கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை – 03.06.2009
========================================
பத்மஸ்ரீ ஔவை நடராசன்
(பகுதி – 3)
—————-
டாக்டர்.இராதாகிருஷ்ணன் வாய் திறந்தால், கடல் மடை போல் சொல்வதால், அவருடைய பேச்சுக்களே பின்னர் நான்கு தொகுதிகளாக வெளிவந்தன. அவர், கையால் எழுதுகிற பழக்கம் ஐம்பது வயதைத் தாண்டிய பிறகு நின்றுவிட்டது. அருமை நண்பர் ஜெயகாந்தன் அவர்கள் சொன்னார்கள், நான் “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்று நூலை வாயால் சொல்லித்தான் மற்றவர்கள் எழுதினார்கள் என்று. காவியக் கவிஞர் சொன்னார், நானேதான் எழுதுவேன் என்று. நம் தமிழக முதல்வர் அவர்கள் தான் சொல்லி இன்னொருவரை எழுதவே சொல்ல மாட்டார்.
நாங்கள் பணியாற்றும்போது ஒருநாள் விடியற்காலையில், தஞ்சையில் இருந்து திரும்பி வந்தவுடன் காலை 7 மணிக்குச் சொன்னார், “நான் பத்து மணிக்கெல்லாம் பேச வேண்டும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்காகப் பேசுகிற உரை என்று சொன்னார்”. “நீங்கள் சொல்லுங்கள் எழுதுகிறோம்” என்று நான்குபேர் சுற்றி நின்றோம். “என்னை டிக்டேட்டராக (Dictator) ஆக்காதீர்கள்” என்று சொன்னார். “நானே எழுதிவிடுகிறேன்” என்று சொன்னார். அவர் எழுதுகிற தாள் அதிக நீளம் இருக்காது. குறைவான நீளம்தான் இருக்கும். அவர் எழுதிய பிறகு அங்கே கீழே விழுந்த தாள்களை எண்ணினால் ஒரு எண்பது பக்கங்களுக்குமேல் சென்றன. அதை “இப்போது எப்படி அச்சிட்டுக் கொடுப்பது?” என்றோம். “வேண்டாம், இதை அப்படியே நகல் எடுத்துக் கொடுத்துவிடுங்கள்” என்றார். அப்படி எழுதுகிற இயல்பு அவருக்கு.

Add a Comment