முனைவர் ந.அருள் ஆற்றிய வாழ்த்துரையின் சுருக்கம்……
==========================================
நாள் : 28.07.2018
==========================================
ஆங்கில அரசு, உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கியபோது மூன்று கண்களைப்போல மும்பையிலும், கொல்கத்தாவிலும், சென்னையிலும் (1840ம் ஆண்டு)தொடங்கிய கல்லூரிகள்தான் மாநிலக் கல்லூரிகளாகும். சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது 1857ம் ஆண்டு. ஆக, மாநிலக் கல்லூரியை Mother of University என்றுதான் அழைப்பார்கள்.
பூவெனப்படுவது பொறிவாய்
என்று குறிப்பதுபோல
கல்லூரி எனப்படுவது அரசின் தலைமைக் கல்லூரியாகிய மாநிலக் கல்லூரிதான் என்று பொருள்பட்டது.
மாநிலக் கல்லூரியின் முதல்வர்தான் கல்வித் துறைக்குத் தலைவராகவும், இயக்குநராகவும் செயற்படுகிற நெறிப்பாடு அமைந்திருந்தது.
மாநிலக் கல்லூரியின் பேராசிரியர் என்றால் பெரிய தகுதி வாய்ந்த, பெருமிதம் கொண்ட பதவியாக விளங்குகிறது.
மாநிலக் கல்லூரியின் முதல்வராக விளங்கும் நண்பர் இராவணன் அவர்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். திரு.இராவணன் அவர்கள் மாநிலக்கல்லூரியின் புள்ளியல் துறை மாணவராக விளங்கி, கல்லூரியின் பேராசிரியராக வளர்ந்து, இன்று அதே கல்லூரியின் முதல்வராக மிளிர்வது நம்மையெல்லாம் எல்லையில்லா மகிழ்ச்சியை ஆற்றுகிறது. இலங்கைக்கு உளவு பார்க்கச் சென்ற அனுமன், இராமனிடம் வந்து இலங்கையில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியும், களிப்புடனும் உள்ளனர். அங்குத் துயரமும், வாட்டமும் இல்லை.
“களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன்” என்று அனுமன் கூறிய தொடர் போலவே பேராசிரியர் இராவணன் அவர்களின் ஆட்சி கல்வித்துறையில் மாட்சியுடையதாகத் திகழ வேண்டும் என்பது அனைவரின் அவாவாகும்.
தலைமைக் கல்லூரி என்று பொருள்பட வேண்டியதை மாநிலக் கல்லூரி என்று அழைத்துவிட்டோம். மாநிலத்துக்கே இதுதான் கல்லூரி என்று பொருள்படுகிறது.
கல்விக்கு அரணாகவும் மாணவர்களுக்கு அறிவரங்கமாகவும் மாநிலக் கல்லூரி மிளிர்கிறது.
வின் தொலைக்காட்சி நிறுவனர், திரு.தேவநாதன் மற்றும் இயக்குநர் குணசீலன் நன் முயற்சியால் மாநிலக்கல்லூரி முன்னாள் மாணவர் மன்றம் இன்று பாராட்டு விழாவினை நடத்துகிறார்கள்.
தலைமை தாங்கும் மாண்பமை நீதியரசர் ஜெகதீசன் அவர்களையும், செயலாளர் ரூஸ்வெல்ட் அவர்களையும் நான் நெஞ்சார வாழ்த்துகிறேன்.
இந்நிகழ்வில் பாராட்டுரை வழங்கும் இனிய நண்பர் மாநிலத் தகவல் ஆணையத்தின் உறுப்பினர் திரு.பிரதாப் குமார், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் முனைவர் விஜயராகவன் பங்கேற்றிருப்பது பெருமைக்குரியது.
அவ்வண்ணமே, தத்துவ மேதை டி.கே.சீனிவாசன் அவர்களின் மகன், பேராசிரியர் வில்லாளன், காவல்துறை உயர் அதிகாரி திரு.தாம்சன், தமிழாசிரியர் திரு.செங்குட்டுவன், மாநிலக் கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர் முத்துவேலு ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மாநிலக் கல்லூரியின் முதல்வரை நான் மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

Add a Comment