அன்னோனை இழந்த உலகம் !
================================
சருகான இலை உதிர்ந்து போனால் சரிதான். அது காலத்தின் கோலம் என்று ஆறுதல் கொள்ளலாம்
.
சாயாத மலை, ஓயாத தமிழ்க்கடல், இனத்தையும்,மொழியையும் தோளில் சுமந்த ஈடு இல்லாத தலைவர் அவருக்கு முடிவு என்று சொன்னால் இனத்திற்கும், மொழிக்கும், மனத்தின் எழுச்சிக்கும் மானத்தின் பெருமிதத்துக்கும் யார் தான் துணை? யார் தான் இணை?
கலைஞர் தொடாத துறை இல்லை, கலைஞர் பேசாத மேடையில்லை. அரசியலா? இலக்கியமா? கவிதையா? கட்டுரையா? நாடகமா? பண்பாடா? அத்தனையும் உங்களால் வாழ்வு பெற்றன.
கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வு தந்தாய்; வளம் தந்தாய்; தந்தையாய், தாயாய்த் தாங்கி நின்றாய்.
“அன்னோனை இழந்த உலகம்
இனி என்னாவது கொல் அளியது தானே!”
என்ற புறநானூற்று வரியைத்தான் சொல்லிப் புலம்ப வேண்டும்.
அழுகைக்கு ஆறுதல் ஏது?
தமிழ் மூச்சு நிற்பதா?
கண்ணீர் கடலில் கலங்கி, கார் இருளில் கலங்கித் தவிக்கும் மக்களைக் கை நீட்டி அரவணைக்கும் கலங்கரை விளக்கமாக இருந்தவர் கலைஞர் தானே!
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment