POST: 2020-05-25T08:17:11+05:30

தினசெய்தி நாளிதழில் இன்று (25.05.2020) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 35)

‘‘பாமரரைப் படிக்க வைத்த பத்திரிகையாளர்..!’’

ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
—–
திரைப்படம் போல உலகத்தைக் கவரும் ஊடகத்தை விஞ்சுவதற்கு எந்த ஊடகமும் இல்லை. ஒரு திரைப்படம் வெற்றி பெற்றது என்றால், ஒரு கோடி மக்களின் உள்ளங்களைக் கவர்ந்துவிட்டது என்பது பொருள். எனவே, திரைப்படத்தினுடைய வலிமையையும், எல்லையையும் ஆழமாகத் தெரிந்து திரையுலகத்தில் புரட்சி நடிகராகப் பொன்மனச் செம்மல் திகழ்ந்த தனிப்பெருமை அவருக்கு உரிமையாகும்.

எதையும் மக்கள் மனத்தை நேர்முகமாகத் தொடும்படியாக எடுத்துச் சொல்ல வேண்டும். அழகாகச் சொல்வதும், அடுக்கிச் சொல்வதும், ஆழ்ந்த பொருள் ததும்பச் சொல்வதும் பேரறிஞர் அண்ணாவுக்கு முடிந்தது. வேறு எவராலும் அந்தப் போக்கை முழுமையாகப் பின்பற்ற முடியாது. அண்ணாவின் பேச்சு, எவ்வளவு ஆழமானது என்பதை அடிக்கடி தம்பி காளிமுத்து சொல்லிக் காட்டுவார்.

“மன மருள் கொண்ட பறவைகள் கூட்டமாகப் பாமரர் மயங்கியிருந்தபோது, அறிவுத் தெளிவு என்ற ஆலோலம் கேட்டு, அங்குமிங்கும் பறவைகள் பறப்பது போல மக்கள் மனமும் பகுத்தறிவுப் பண் கேட்டுத் தம் சிந்தனைச் சிறகுகளை விரிக்க வேண்டும்” என்று போகிற போக்கில் அண்ணா பொதுக்கூட்டத்தில் உதிர்த்த உரைகள் ஒப்பற்றவை.
“எண்ணாத் துறைகளிலெல்லாம் நாடி, எழில்படவே எடுத்துரைத்த எங்கள் அண்ணாத்துரைக்கு ஈடுன்றோ” என்று பாவேந்தர் ஒரு தொடரை ஓர் அணிந்துரையில் எழுதியிருந்தார்.

மக்களாட்சி என்பது தேர்தலில் வென்றவர்களையும், தேர்வெழுதி வந்தவர்களையும், தீர்ப்பு சொல்லி நிலைத்தவர்களும் என்ற மூன்று கால்களைக் கொண்ட முக்காலி போலத் தோன்றினாலும் நான்காவது காலாகச் செய்தித்தாள் உலகம் தான் சிறப்போடு திகழ்வது. நாளிதழ்களை எழுத்தெண்ணிப் படிப்பதும், தன்னுடைய பேச்சும், கருத்தும், தன்னுடைய ஒளிப்படமும் சரியாக வந்ததா என்பதை மிக நுணுக்கமாகக் கவனிக்கிற திறமை புரட்சித்தலைவரிடம் இருந்தது. காவல் துறையினர் நடத்திய ஒரு கூட்டத்தில், தான் அமர்ந்திருந்தபோது, மூன்றாவது இடத்தில் இருந்தவரை விலக்கிவிட்டு, கேமராக்காரர் தன் கோணத்தை முன்பக்கமாக மட்டுமே வளைந்து எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதைப் புகைப்பட நிபுணர்கள் பாராட்டிக் குறிப்பிடுவார்கள்.
நான், புதுத் தில்லியில், வானொலியில் பணியாற்றியபோது, ஒலிபரப்பில் விடியல் நிகழ்ச்சி காலை 5.45 மணிக்குத் தொடங்கும். ஆங்கிலச் செய்தி, 6.30 மணிக்குத் தொடங்கியதாக நினைவு. செய்தி வாசிப்பவர், மெல்வின் டிமெல்லோ என்ற பெயருடையவர். செய்தி உலகத்தின் சிகரமாகத் திகழ்ந்தவர். நேரு பெருமகனாருக்குப் பெரிதும் வேண்டியவர். காலை 5.55க்கு திடுமென்று நேரு அவர்களே வானொலி நிலையத்திற்கு வந்து டிமெல்லோவிடமிருந்து வாசிக்கும் செய்தித்தாளை வாங்கித் திருப்பியதைக் கண்டு நாங்கள் பெரிதும் வியந்தோம். அதே நிலையில், அ.இ.அ.தி.மு.க. இயக்கம் தொடங்கிய பிறகு, தென்னகம் இதழ், நடந்தபோதும், தம் சார்பான இதழ் தொடர்ந்தபோதும், ஒவ்வொரு முறையும் கேட்டுத் தெளிவடைந்து புரட்சித்தலைவர் திருத்தம் சொன்னதைப் பலர் கூறியிருக்கிறார்கள்.

செய்தியாளர்களுக்கு விருந்து தருவதும், தகவல்களைத் தெரிந்து கொள்வதும், அவருக்கு மிகவும் பிடித்தமான செயல்களாக இருந்தன.
“தந்தி வந்தால், அந்த நாளில் அச்சப்படுவோம். இப்போது தந்தி வந்தால்தான் நம் தளர்ச்சியே நீங்கும்” என்று ஒருமுறை குறிப்பிட்டார். அந்த வகையில், எளிமைக்கு இருக்கிற வலிமையைக் காட்டுவதற்காகவே பிறந்த நாளிதழ் தான் தினத்தந்தி.

அகரத்தில் அண்ணாவைத் தொடங்கினால், அடுத்த நெடிலாக அமைந்த பெயர் ஆதித்தனார் பெயராகும். பெருந்தகை ஆதித்தனார், இங்கிலாந்தில் பயின்றவர். உலகநாடுகள் பலவற்றை அறிந்தவர்.
நாளிதழ்கள் எப்படிக் கருத்துகளைச் சுருக்கென்று எடுத்துச் சொல்ல வேண்டும்; தேநீர் கடையில் நின்று கொண்டிருப்பவர் ஆர்வத்தோடு பக்கங்களைப் புரட்டுகிறபோது தன்னைச் சுற்றியும் நாட்டிலும் நடைபெறுவதைக் காட்ட வேண்டும் என்பதற்காக எளிமையாகத் தமிழை எடுத்துக்காட்டி நாளிதழ் வரலாற்றில் வைர மகுடத்தைத் தினத்தந்தி தனக்கென அணிந்திருக்கிறது.

பெருந்தகை ஆதித்தனார் மீது, பேரன்பு கொண்டவர் புரட்சித்தலைவர். ‘‘சினிமாவுக்குச் செல்வாக்கிருக்கிறது. சில நேரங்களில் சினிமாவுக்கே தினத்தந்திதான் செல்வாக்கைச் சேர்க்கிறது” என்று அண்ணல் சிவந்தியை அரவணைத்துக் கொண்டு புரட்சித்தலைவர் மகிழ்ந்து பேசியது நினைவுக்கு வருகிறது.
“ஆமாம் ஔவை, நீங்கள் கல்லூரியில் ஆசியராக இருந்தீர்களே, ஏன் பத்திரிகை ஆசிரியராகப் போகக்கூடாது? நான் ஒரு நாளிதழ் தொடங்கப்போகிறேன்” என்று ஒருமுறை புரட்சித் தலைவர் கேட்டார். அண்ணா, ஒரு கதை சொல்வார்கள் என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

“ஒரு பெரிய கோடீஸ்வரன், தன் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று பலமுறை முயன்றான். கிண்டிக்குப் போய்க் குதிரை மீது பணத்தைக் கட்டினான். கோடி பல கோடியாயிற்று. பிறகு போய் நூற்பாலைகளைத் தொடங்கினான். முதலீட்டைவிட முப்பது மடங்கு ஆதாயம் கிடைத்தது. என்ன செய்வது என்று பார்த்தான். ஒரு நாளிதழ் தொடங்குங்கள் என்று நண்பர்கள் சொன்னார்களாம். தொடங்கி, மூன்று மாதங்கள் நடத்தினான். தண்ணீராகக் கோடிகள் கரைந்தன. நாளிதழ் நின்றுவிட்டது” என்று சொன்னேன்.
“அப்படிச் சொல்லக்கூடாது. சென்னைக்கே புகழ் தருகிற வகையில், இந்து பத்திரிக்கையும், தினத்தந்தியும் இல்லையா?” என்றார் புரட்சித்தலைவர்.

திராவிட இயக்கத்தில், நூற்றுக்கணக்கான ஏடுகளைத் தொடங்கினார்கள். தொடர முடியாமல் நின்று விட்டன. இப்படிப் பார்த்தால், இதழ் நடத்துவது எவ்வளவு கடினம் என்று காணலாம்.
தில்லியில், ஒருமுறை செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு வந்தவர்களுக்குப் பதில் சொல்லி வந்தார். ஒரு நிருபர், புரட்சித்தலைவரைப் பார்த்து, நீங்கள் ஓர் ஆங்கில நாளிதழை நடத்துங்கள் என்று கூறினார். புரட்சித்தலைவர் புன்னகைத்தபடி, “இருக்கிற புகழைக் குறைக்கவா? அதிகப்படுத்தவா?” என்றார். பத்திரிகை என்பது அது ஒரு தனி அரசாங்கம் போல என்று கூறியது அப்போது ஆங்கில இதழ்களில் பெரிய எழுத்துகளில் செய்தியாக வெளிவந்தது.

இவ்வாறு, ஊடக உலகத்தின் நுணுக்கங்களையெல்லாம் தேர்ந்து தெளிந்தவராகப் புரட்சித்தலைவர் விளங்கினார். தான் விரும்பிப் படிக்கும் இதழ்களில் தலையங்கங்களைக் கூர்ந்து படித்துப் பிறரைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, உடனுக்குடன் மறுப்பு சொல்லவோ, விளக்கம் சொல்லவோ தயங்கமாட்டார்.

ஒரு வார இதழில், ‘வாழ்விக்கும்போது முதுமை தலைகாட்டுகிறது’ என்று எழுதியிருந்தார்கள். தொலைபேசியில் புரட்சித்தலைவர் சொன்னார். “அது முதுமை அல்ல, புதுமை” என்று மாற்றிவிடுங்கள் என்றார். இப்படிப் பொன்னான நினைவுகள் நினைக்க நினைக்க வந்து செல்கின்றன.
‘இதயம் பேசுகிறது’ மணியனோடு அவர் பேசிக்கொண்டிருந்தபோது, நண்பர் உதயமூர்த்தியும் இருந்தார். அப்போது, ஏன் மெயில் பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அதுபோல, ‘லிபரேட்டர்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி தொடங்கிய தாளும் நின்றுவிட்டது. உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டார். இரண்டு பேரும் வியந்தபடி பார்த்தார்கள். நான் அதுவரை சர். ஏ. இராமசாமி முதலியாரின் மகன், டாக்டர் கிருஷ்ணசாமி ‘லிபரேட்டர்’ என்ற தாள் தொடங்கி நடத்தியதை எப்போதே படித்திருந்தேன். புரட்சித்தலைவருடைய நினைவு எவ்வளவு படர்ந்தது என்பது மலைக்க வைக்கிறது. அதே நேரத்தில், திடுமென்று கலைஞர் இரவு பதினோறு மணிக்கு எங்கே இருப்பார் தெரியுமா? என்று கேட்டார். எல்லோரும் திடுக்கிட்டோம். முரசொலி அலுவலகத்தில் புரூஃப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி விழித்திருப்பதனால் தான் முரசொலி நாளிதழ் வெற்றி பெற்றது என்று சொன்னது மறக்க முடியாதது.

அந்த வகையில், அமைந்த ஓர் உரைதான் இங்கே இணைந்திருக்கிறது…

24.05.1987 அன்று சென்னையில் நடைபெற்ற தினத்தந்தியை நிறுவிய சி.பா. ஆதித்தனாரின் முழு உருவச்சிலையைத் திறந்து வைத்துப் புரட்சித் தலைவர் ஆற்றிய உரை…

‘‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே! என்னை வழி நடத்திச் செல்லும் பெரியோர்களே! என் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புக்களே!
மறைந்த பெரியவர் சி.பா.ஆதித்தனார் அவர்களுடைய சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆதித்தனார் அவர்களுடைய வாழ்க்கையே தமிழ் வாழ்க்கை ஆகும். இலண்டனில் படிக்கும் போதே தமிழ் ஏடுகளுக்கு நிருபராகப் பணியாற்றி வந்தார். நாட்டு விடுதலை இயக்கத்தை ஆதரித்தார். அப்போது ‘தமிழன்’ என்ற வார இதழ் தொடங்கினார். யுத்தக் காலம் ஆனதால், காகிதப் பஞ்சம் வாட்டியது. அப்போதே கையால் செய்த காகிதத்தில் ‘தமிழன்’ ஏட்டை வெளியிட்டார்.

பின்னர்த் தமிழில் நாளேடு தொடங்கினார். மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர நாளேடுகளை முதன் முதலாகத் தொடங்கியவர். எழுதப்படிக்கத் தெரியாத ஏழை மக்கள் எழுத்துக்கூட்டிப் படிக்கத்தக்க வகையில் எளிய தமிழில் ‘தினத்தந்தி’ பத்திரிகையை நடத்தினார்.
எந்த ஒரு செய்தி ஆனாலும் அதனைக் கதை போலச் சொல்வது என்ற வாடிக்கையை முதலில் கையாண்டவர், ஆதித்தனார்.

பல கல்வி நிலையங்களை விட ஆதித்தனார் நடத்திய பத்திரிகைகளால் எழுத்து அறிவு, படிப்பு அறிவு பெற்றவர்கள் ஏராளம். அவர் ஐம்பத்தி இரண்டாம் வருடத்தில் மேல் – சபை உறுப்பினராக இருந்தபோது, கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதைத் தடுக்கத் தனிநபர் மசோதா (சட்டம்) கொண்டு நிறைவேற்றினார்.

மொழிப் பிரச்சினையில் அறிஞர் அண்ணா எடுத்த முயற்சிகளுக்கு ஆதித்தனார் துணை நின்றார். தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டில் அரசியல் மாற்றம் நிகழ்ந்த நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு ‘தினத்தந்தி’ பத்திரிக்கை வாயிலாக முழு ஆதரவையும் அளித்தார். தமிழ்நாடு சட்டமன்றச் சபாநாயகராகத் திறமையாகச் செயலாற்றினார். அமைச்சராக இருந்து தனது நிருவாகத் திறமையைக் காட்டினார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்த பெருமை அவருக்கு உண்டு. ஆதித்தனார் அவர்கள் நிறுவிய ‘தினத்தந்தி’ நாளேடு அவருடைய சீரிய குறிக்கோள்களுக்காக இன்றும் பணி ஆற்றி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆதித்தனார் அமைத்த நிறுவனங்களை, அவரது புதல்வர் சிவந்தி ஆதித்தன் அவர்கள் கட்டிக்காத்து வருவதுடன் மெச்சத்தகுந்த வகையில் வளர்த்தும் வருகிறார். சிவந்தி ஆதித்தன் அவர்களுடைய தீவிர முயற்சியால் இன்று அவருடைய தந்தையின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது.
அமரர் ஆதித்தனாருடைய இந்தச் சிலை நமக்கு எல்லாம் உழைப்பையும், தமிழ்ப் பற்றையும் நினைவூட்டிக்கொண்டு இருக்கும் என்று நம்புகிறேன். இந்த விழாவுக்கு என்னை அழைத்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆதித்தனாரின் நினைவுக்கு என் அஞ்சலியைச் செலுத்தி, அவருடைய உருவச் சிலையை மகிழ்ச்சியுடன் திறந்து வைக்கிறேன். இன்று முதல் ஆரிஸ் சாலை ஆதித்தனார் சாலை என்று அழைக்கப்படும். அண்ணா நாமம் வாழ்க!”
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன்,
தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *