POST: 2020-10-05T11:30:26+05:30

தின செய்தி _ 05.10.2020

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 55)

“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (III)”

முனைவர் ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

என் இனிய நண்பர், நாகை தருமனையும், புரட்சித் தலைவரின் நெருங்கிய தொண்டராகவும், புரட்சித் தலைவரின் திரைப்படக் கதை வசனத் துறையின் துணையாசிரிராகவும், ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு துணைக் கதையாசிரியராக கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து பணியாற்றியவரும், புரட்சித் தலைவரின் ‘கலையரசி’, ‘பாக்தாத் திருடன்’ ஆகிய திரைப்படங்களின் கதையாசிரியராகவும் பணியாற்றியவருமான நாகூர் கே. இரவீந்திரனையும் கொண்டு, 1992-ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மண்டபத்தில் வாரந்தோறும் திருமலை நாயக்கர் மன்னரைப் பற்றிய ஒலிஒளிக் காட்சி சிறப்பாக நடைபெறுவதைப்போல, புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு சிறப்பான ஒலிஒளிக் காட்சி நடத்தத் திட்டமிட்டார். அதற்காக புரட்சித் தலைவரை முழுமையாக அறிந்த இவர்கள் இருவரையும், ஒலிஒளிக் காட்சியை எழுதித் தருமாறு ஆணையிட்டார். அவ்வாணைக்கிணங்க காட்சித் தொடரை எழுதிக் கொண்டிருந்த வேளையிலேயே கே. இரவீந்திரன் மறைந்து விட்டார். ஏனோ சில காரணங்களால், ஒலிஒளிக்காட்சி நடைபெறாமலேயே போய் விட்டது. நாகை தருமன் கைப்பட எழுதிய காட்சித் தொடர் தினசெய்தி வாசகர்களின் பார்வைக்கு.

காட்சி

தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

-அல்லது-

புரட்சித்தலைவர் முதல்வரானதும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசுவதுபோல் காட்சி… பேட்டி!

பத்திரிக்கையாளர்: முதலமைச்சராகத் தமிழகம் தங்களைக் கண்டு அகமகிழ்கின்றது. பத்திரிக்கையாளர்கள் சார்பில் எங்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல்வர்: எங்களுக்கும்… மக்களுக்குமிடையில் நல்லுறவுப் பாலமாகத் திகழும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி! எங்கள் வெற்றியிலும், இனி நாங்கள் செய்ய நினைக்கின்ற அரிய பணிகளிலும் உங்களுக்கும் பங்குண்டு.

பத்திரிக்கையாளர்: ஒரு இயக்கத்தைத் தொடங்கி, 56 மாதங்களில் ஆட்சியைப் பிடித்த ஒரே அரசியல் தலைவர் தாங்கள்தான். இந்தச் சாதனையை எப்படிச் செய்தீர்கள்?

முதல்வர்: நீங்கள் என்னுடைய சாதனை என்கிறீர்கள். நான் மக்களின் மகத்தான வெற்றி என்று கருதுகிறேன்.

பத்திரிக்கையாளர்: தாங்கள் போட்டியிட்ட அருப்புக்கோட்டை தொகுதியில், 29 ஆயிரத்து 378 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றீர்கள். உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட 11 பேர்களும் சேர்ந்து மொத்தமாக வாங்கியுள்ள வாக்குகளே 9 ஆயிரத்து 548 தான். மிக அதிக வாக்கு வித்தியாசம். 195 இடங்களில் போட்டியிட்டு 127 இடங்களில் தனிப் பெரும் பான்மையை உங்கள் கட்சி பெற்றிருக்கிறது. தோழமைக் கட்சிகளையும் சேர்த்து 144 இடங்களைப் பெற்றிருக்கின்றீர்கள். இது சாதாரணமான ஒன்றல்ல. மக்கள்தான் வெற்றியைத் தரக் காரணம் என்று நீங்கள் கூறினாலும், அந்த வெற்றி இயக்கத்திற்குக் கிடைக்கத் தாங்கள் தானே காரணம்?

முதல்வர்: நான் சார்ந்துள்ள இயக்கத்தின் மீதும், எங்கள் அணியினர் மீதும் மக்கள் கொண்ட நம்பிக்கைதான் காரணம். (புன்முறுவல்)

பத்திரிக்கையாளர்: கலைத்துறையிலிருந்து அதாவது சினிமாவிலிருந்து வந்ததால்தான் இவ்வளவு ஆதரவு என்கிறார்களே…!

முதல்வர்: கலைத்துறையில், சினிமாவில் நான் மட்டும் பணிபுரியவில்லை. அப்படி உள்ளவர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.

