தின செய்தி 21.09.2020
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 53)
“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி!”
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
என் இனிய நண்பர், நாகை தருமனையும், புரட்சித் தலைவரின் நெருங்கிய தொண்டராகவும், புரட்சித் தலைவரின் திரைப்படக் கதை வசனத் துறையின் துணையாசிரிராகவும், ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு துணைக் கதையாசிரியராக கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து பணியாற்றியவரும், புரட்சித் தலைவரின் ‘கலையரசி’, ‘பாக்தாத் திருடன்’ ஆகிய திரைப்படங்களின் கதையாசிரியராகவும் பணியாற்றியவருமான நாகூர் கே. இரவீந்திரனையும் கொண்டு, 1992-ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மண்டபத்தில் வாரந்தோறும் திருமலை நாயக்கர் மன்னரைப் பற்றிய ஒலிஒளிக் காட்சி சிறப்பாக நடைபெறுவதைப்போல, புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு சிறப்பான ஒலிஒளிக் காட்சி நடத்தத் திட்டமிட்டார். அதற்காக புரட்சித் தலைவரை முழுமையாக அறிந்த இவர்கள் இருவரையும், ஒலிஒளிக் காட்சியை எழுதித் தருமாறு ஆணையிட்டார். அவ்வாணைக்கிணங்க காட்சித் தொடரை எழுதிக் கொண்டிருந்த வேளையிலேயே திரு.கே. இரவீந்திரன் மறைந்து விட்டார். ஏனோ சில காரணங்களால், ஒலிஒளிக்காட்சி நடைபெறாமலேயே போய் விட்டது. நாகை தருமன் கைப்பட எழுதிய காட்சித் தொடர் தினசெய்தி வாசகர்களின் பார்வைக்கு.
தொடக்கம்
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
(குறள் – 72)
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சித்தன்
மெய்வருத்தக் கூலிதரும்.”
(குறள் – 619)
வள்ளுவன் தந்தத் தெள்ளுதமிழ்க்குறட்பா
ஒலிக்கிறது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பத்மாசனம்
போட்டு அமர்ந்திருக்கின்றார்.
(பல்லாண்டு வாழ்க படக்காட்சி, பாடல்காட்சி)
• தந்தை பெரியார் உருவச்சிலை திறப்பு-
அண்ணா மேம்பாலம் அருகில், திரு. பாபு ஜெகஜீவன்ராம் அருகில் எம்.ஜி.ஆர்.
தந்தை பெரியார் குரல்:-
எம்.ஜி.ஆருக்குப்பாராட்டு! (பெரியார் சிலை)
“எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பெரிய மனசு. என் மேலே ரொம்பப் பிரியம், ஏழைகளுக்கு உதவும் கருணை உள்ளம் கொண்டவர்”.
• பேரறிஞர் அண்ணா சிலை திறப்பு
டாக்டர் ஏ. ராமசாமி முதலியாருடன் எம்.ஜி.ஆர்.
பேரறிஞர் அண்ணாவின் குரல்:-
எம்.ஜி.ஆருக்குப் புகழ்மாலை!
“எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பை நாடறியும்.
எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகக் கருதப்படும். உண்மைதானே! எம்.ஜி.ஆர் என்றால் அவர் தாங்கியுள்ள கொள்கை எதுவென்பதை நாடு அறியும். முல்லைக்கு மணம் உண்டென்பதைக் கூறவா வேண்டும்? இந்தக் கனி நாங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தனர். என் மடியில் வந்து விழுந்தது. என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்.”
• மூதறிஞர் இராஜாஜி சந்திப்பு- (இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள்.)
இராஜாஜி குரல்:-
“தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.
அவரை அப்படியே விட்டு விடாதீர்கள்.
அர்ச்சுனனைப் போல் வெற்றி வீரர் ஆக்குங்கள்”
• (முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியுடன் எம்.ஜி.ஆர் காட்சியளிக்கும் படங்கள்)
(உலகத்தலைவர்கள், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ள மேதைகளுடன் எம்.ஜி.ஆர் உள்ள புகைப்படங்கள்)
(மக்களிடம் கருணை உள்ளம் கொண்ட மகத்தான தலைவர் என்பதை வெளிப்படுத்தும் படங்கள்)
(மழைக்கோட்டு வழங்கியது….. ஏழைகளுக்கு உணவளிப்பது…. முதியோர்…… குழந்தைகளிடம் உண்மையான பரிவு காட்டும் படங்கள்)
(மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குத் தங்க வாள் வழங்கியது, பாராட்டு, பரிசளிப்பு முதலிய படங்கள்)
இவைகளின் மீது பெயர் பட்டியல் (title) காண்பிக்கப்படுகின்றது.
படத்தின் தொடக்கக் காட்சி
திருக்கோயில்கள் விண்ணைத் தொட்டபடி உயர்ந்து நிற்கின்றன. ஆலயமணி ஓசை எங்கும் எதிரொலிக்கின்றது. பறவைகள் அங்குமிங்கும் பறக்கின்றன.
கிருத்தவ மாதா கோவில் மணியோசை
‘பரம மண்டலத்திலிருக்குக்
எங்கள் பிதாவே…’
பிரார்த்தனை!
இசுலாமிய மசூதி: தொழுகை
“லா இல்லா இல்லல்லா
முகமது ச்சூலில்லா…’ என்று
நமாஸ் ஓதப்படுகின்றது. சென்னை, அப்போலோ மருத்துவமனை வெளியில் கார்கள் வந்து நிற்கின்றன. உள்ளேயும், வெளியேயும் பரபரப்பு டாக்டர்கள் வேகமாக நடந்து செல்கின்றனர். வெளியில்கண்ணீரும் கம்பலையுமாகப் பெண்கள் சிலரும், கவலையுடன் ஒரு இளைஞனும் நிற்கின்றனர். மருத்துவமனையிலிருந்து வெளியே வருகின்ற ஒருவரைத் தடுத்து நிறுத்துகின்றனர். அய்யா.. தலைவரு எப்படி இருக்காரு? நல்ல சேதி சொல்லுங்க அய்யா! எங்க ஆயுசையெல்லாம் எடுத்துக்கிட்டு அந்த மகராசன் நல்லா இருக்கனும்.” என்கின்றான் ஒரு தாய்.
தொலைபேசியில் ஒரு நிருபர் செய்தியைக் கூறுகிறார்.
“M.G.R Born at Kandi.
Learnt at Kumbakonam”.
இன்னொரு நிருபர் கூறுகிறார்,
“முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1917 ஆம் ஆண்டு, சனவரி மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். நாடாளப் பிறந்த அவர், இரேவதி நட்சத்திரத்திற்கு உரியவர். எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு அண்ணன்மாரும் உடன் பிறந்தவர்கள். மூத்த அக்காள் பெயர் காமாட்சி, அடுத்துப் பிறந்த மூத்த அண்ணன் பாலகிருஷ்ணன். மூன்றாவதாகப் பிறந்த சகோதரி சுமித்ரா. நான்காவதாகச் சக்ரபாணியும் அடுத்து எம்.ஜி.ஆரும் பிறந்தனர். பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் கோபாலனும், சத்யபாமாவும் வாழ்ந்த போதே இறந்துவிட்டனர்”.
எம்.ஜி.ஆர் தந்தை திரு. கோபாலன் கண்டியில் மாஜிஸ்திரேட்டாகவும், கல்லூரி முதல்வராகவும் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆருக்கு இரண்டு வயதாகும் போது பெற்றோர் திரும்பினர் தாயகத்திற்கு! உறவினர் உதவி புரியாத நிலையில் தந்தை கோபாலன் மரணமடைந்தார். மனம் வெதும்பிய சத்தியபாமா கணவரை இழந்த நிலையில், தன் உறவினர்கள் சிலர் முன்னதாகவே கும்பகோணத்தில் இருந்ததால் அங்கே செல்கிறார். வேலு நாயர், நாராயண நாயர் ஆகிய இருவரும் சத்யபாமா குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தனர். சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் குடந்தையில் ஆனையடி பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படிக்கின்றனர். அதற்கு மேல் படிப்பைத் தொடரக் குடும்ப வசதி இடம் கொடுக்கவில்லை. பள்ளியில் கல்வி பயிலும் போதே முதன் முதலில் ‘லவகுசா’ நாடகத்தில் லவனாக நடித்தல். (ராமன் பெயர் கொண்டவர் அவன் மகன் வேடத்தில் முதலில் நடித்தார்). பள்ளியில் மாணவர்களுக்காக வாதாடி, வகுப்புக்கு மாணவர்த் தலைவராதல். தண்ணீர்ப் பானைத் தகராறு சம்பவம்.
மீள்பார்வை
நாடகத்தைக் கண்டு ரசித்தவர்கள் எழுப்பும் ஆரவாரம் கரவொலி! சத்யபாமா அம்மையார் அடுத்த வீட்டு வாசலில் நிற்கிறார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு முறத்தில் அரிசி நொய் கொண்டு வந்து போடுகிறார். முந்தானையில் அதனை ஏந்தியபடி மறைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். இதனை எம்.ஜி.ஆர் கவனித்துக் கொண்டிருக்கிறார். அன்னை சத்தியா நொய் அரிசியைக் களைந்து, கஞ்சி காய்ச்சிக் கொண்டு வருகிறார். பிள்ளைகள் இருவருக்கும் கொடுத்துவிட்டு, தான் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிப் பருகுகிறார். எம்.ஜி.ஆர் இதனைக் கூர்ந்து கவனிக்கின்றார். அவர் கண்கள் கலங்குகின்றன.
“ராமு….. சக்கு….. வயிறு நிறைஞ்சுதா……? தாய் கேட்கிறார்.
“எங்க வயிறு நிறைஞ்சுதம்மா……!
எங்களைப் பெத்த வயிறு காயுதே…!”
எம்.ஜி.ஆர் கண்கள் கலங்குகின்றன. அன்னை சத்யா கண்ணீர் விட்டபடி வாரி அணைத்துக் கொள்கிறார். நாராயணன் நாயர் உள்ளே நுழைகிறார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆர், சக்ரபாணியைச் சேர்க்கலாம். என்று யோசனை. அன்னை சத்யா கலக்கம். நாடகக் கம்பெனியில் சிறுவயதில் சேருகிறார். முதன்முதலில், ‘மகாபாரதம்’ நாடகத்தில் அர்ச்சுனன் வேடத்தில் ‘அபிமன்யு” படத்தில் நடித்தார்.
கலையுலகிலும், அரசியலிலும் அர்ச்சுனனாக பல வியூகங்களைத் தகர்த்துத் தன்னிகரற்று விளங்கினார்.
(துரோணர் வில்வித்தை. அர்ச்சுனன் அம்பு எய்தல். கனி மட்டும் தெரிவதாகக் கூறுவது கனி விடுவது)
நாடகக் கம்பெனியில் 4½ ரூபாய் சம்பளம். ‘சத்தியவான் சாவித்திரி” போன்ற பல நாடகங்களில் நடித்தார். அன்னை சத்யா தன் இரு பிள்ளைகளையும் நாடகப் பேராசிரியர், எம். கந்தசாமி முதலியாரிடம் (நடிகை எம்.கே. ராதா தந்தையார்) ஒப்படைக்கிறார். “எனக்கு இதுவரை ஒரே பிள்ளைதான். இனிமேல் மூன்று பிள்ளைகள்” என்கிறார்.
நாடக மேடையில் உடற்பயிற்சி, நடனம், பாடல், குஸ்தி முதலியவை கற்றுக் கொடுக்கப்படுதல். நடிக்கத் தொடங்குகிறார். எதிர்வீட்டு பெண் காதல். தினந்தோறும் தண்ணீர் எடுப்பதற்கும், குழாய் பக்கம் வந்து அந்தப் பெண் நிற்பார். தண்ணீர் எடுக்கின்ற சாக்கில் ஜன்னல் வழியாக எம்.ஜி.ஆரைப் பார்ப்பார். அந்தப் பெண் வருகின்ற நேரத்தில் எம்.ஜி.ஆர் ஜன்னல் அருகில் அமர்ந்து கொள்வார். ஒரு ஆர்மோனியப் பெட்டியை வைத்துக் கொண்டு உச்ச ஸ்தாயியில் பாடுவார். பாட்டு சாதகம் செய்வது போல் பாவனை!
(காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே………… பாடல் காட்சி)
அன்னை சத்யா ஒருமுறை பார்க்கிறார். மறுமுறை அந்தப் பெண்ணையும் கவனித்து உண்மையை அறிகிறார். ஒரு நாள் குடம் நிறையத் தண்ணீர் கொண்டு வந்து எம்.ஜி.ஆர் தலையில் கொட்டுகிறார். “படவா…… பாடுவேடா பாடுவே…! காதலா?” என்று சிரிக்கிறார். எம்.ஜி.ஆர் நாணத்தோடு எழுந்து போகிறார்.
1938: மூத்த மகன் சக்ரபாணியிடம் பேசி, எம்.ஜி.ஆருக்குத் திருமணம் உரிய பருவத்தில் செய்ய முடிவெடுக்கிறார். அவர் பாலக்காடு-ஒலவக்கோடு செல்கிறார். தாய்க்கு உடல்நலமில்லை என்று ஊருக்கு எம்.ஜி.ஆர் செல்கிறார். தாய் வற்புறுத்தலின் பேரில் பார்கவி (தங்கமணி) திருமணம். கதராடை அணிவேன் என்று எம்.ஜி.ஆர் பிடிவாதம். திருமணத்திற்குப் பின்பு மனைவி மீது அன்பு. இரண்டாம் உலகப் போர் காரணமாகச் சென்னை நகரை விட்டுச் செல்கின்றனர் பலர். அன்னை சத்யா மருமகள்களையும், பேரக்குழந்தைகளையும் அனுப்பி வைக்கிறார் பாலக்காட்டுக்கு. கணவரைப் பிரிந்து செல்ல மனமின்றி (பார்கவி) தங்கமணி கண்ணீர்.
கணவரைப் பிரிந்து சென்ற தங்கமணி இரண்டு மாதங்களில் மாரடைப்பினால் காலமானார். விரைந்து சென்ற எம்.ஜி.ஆர் தன் மனைவியின் உடலைக் கூடக் கடைசி முறையாகப் பார்க்க முடியவில்லை. மனம் வெறுத்து ஒலவக்கோட்டில் இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயற்சி. சக்ரபாணி தடுத்து விட்டார். (முதல் தடவை தற்கொலை செய்ய முயன்றது வீட்டுப் பீரோவில் மதுபாட்டில் இருப்பதைக் கண்டு, தாயுடன் சண்டையிட்டுக் கடற்கரை சென்றது.)
1947: ஜூபிடர் பிக்சர்ஸ் ‘ராஜகுமாரி’ திரைப்படம் வெளிவந்தது. அப்போது தான் ‘சந்திரலேகா’ படம் இந்தியா முழுதும் திரையிடப்பட்டது. பி.யு. சின்னப்பா, எம்.கே.டி . பாகவதர், கே.ஆர்.ஆர், டி.ஆர்.ஆர், எம்.கே.ராதா, ரஞ்சன் போன்றோர் புகழ்பெற்ற நடிகர்கள் முன்னணியில் இருந்த போது முதன் முதலில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘ராஜகுமாரி’ போட்டி போட்டு ஓடி, வெற்றி பெற்றது. கதாநாயகனாக நடித்த பின்பும், இரண்டாவது கதாநாயகன் வேடங்களில் அபிமன்யு, ராஜமுக்தி, ரத்னகுமார், மோகினி போன்ற படங்களில் நடித்தார்.
திரைப்படங்களின் அணிவகுப்பு.
1951-ல் மர்மயோகி வெளிவந்து. ‘ சர்வாதிகாரி’ ‘ அந்தமான் கைதி’ என் தங்கை, ‘குமாரி’, நாம், ‘ ஜெனோவா’ திரைப்படங்கள் வந்தன.
1953: அன்னை சத்யா மரணம்
அன்னை வாழ்ந்து மறைந்த இலாயிட்ச் சாலை வீட்டை அவர் விரும்பியபடி வாங்கினார். எம்.ஜி.ஆர்! ‘சத்யா இல்லம்’ என்று பெயரிட்டார்.
‘மலைக்கள்ளன்’ மகத்தான வெற்றி! நாடோடி மன்னன் படம் தயாரிப்பு-வெளியீடு. பேரறிஞர் அண்ணாவின் இயக்கக் கொடியைப் படத்தின் தொடக்கத்தில் நிறுவன அடையாளமாகக் காண்பித்த இயக்கப்பற்று! மலைக்கள்ளன் படத்திற்கு 1954 இந்திய அரசு வெள்ளிப்பதக்கம் பரிசு!
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment