மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-244
—————
12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய தென் மாநிலங் களைப் பேரல்லல்களுக்கு உட்படுத்திய புயல், வெள்ளக் கொடுமைகள் பற்றிப் புலவர் பெருமக்கள் பலர் பாடிய செய்யுட்கள் உங்கள் பார்வைக்கு…. (பாடல்-5)
வழங்கிடுவோம், வருவீரே !
============================
(கோ. வே. பெருமாள்]
======================
தேனூறும் ஆறுபல செழிப்பூட்டும் தென்னாடு,
வானூறும் கதிர்மதியம் வயங்குகின்ற பொன்னாடே!
இணனூறும் உழைப்பினையே உன்னுகின்ற இந்நாடு,
கானூறும் கவின்செல்வம் கனிவிக்கும் நம்நாடே!
இன்னமுதத் தமிழகத்தே ஏர்தஞ்சை திருச்சியிலே,
என்னென்போம்? முன்பொருகால், இருபத்தைந் தாண்டுகள்முன்
பன்னியவா யிரத்துத்தொள் ளாயிரத்தைம் பத்திரண்டில்,
மின்னுங்கார்த் திகைத்திங்கள் மிக்கபுயல் தாக்கியதே!
வங்கப்புயல் இப்போதும், வந்திருமுறை சூறையாகி,
அங்கங்கே மழைவெளத்தால், அது நிலைமை தந்ததுவே!
மங்காத ஆந்திரமும் மலையாளம் கன்னடமும்
எங்குமிலா இத்துயர்க்கே இலக்காகி நொந்தனவே!
மாட்டைக் கன்றினை மனிதரைமிக
வாட்ட வந்ததிப் புயலடா !- காலன்
காட்ட வந்ததிச் செயலடா!
உள்ளங் காடெனத் துயரம் மண்டிட
வெள்ளக் காடென் மாறியே-கெட
வீறு புயலது சீறியே !
கொள்ளை கொண்டது வளமும் உயிர்க்குலக்
கொத்த ழிந்திடச் செய்ததே – அழிவுக்
கூத்து மழையெனப் பெய்ததே !
மாலைமாலையாய் மனிதர் கண்களும்
வற்றி டா தகண் ணீருமே-வடிக்க
வாழ்வு கெட்டதைக் கூறுமே !
காலப் புயலுடன் ஓலமிடுமழை
கனத்த தீனியைத் தந்த தாய்-கொடுங்
கழுகுக் கூட்டமும் வந்ததே !
வீழ்ந்த பிணமலை அழுகி நாறிட
விரைந்து போயின கழுகெலாம்-கொத்த
விண்ப றந்தன பொழுதெலாம் !
வாழ்ந்த மானிட வாழ்வு தானொரு
மாயக் கன வென லானதே -உயிர்
மாயக் கன வென லானதே !

Add a Comment