சஞ்சீவி மாமலை சாய்ந்தது!
==========================
புகழ் வாய்ந்த துணைவேந்தரும் அருமை மருத்துவ ஆற்றல் அரசருமாகத் திகழ்ந்த டாக்டர் எம்.ஜி.எம். மறைவு தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது.
மருத்துவத்திலகமாகவும், பல்வேறு உயர்நிலைகளில் புகழ்பட வாழ்ந்த டாக்டர் எம்.ஜி.முத்துகுமாரசாமி அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரிக்கும் தலைவராகத் திகழ்ந்தார்.
அன்பும், பரிவும் பெருக மாணவர்களை அரவணைத்ததோடு தமிழினத்தின் பெருமையைத் தரணியெங்கும் நம் மருத்துவர்கள் சென்று பெருக்க வேண்டும் என்று பேரார்வம் காட்டினார்.
தமிழார்வம் ததும்ப வாழ்ந்த பெருந்தகையைக் கடந்த ஓராண்டாக நான் கண்டு பேசவில்லை. என் மனம் அவரை அவ்வப்போது நினைத்துக்கொண்டிருந்தது. நிறை குலையாத மலை, சாய்ந்துவிட்டதே என்று மனம் உருகுகின்றேன்.
ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் என் அருமை மகனும்-மருமகளும் ஆகிய கண்ணன்-சாந்தி இருவரும் தங்கள் மனத்துயரத்தை என்னிடம் பேசி ஆறுதல் பெற்றனர்.
என் மகன் அருளும் டாக்டர் எம்.ஜி.எம். மகனும் கிருத்துவ மேனிலைப்பள்ளியில் ஒன்றாகப் படித்துப் பழகியவர்கள்.
….. முனைவர் ஔவை நடராசன்

Add a Comment