பத்திரிக்கையாளர்: கலைத்துறையிலிருந்து வந்தவர் தாங்கள், என்பதும் ஒரு சாதனைதானே!

முதல்வர்: அந்தச் சாதனையைச் செய்தவர் எங்கள் அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாதான். நான் நடிப்புத் துறையை மட்டுமே சின்னஞ்சிறு வயதுமுதல் நம்பியிருந்த நடிகன். நான் மற்ற துறைகளைப் பற்றி அறிந்தவன் என்றாலும் எனது ஏழாவது வயது முதல் நான் நடிப்புத் தொழிலில் இருந்தவன்.

பத்திரிக்கையாளர்: நடிப்புத் துறையிலிருந்து ஒருவர், நாடாளுவது தமிழகத்தில் – இந்தியா……. ஏன் உலகத்திலேயே முதன்மையானவர் நீங்கள் தான். அந்தப் பெருமை உங்களுக்குத்தான்.

முதல்வர் : மிக்க நன்றி! இந்தப் பெருமை கிடைக்கக் காரணமானவரும் பேரறிஞர் அண்ணாதான். அரிதாரம் பூசி நடிப்பவர்கள் கூத்தாடிகள், நாடகமாடிகள் என்று இழிவாகப் பலர் பேசிய போது அதனைப் போக்கியவர் அவர்தான். நடிப்பவர்களைக் கேவலமாக நினைப்பதை மாற்ற, எம்.ஏ பட்டம் பெற்ற பேரறிஞரான அவரே அரிதாரம் பூசி நடித்தார். நடிப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படச் செய்து, மக்கள் நலனுக்காக அவர்கள் பாடுபடுவார்கள் என்பதை உணர்த்தினார்.

பத்திரிக்கையாளர்: எதைச் சொன்னாலும், நீங்கள் அண்ணாவைப் பற்றியே கூறுகிறீர்களே…..

முதல்வர்: வந்த வழியையும், வளர்த்தவர்களையும் மறந்தவர்களை மக்களும் மறந்துவிடுகிறார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டதனால் மட்டுமல்ல….. என் இயல்பே அதுதான்.

பத்திரிக்கையாளர்: மக்களுக்கு……….. இவ்வளவு மகத்தான வெற்றியைத் தந்தவர்களுக்கு என்னென்ன செய்யப் போகின்றீர்கள்?

முதல்வர்: எங்களை நம்பி ஆட்சிபீடத்தில் அமர்த்திய அவர்களுக்கு நம்பிக்கையானவர்களாக இருந்து நன்மையைச் செய்வது! என்னைப் பெற்ற தாயும், அரசியல் ஆசான் அண்ணாவும் என்னை அப்படித்தான் உருவாக்கியுள்ளனர். அவர்கள் ஆசியோடு தமிழக மக்களையும் தமிழகத்தையும் வாழ வைக்கப்பாடுபடுவோம்.

நன்றி வணக்கம்.

(கைகூப்பி வணங்குகிறார்)

காட்சி:

தொலைக்காட்சி அல்லது வானொலியில் முதல்வர் புரட்சித்தலைவர் ஆட்சி பொறுப்பேற்ற வர்ணனையை ஒரு குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

“30.06.1977 தமிழ்நாடு முதலமைச்சராக எம்.ஜி.ராமச்சந்திரன் பதவி ஏற்றார். மேதகு ஆளுநர் பிரபுதாசு பட்வாரி அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நகரப் பிரமுகர்கள் கூடியிருந்தனர். சென்னை, அண்ணா சாலையில் அண்ணா சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்தபோது தமிழகமே தலைநகரில் கூடி வாழ்த்தியதைப் போலிருந்தது!”

அந்தக் குடும்பத்தினர் தாய், தந்தை பிள்ளைகள் பேசிக் கொள்கின்றனர்:

பெண்: அடி… ஆத்தாடி….. எம்மாம் பெரிய கூட்டம். என் சென்மத்திலே இப்பிடி ஒரு சனத்தை நான் பார்த்ததில்லே…!

ஆண்: நாடு பூராவும் இதைத்தான் புள்ளே அதிசயமா பேசிக்குது! எம்.ஜி.ஆர் நடந்தால் ஊர்வலம்; நின்றால்….. பெருங்கூட்டம்; பேசினால்….. மாநாடு! அவர் வர்றாருன்னேலே சனங்க கூட்டம் அலைமோதும். அதனாலேதான் அவருக்கு மக்கள் திலகம்னு பேரு. புரட்சித் தலைவர் முகத்தைப் பார்க்கணுமுன்னா தமிழ்நாடு என்ன, இந்தியாவே இங்கே இருக்குமே!

பெண்: ஏனுங்க…….. இவ்வளவு பேரு மனசிலே இடம் புடிக்கிறதுன்னா… அது சாதாரணமா? அவரைப் பெத்தவுங்க பேரும் புண்ணியம் செஞ்சிருக்கனும்….

ஆண்: ஹூ…ம்… அவுங்க மட்டுமா? நாமும் தான், இல்லேன்னா அவரு முதலமைச்சரா வருவாரா?

ஒரு சிறுமி: அப்பா…..! முதலமைச்சர் எம்.ஜி.ஆரோட அப்பா… அம்மா…. யாருப்பா?

ஒரு சிறுவன்: சொல்லுங்கப்பா…! அவரைப்பத்தி முழுக்கத் தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்குபா….

ஆண்: (சிரித்தபடி பாடுகிறார்)

சின்னப்பயலே சின்னப்பயலே

சேதி கேளடா…… நான்

சொல்லப்போகும் வார்த்தையை

எண்ணிப்பாரடா………

ஆளும் வளரணும்

அறிவும் வளரனும்

அது தான்டா வளர்ச்சி….

சிறுவன்: ஆசையோடு ஈன்றவனுக்கு – அதுவே (பாடுகிறான்) நீ தரும் மகிழ்ச்சி

பெண்: இப்பிடி புத்தி சொல்லிப்பாட இப்ப யாரு இருக்காங்க…… அவரு மாதிரி! முதல்வர் எம்.ஜி.ஆரு பொறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது மத்தவுங்களை வாழவைச்சது…….. பூரா விவரத்தையும் புரியும் படியா சொல்லுங்க……………….

சிறுமி: சொல்லுங்கப்பான்னா………..

ஆண்: சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டாத்தான் இனிக்கும். அவரைப்பத்தி நினைச்சாலும், சொன்னாலும் நெஞ்சமெல்லாம் இனிக்கும். அயோத்தியிலே பிறந்த ராமன் சரிதத்தை அழியாத காவியமா படைச்சான் கம்பன். நம்ப ராமச்சந்திரன் தானே சரித்திரமும், காவியமுமாகத் திகழ்கின்றார். நம்ப எம்.ஜி.ஆர் பிறந்த ஊரு இலங்கையிலே உள்ள கண்டி. அவுங்க அப்பா பேரு மருதூர் கோபாலன். இதைத்தான் ‘எம்.ஜி’ என்று இனிஷியலாகச் சொல்கிறோம். அவுங்க அம்மா பேரு சத்தியப் பாமா.

பெண்: மருதூர் கோபாலன்னு சொல்றீங்க…! அப்புறம் கண்டியிலே எம்.ஜி.ஆர். பிறந்ததா சொல்றீங்களே…!

ஆண்: அவசரப்படுறியே…! மருதூர் கோபாலன் அது தான்.. எம்.ஜி.ஆரு அப்பா இங்கே திருச்சூர், அரூர், எர்ணகுளத்தில் மேஜிஸ்ட்ரேட்டா இருந்திருக்காரு. நீதிக்கும், நேர்மைக்கும் புறம்பா நடக்கும்படி வற்புறுத்தியிருக்காங்க…..!

அப்படிப்பட்ட வேலையும் வேண்டாம், இந்த ஊர்களும் வேண்டாம்னு உதறித்தள்ளிவிட்டு இலங்கைக்குப் போனாரு, அவுங்க அப்பா!

பெண்: வாத்தியாரு நடிச்ச படத்துக்கு ‘நீதிக்குத் தலைவணங்கு’ன்னு பேரு கூட இருக்கே! அவுங்க அப்பான்னா……. எப்படி இருப்பாரு? நீதியும் நேர்மையும் அப்பா…. சத்யம் தான் தாய்!

ஆண்: அங்கே கண்டியிலே கல்லூரி முதல்வராக மருதூர் கோபாலன் இருந்திருக்காரு. அவர் பேராலே அங்கே ஒரு தெரு கூட இருக்குதாம். எம்.ஜி.ஆர் கூடப் பொறந்தவுங்க நாலுபேர். மூத்த அக்காள் பெயர் காமாட்சி. அடுத்துப்பிறந்தவர் பாலக் கிருஷ்ணன். மூன்றாவதாகப் பிறந்தவர் சுமித்ரா. நான்காவதாகச் சக்ரபாணியும், ஐந்தாவதாக எம்.ஜி.ஆரும் பிறந்தனர். பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையிலேயே கோபாலனும், சத்யபாமாவும் இருக்கும் போதே இறந்துவிட்டனர்.

பெண்: அட..டா… பரிதாபமே…!

ஆண்: எம்.ஜி.ஆருக்கு அப்போது இரண்டு வயசு. அவுங்க அப்பா கோபாலன் எதிர்பாராவிதமாக உடல்நலமின்றிக் காலமானார். ஹூம்…. அவரு.. தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொத்து சுகம் எதையும் விட்டுச் செல்லவில்லை. நல்லவர் குடும்பம் என்ற மரியாதையும், மதிப்பும் மட்டுமிருந்தது. சத்யபாமா உறுதிமிக்கவர். குழந்தைகளை அழைத்துக் கொண்டு குமுறும் இதயத்துடன்… கணவனுடன் இலங்கை சென்றவர், தனியாகத் திரும்பினார். நெருங்கிய உறவினர் எவராவது உதவி செய்வார்கள என்று எதிர்பார்த்தார். எல்லோரும் விலகிச் சென்றனர். குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு பிராமணக் குடும்பத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பலரைத் தனக்குப் பணிபுரிய வைத்திருந்தவர், பிள்ளைகளுக்காக உழைப்பது என்ற முடிவிற்கு வந்தார். அங்கே……. தனது கைக்குழந்தையான எம்.ஜி.ஆரையும் எடுத்துச் சென்றார். அப்போது…………

காட்சி:

சத்யபாமா தனது (2 வயது) மகன் எம்.ஜி.ஆரைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். வீட்டுச் சொந்தக்காரி ஏற இறங்கப் பார்த்துவிட்டு அலட்சியமாகப் பேசுகிறாள்.

வீட்டுக்காரி: வேலைக்கு உன்னை வைச்சா.. நீ…. உன் கை குழந்தையையும் தூக்கிக்கிட்டு வர்றியேடி..! இங்கே நீ வேலையைப் பார்ப்பியா? உன் குழந்தையைக் கவனிப்பியா?

சத்யபாமா: (கோபமாக) எனக்குச் சத்யபாமா, சின்னம்மா, கண்ணச்சியம்மான்னு மூணு பேரு இருக்கு! ஏதாவது ஒரு பேரைச் சொல்லிக் கூப்பிடுங்க. இப்படி….. வாடி.. போடின்னு கூப்பிட்டா நானும் சொல்லும்படி இருக்கும்.

வீட்டுக்காரி: அம்மாடியோ…. நான் இப்படி……. என்னடி……. ஹூம்… இல்லே தப்புமா…….. சத்யா…! என்ன சொல்லிட்டேன்.

சத்யா: வழியத்துப்போயி, வேலைக்காரியா வந்தவதானே, நாம வசதியா இருக்கோம்ங்கிற எண்ணத்திலே வார்த்தைகளைக் கொட்டீட்டீங்க…! நானும், உங்களைவிட வசதியா வாழ்ந்தவதான். ஏதோ என் போதாத காலம், இந்தக் கோலத்தோட வேலை செய்யத்தான் வந்திருக்கேன்…….. மானம், ரோஷத்தையெல்லாம் விட்டுவிட்டு வரலேம்மா……….

வீட்டுக்காரி: சரி…. சரி… சத்யபாமா…. நான் ஒண்ணு கேப்பேன்….. கோவிச்சுக்கமாட்டியே…

சத்யா: என் கோபம் உங்களை என்னம்மா செய்துடும். இல்லாதவ நான், இருக்கிறவுங்க நீங்க. சொல்லாலே கொல்லாமே இருந்தாச்சரி!

வீட்டுக்காரி: ஆமா… கண்ணச்சியம்மா…. சத்யபாமா…. ஏம்மா வைச்சுண்டு படாதபாடுபடுறே! இந்தக் குழந்தை அழகா…. லட்சணமா இருக்கு. நேக்கும் பிடிச்சிருக்கு. உனக்குக் கை நிறைய பணம் தர்றேன்…. இந்தக் குழந்தையைக் கொடுத்துடேன்.

சத்யா: கை நிறைய பணம் கொடுத்தாலும் இந்தப் பிள்ளையைப் பெத்தவ மனம் நிறையாது. விக்கிறதுக்கு நான் பிள்ளையைப் பெக்கலை. ஏதோ…. கஷ்டமா இருக்கேன்னு உங்க வீட்டு வாசல்படியை மிதிச்சேன். நீங்க என்னை மதிக்காதது மட்டுமில்லே, நெஞ்சிலே மிதிக்கிறீங்க. போதும்மா….. உங்க சகவாசம்! நீங்களும்… உங்க வேலையும்…..

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன்

தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *