மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-253
—————
ராகேஷ் ஷர்மா இந்திய விண் நாயகன் ! (பகுதி-3)
——————————————————————————
தாம்பரத்திலிருந்து புறப்பட்டு வள்ளுவர் கோட்டம்வரை திறந்த ஜீப்பில் ராகேஷ் சர்மாவும் ரவீஷ் மல்ஹோத்ராவும் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்கள்.
வழி நெடுக சாலையின் இரண்டு பக்கங்களிலும் மக்கள் நின்று கை அசைத்து அவர்களை உற்சாகமூட்டினார்கள். பலருக்கும் இரண்டு பேரில் யார் ராகேஷ் ? யார் ரவீஷ்? என்று அடையாளம் தெரியவில்லை. இரண்டு பேருமே விமானப்படைச் சீருடையில் இருந்தார்கள். பார்வையாளர் ஒருவர் சட்டென்று அடையாளம் சொன்னார்: “மீசை இல்லாதவர் ராகேஷ்; மீசை வைத்திருப்பவர் ரவீஷ்.”
வள்ளுவர் கோட்டத்தில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் விண்வெளி வீரர்களுக்குப் பாராட்டு விழா.
ராகேஷ், ரவீஷ் இருவரும் சின்ன உரையாற்றினார்கள். அவர்களது ஆங்கில உரையை தமிழில் நான் மொழி பெயர்த்தேன். மொழிபெயர்த்த உடனேயே நான், ராகேஷ் சர்மா, ரவீஷ் மல்ஹோத்ரா இருவரிடமும் ஒரு புதிர் போட்டேன். அது என்னவென்றால், உங்களுக்கு முன்னதாகவே எங்கள் முதலமைச்சர் ஒரு விண்வெளிவீரர்” என்று சொல்லி அவர்களையும் அவையினரையும் திகைக்க வைத்தேன். நானே பிறகு, அந்த திகைப்பை மாற்றி, பல ஆண்டுகளுக்கு முன்னர், கலையரசி என்ற திரைப்படத்தில் எங்கள் முதலமைச்சர் விண்வெளி வீரராக நடித்திருக்கிறார்” என்றபோது அதை எம்.ஜி.ஆர்.கூட சிரித்து ரசித்தார்.

Add a Comment