மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-154
—————-
இசைச்சித்தர்
சிதம்பரம் ஜெயராமன்
============================
என் வாழ்வில் நான் அரசு செயலர் பதவியில் பணியாற்றியது ஒரு பெரிய வாய்ப்பாகும். பதவி நிலையில் எவரும் எளிதில் பெற முடியாத பதவி என்றாலும், அந்தப் பதவி நிலையில் இருந்தபோது நான் பழகிய பெருமக்கள் சிலரை எண்ணிப் பார்க்கும்போது என் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது.
ஈடில்லாத இசைச் சித்தர் என்று நான் எண்ணிப் புகழ்ந்ததைவிட அண்ணா கேட்டு மகிழ விரும்பிய இசைச்சித்தர் அண்ணல் சிதம்பரம் ஜெயராமன் அவர்களாவார். நான் அரசு செயலாளர் பொறுப்பில் இருந்தபோது, இசைக் கல்லூரியில் தலைமைப் பொறுப்பும் எனக்கு அமைந்திருந்தது. அந்த நிலையில்தான் சிதம்பரம் இசைச்சித்தர் அவர்களைத் தமிழ்நாடு இசைக்கல்லூரியில் முதல்வராக அமர்த்தம் செய்து ஆணை வந்தது.
என்னை அறியாமல், அந்த ஆணையை வழங்கியபோது, என் கண்களில் நீர் மல்கின. இசைச் சித்தரின் பெயரைக் கேட்டாலும் அவர் குரல் செவியில் விழுந்தாலும் என் நாடி நரம்பெல்லாம் துடிக்கும். தங்கப் பதுமை என்ற படம் வந்த நேரமது. தவறுக்கும் தவறான தவற்றைப் புரிந்துவிட்டுத் தனிப்பட்டுப் போனவன் நான் ஞானத்தங்கமே! என்ற தொடரையும் வீணைக்குரியோனின் மைந்தர்கள் அமர்ந்துகொண்டு வெண்பா விருத்தம் தாழிசை பாடுவது எந்தப் பண்களில் என்று கேட்டபோது இலங்கை வேந்தர் இராவணன் தன் இசைப்புலமையால் பண்களின் பெயர்களைச் சரவரிசையில் பாடிக் காட்டுவதைத் திரையுலகத்தில் ஒரு பெரிய வரலாறு என்று கூற வேண்டும்.

Add a Comment