தின செய்தி நாளிதழில் இன்று (10.08.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்
(பகுதி – 47)
கண்ணீர் வெள்ளமும் கவிதை உள்ளமும்
முனைவர் ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழகத்தில் மாபெரும் அளவில் வெள்ளம் சூழ்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களும் வெள்ளக் காடாகவே காட்சி தந்தது. அந்நேரத்தில் புரட்சித் தலைவர் முதலமைச்சராக ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காலமது. தன்னால் இயன்றவரை தன் ஆட்சியாளர்களை அருகில் வைத்துக் கொண்டு தக்க உதவிகளை, காப்புப் பணிகளை உடனுக்குடன் விரைந்து அவர் செய்து வந்த அந்த மாபெரும் தொண்டுப் பணியைக் கண்டு தமிழக மக்களே பெருமிதமடைந்தனர். மத்திய அரசு நாள்தோறும் மாண்புமிகு முதலமைச்சருடன் உரையாடி தக்க உதவிகளையும் செய்தது.
12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் வெள்ளக் கொடுமைகள் பற்றி அந்நாளைய புலவர் பெருமக்கள் பலர் பல்வேறு பாடல்களை இந்தக் கோரப் புயலை தலைப்பாக மனத்தில் வைத்து படைத்தார்கள். அந்தப் பாடல்களையெல்லாம் ஒருமுறை என்னை பார்க்கச் சொல்லி சில பாடல்களை தெரிவு செய்து அந்நாளைய செந்தமிழ்ச் செல்வி இலக்கிய இதழில் வெளியிடுவதற்கு ஆவன செய்தேன். கோரப் புயலின் பாடல்களின் உருக்கத்தையும் கலக்கத்தையும் படித்தீர்களென்றாலே அந்த கொடும் புயல், தாண்டவப் புயலின் கொடுமைகளை நீங்கள் நன்குணர்வீர்கள்.
முதல் பாடலை எழுதியவர் அந்நாளைய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத் துறையின் இயக்குநர் பெருந்தகை பேரறிஞர் தேவநேயப் பாவாணர் ஆவார்.
வெள்ளச் சேத விளரி
———————————–
[ஞா. தேவநேயப் பாவாணர் ]———————————————–
எத்தனை வெள்ள மோநாம் இதுவரை கதையிற் கேட்டோம்
இத்தனை கொடுமை யாக எவருமே கண்ட தில்லை
அத்தனார் கோயி லுள்ளும் அனைவரும் நசுங்கிச் சாகப்
பித்தமா வெறியின் வேகம் பிடித்தது, காற்றுப் பூதம்.
வெள்ளமென்றறிவிப்பின்றி, வீட்டினுள் உறங்கும் வேளை
கொள்ளையர் வருதல் போலக் கூடிய இரண்டு பூதம்
பொள்ளெனக் கேடு செய்யப் பொடித்தன பணிச்சா லைகள்
நள்ளிர வன்றே நாகை நத்தப்பா ழாயிற் றந்தோ !
கண்ணினுக் கெட்டு மட்டும் கண்டது வெள்ளக் காடு
மண்ணியல் ஊர்தி யொன்றும் மற்றவூர் சென்ற தில்லை
உண்ணவோர் உணவு மில்லை உரைக்கவோர் வழியு மில்லை
விண்ணவர் உதவி போலூண் வீழ்ந்தது, மூன்றாம் நாளே.
தமிழ் நிலந் தலையாஞ் சென்னை தாவியே, தெலுங்க நாட்டில்
இமிழ்கடல் எரியுந் தோன்ற எழுமலை யலைக ளாலே
அமிழ்கரை யூர்கள் மாய்ந் தார் ஆயிரம் பத்தோடைந்தும்
குமிழ் நுரை வெள்ளம் வந்து குடிகொண்ட தூர்க ளெல்லாம்.
ஆருயிர னைய என்றன் அன்பனை யிழந்தேன் என்பார்
கார்பணி கற்பின் செல்வக் கண்ணகி யிழந்தேன் என்பார்
சீரிய அறிவு வாய்ந்த சேயரை இழந்தேன் என்பார்
ஊரினில் உள்ள எல்லா உறவையும் இழந்தேன் என் பார்.
இரவிலே தந்தை தாயை இழந்தபிள் ளைகள் காலை
அருவிபோற் கண்ணீர் சிந்தி அம்மையப் பனையே கூவி
வெருவியே யழுது தேம்பி வெந் தழல் மெழுகு போல
உருகியுள் வெந்த கோலம் உள்ளுவார் குலையும் வேகும்.
அருந்த லாய் விற்ற காலை அரும்பெரும் பாடு பட்டு ‘
வருந்தியே தேடிப் பெற்ற வளம்படு பொருளும் வீடும்
பருந்தடி குஞ்சு போலப் பசக்கென மறைந்து போக
இருந்துபின் அழுது நைந்தார் எத்தனை பேர்க ளம்மா !
அரசனே கொடுமை செய்யின் ஆரிடம் சொல்வ தென்பர்
பரசுறு கடவுள் காப்பும் பறந்திடின் நாமென் செய்வாம்
துருசினில் மாயும் மக்களின் தொல்லைகள் தீரும் வண்ணம்
கரிசொடு செருக்கொ ழிந்து காவல்பூண் அமைச்சர் ஆள்க.
பெருங்கவிஞரும், நாடக ஆசிரியரும், புரட்சித் தலைவரை மிகவும் கவர்ந்த உரையாசிரியருமான கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியன் படைத்தப் பாடலை பதிவு செய்துள்ளேன்.
கோரப் புயலே!
==============
(கவிஞர் புத்தனேரி ரா.சுப்பிரமணியம்)
====================================
கோரப் புயலே! – கொலை
காரப் பயலே!
கோடிக் கணக்கில் சேதம்விளைத்த
கொடுமையும் ஏனோ? – நீ
கூற்றுவன் தானோ?
நாகப்பட்டினம் கரையைத் தாக்கி
நாட்டில் புகுந்தாயே!
நன்செய் புன்செய் தோப்பும் துரவும்
நாசம் செய்தாயே!
வேகத் தாலே கடலும் குமுறி
விண்ணும் கொட்டியதே!
வெள்ளம் புரண்டு பிரளயம் போலே
வேதனை முட்டியதே!
உன்வெறி யாட்டம் எத்தனை எத்தனை
உயிரைக் குடித்ததுவே!
வன்முறை யாலே மக்களை வதைக்கும்
வஞ்சகம் ஏன் கொண்டாய்?
அந்தக் காலம் லெமூரி யாவை
ஆழியும் விழுங்கியதே! – அந்த
அவலத் தாலே செந் தமிழ் நாட்டின்
அளவும் சுருங்கியதே!
மாபெரும் எழுத்தாளர் திரு.நாரண துரைக்கண்ணன் அவர்கள் உணர்வு பூர்வமாக எழுதிய பாடலையும் இணைத்துள்ளேன்.
அறந் தானோ ? இறைவா!
=============================
(நாரண – துரைக்கண்ணன்)
////////////////////////////////////////////////////////////
ஐயகோ! என்ன சொல்வேன் ?
ஆற்றொணாக் கொடுமை! அந்தோ !
பையவே சுழன்ற காற்று
புயலாக மாறி நம்மைக்
கையறவு கொள்ள வைத்த
கொடுமையைக் கூறப் போமோ?
வையத்தில் விளைந்த பச்சைப்
பயிரெலாம் பாழாய்ப் போச்சே !
‘வான் மழை அமிழ்த’ மென்றே
வள்ளுவர் குறளில் சொன்னார்;
தேன்துளி போன்று வானம்
சொரியாது புயலாய் மாறின்,
நாற்றிசை நடுங்கி நிற்கும்;
நஞ்சாகி நாசஞ் செய்யும்;
மாண்பயன் கெட்டே போகும்;
மக்களும் மாண்டு போவார்.
இருநாட்டில் இதுதான் கண்டோம் ;
என் னன்ன கொடுமை கேட்டோம்?
தருநிகர் தஞ்சை, நாகை,
தென் திசை முற்று மாகப்
பெரும்புயல் காற்று வீசிப்
பல்பொருள் நாச மாக்கிக்
கருங்கடல் போல நஞ்சைக்
கொட்டியே கெடுத்தது; அம்மா!
பெய்துமே கெடுக்கும் வானம் ;
பெய்யாதுங் கெடுக்கும் என்பார்;
கொய்கதிர் சூறைக் காற்றில்
கொத்தாகக் கொட்டிப் போச்சே!
மெய்யாக மழைதான் இன்று
மேதினி குலுங்க வைத்து
நைவித்த துயிர்கள் தம்மை;
நாசமே பலவாய் ஆச்சே!
கவிஞர் அரு.சோமசுந்தரன் அவர்கள் உணர்வுக் குவியலாக பாமாலை படைத்ததையும் இணைத்துள்ளேன்.
மடப்புயல்
==========
(கவிஞர் அரு. சோமசுந்தரன்]
———————————————–
பல்லாண்டாய் மழையின் றிப் பரிதவித்த
பாரதத்தின் தென்பகுதி மக்க ளுக்குச்
சொல்லாமல் இருமாதம் பெய்து கெட்டுச்
சொத்தெல்லாம் அரித்ததுடன் சூறை யாடிக்
கொல்லாமல் கொன்றதெலாம் நவம்பர் மாதம்
கொட்டாத மழையெல்லாம் கொட்டித் தீர்த் தாய் !
வில்லாக இரும்பெல்லாம் வளைத்து விட்டாய்
வீடெல்லாம் மேடாக விளைத்து விட்டாய்.
கடல் நாகை எனஎண்ணிப் புகழ்ந்த மண்ணைக்
கண்மூடித் திறவாமுன் மிதக்க வைத்துத்
திடமான வீடெல்லாம் நொறுக்கி விட்டுத்
தெருவெல்லாம் பிணக்காடாய் மாற்றி மண்ணை
முடமாக்கும் மடப்புயலே! வங்க மென்னும்
முத்தான கடலுக்குள் தோன்றி இங்கே
இடம்பிடிக்க வந்தாயோ ? மழையைக் கொட்டி
இடி இடிக்க வந்தாயோ ? எதற்கு வந்தாய் ?
பாலாற்றில் பேருந்து வீழ்ந்த தாலே
பலபேரின் உயிர் கொண்டாய் ; வேடசெந்தூர்
நாலாறு திசைவீழக் குடக னாற்றின்
நாற்கோடி அணைபேர்த்துப் பலரைக் கொன்றாய்
சேலாறு காவிரியும் சீரங் கத்தில்
சேராத கொள்ளிடமும் சேர்த்து வைத்தாய்
கோளாறு புயலாகி வருவ துண்டு
கூற்றாகி மண்ணெல்லாம் குடிப்ப துண்டோ !
சாலை யெலாம் உடைத்ததனால் போக்கு மில்லை
சலசலக்கும் வெள்ளத்தால் வரத்து மில்லை
ஆளை யெலாம் கொன்றதனால் மூச்சு மில்லை
அடைமழையாய் நின்றதனால் பேச்சு மில்லை
காளை முதல் கோழிவரை மிதக்க விட்டாய்
கட்டடங்கள் குடிசையெலாம் பறக்க விட்டாய்
பாளைவிடும் தோப்பெல்லாம் பலியா டாக்கிப்
பயிர் விளையும் நிலமெல்லாம் மண்மே டாக்கி.
எளியோரின் உயிர்குடித்தாய் தமிழர் நாட்டில்
இருநூறு கோடிக்குச் செலவு வைத்தாய்
வளியாக வந்தெம்மை வதைத்த தோடு
வங்கத்தில் மறுபுயலாய் வடிவெ டுத்துச்
சுழியாகிச் சூறையென ஆந்தி ரத்தில்
சுற்றுலா மேற்கொண்டு குண்டூர், கிருஷ்ணா
வழியான மாவட்டம் விரைய மாக
வெறியாட்டம் போட்டதெல்லாம் வெற்றி தானா?
கண்ணான தென்னாட்டைச் சாடு தற்கே
கடலோடும் முகிலோடும் கைகள் கோத்துப்
பண்ணான இடிபேச மின்னல் கூசப்
படையெடுத்து வந்தகடும் புயலே ! எங்கள்
புண்ணான நெஞ்சத்தால் பாடு கின்றோம்
புயலே நீ வாராதே ! பொறுமை பூண்டு
மண்ணான தனுக்கோடி பூம்பு காரை
மறவாமல் எண்ணிக்கொள் மறைந்தே போ போ !
அதேபோல், கவிஞர் கோ.வே.பெருமாள் அவர்கள் இயற்றிய பாடலையும் இணைத்துள்ளேன்.
வழங்கிடுவோம், வருவீரே !
============================
(கோ. வே. பெருமாள்]
======================
தேனூறும் ஆறுபல செழிப்பூட்டும் தென்னாடு,
வானூறும் கதிர்மதியம் வயங்குகின்ற பொன்னாடே!
இணனூறும் உழைப்பினையே உன்னுகின்ற இந்நாடு,
கானூறும் கவின்செல்வம் கனிவிக்கும் நம்நாடே!
இன்னமுதத் தமிழகத்தே ஏர்தஞ்சை திருச்சியிலே,
என்னென்போம்? முன்பொருகால், இருபத்தைந் தாண்டுகள்முன்
பன்னியவா யிரத்துத்தொள் ளாயிரத்தைம் பத்திரண்டில்,
மின்னுங்கார்த் திகைத்திங்கள் மிக்கபுயல் தாக்கியதே!
வங்கப்புயல் இப்போதும், வந்திருமுறை சூறையாகி,
அங்கங்கே மழைவெளத்தால், அது நிலைமை தந்ததுவே!
மங்காத ஆந்திரமும் மலையாளம் கன்னடமும்
எங்குமிலா இத்துயர்க்கே இலக்காகி நொந்தனவே!
மாட்டைக் கன்றினை மனிதரைமிக
வாட்ட வந்ததிப் புயலடா !- காலன்
காட்ட வந்ததிச் செயலடா!
உள்ளங் காடெனத் துயரம் மண்டிட
வெள்ளக் காடென் மாறியே-கெட
வீறு புயலது சீறியே !
கொள்ளை கொண்டது வளமும் உயிர்க்குலக்
கொத்த ழிந்திடச் செய்ததே – அழிவுக்
கூத்து மழையெனப் பெய்ததே !
மாலைமாலையாய் மனிதர் கண்களும்
வற்றி டா தகண் ணீருமே-வடிக்க
வாழ்வு கெட்டதைக் கூறுமே !
காலப் புயலுடன் ஓலமிடுமழை
கனத்த தீனியைத் தந்த தாய்-கொடுங்
கழுகுக் கூட்டமும் வந்ததே !
வீழ்ந்த பிணமலை அழுகி நாறிட
விரைந்து போயின கழுகெலாம்-கொத்த
விண்ப றந்தன பொழுதெலாம் !
வாழ்ந்த மானிட வாழ்வு தானொரு
மாயக் கன வென லானதே -உயிர்
மாயக் கன வென லானதே !
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
… ஔவை நடராசன்
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Add a Comment