ணாவின் தலைமையில் பாடத் தொடங்கி கலைஞரின் பதாகையில் ஒப்பற்றவராக ஒளிவீசியவர்.
“வெகுமானம் எது என்று கேட்டால், ரகுமானைக் கேட்டேன்” என்று முத்தமிழறிஞர் முழங்கிய வரிகள் அப்துல் ரகுமான் கவிதைகளுக்கு முகவரிகளாக அமைந்தன.
நாங்கள் இருவரும் ஆறு திங்களுக்கு ஒருமுறை என்று கண்டு பேசி களித்து வந்தோம்.
என்னைப் பார்த்து, ”உங்களைவிட்டு போவேனா?” என்று கேட்டார். சொன்ன சொல்லை மறந்து என்னை துடிக்க விட்டு போய்விட்டார்.
அப்துல் ரகுமான் கற்பனையும் கலை ஓவியமும் தமிழுலகத்தை உயர்த்தியே வைத்திருந்தது.
இந்த பிரிவு எனக்கு உறவாக இருந்த ஒரு பெரிய கிளையை முறித்துவிட்டது.
“என்னை வந்து பார்க்கிறேன் என்று சொன்னீரே நண்பரே, எங்கே எப்போது?”
ஆறாத துயரத்துடன்………..
——- ஔவை நடராசன்

Add a Comment