POST: 2021-08-31T06:54:44+05:30

சிந்தனைக்களம்

முத்தமிழறிஞர் கலைஞருக்கு நினைவிடம்

தமிழகத்தின் சிற்பிக்கு -சிறப்பு சேர்த்த முதலமைச்சர்

கலைஞர் தொலைக்காட்சியில்
24 8 2021 – இரவு 8 மணி

சிந்தைக்கும் – செவிக்கும்

இன்றைய சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைவர் கலைஞர் நினைவிடத்தை பற்றிய அறிவிப்பு நம் சிந்தை அணு ஒவ்வொன்றையும் சிலிர்க்கவைக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது.

என் உள்ளத்தில் பொங்கித் ததும்புகின்ற உணர்வுகளை என்னால் சொற்களால் அவ்வளவு எளிதாகக் கூற முடியாது.

வரம்பில்லாத அன்பு காட்டிய பாரி வள்ளலைப் பற்றி அவன் பறம்பு மலையை விட்டுப் பிரிந்த கபிலர் பாடிய கையறு நிலை வரி எனக்கு நினைவுக்கு வருகிறது

ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் ! ;
சிறுவரை சென்றுநின் றோர்க்கும் தோன்றும்
மன்ற; பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி,
நட்டனை மன்னோ

தமிழகத்தினுடைய கல்லும் -புல்லும், நாம் பேசுகிற இனிய சொல்லும் கலைஞரால் விளைந்தவை .

எளிய புறக்கணிக்கப்பட்ட மாணவர்கள் எல்லாம் ஏற்றம் பெற்றுத் திராவிடத்தின் பெருமையை எல்லாம் உருகவும் செய்த பெருந்தகை கலைஞர் அவர்கள்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வித்தகத் திறமைகளை எத்தனை விதத்தில் வேண்டுமென்றாலும் கூறி மகிழலாம்.

அந்த வகையில் தமிழகத்தில் அவருக்கு நினைவகத்தை காட்சியும் – மாட்சியும் மிகப்பெரிய சிறப்போடு அமைப்போம் என்று கூறியதைக் கேட்ட போது

“ இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் ”

என்ற திருக்குறள் நினைவிற்கு வருகிறது

நாளும் கணம்தோறும் ஓயாத உழைப்பினால் தமிழ் மக்களுடைய செழிப்பையும் தமிழ் மக்களுடைய வாழ்வில் சிரிப்பையும் கண்டு பெருமிதம் பெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வாழும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்த அறிவிப்பு , தமிழகத்துக்குத் தேவையானது பெருமிதம் தருகிறது .

தத்தம் தலைவர்களுக்கு எல்லா மாநிலங்களிலும் எல்லா நாடுகளிலும் விழா நடத்துவதும் நிறுவனங்கள் அமைப்பதும் இயல்புதான் என்றாலும் இது அப்படிப்பட்ட ஒரு செய்கை அல்ல

காரணம் இலக்கியத்தில், அரசியலில் ,மக்கள் வாழ்வில், மக்கள் உணர்வில், எளியோர் ஏற்றத்தில் அறிஞர்களுக்குப் புகழ் செய்வதில் ஆற்றல் மிகுந்த மரபுகளை வளர்ப்பதில் போராடிப் போராடி வாழ்க்கையில் மூடப் பழக்க வழக்கத்தை வேரோடு களைந்தெறிய வேண்டும் என்று எண்ணிய நீர் உணர்வுகளை எல்லாம் ஒரு சேரப் படைத்தவராக முத்தமிழ்க் கலைஞர் விளங்குவது நம்முடைய நினைவில் எப்போதும் நீங்காமல் இருக்கிறது.

அந்த வகையில் இந்த நினைவகம் தமிழகத்துக்கு நிலையான புகழையும் நீடு தோறும் நினைத்து நினைத்துப் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு உலகத் தமிழர்கள் எங்கே இருக்கிறார்களோ அவர்கள் அவ்வளவு பேரும் வந்து கண்டு போற்றுகிற சிற்ப அமைப்பாக போற்றப்பெற விளங்குவது நமக்குப் பெரிய அருமையாகத் தெரிகிறது.

நாள்தோறும் நல்ல அறிவிப்புகளை வழங்கி வருகின்ற போது நாம் நினையாத வகையில் இந்த ஒரு இனிமையான அறிவிப்பை வழங்கியதற்கு என் மனம் அரசியல் தலைவர் – அருந்தமிழ்ப்புதல்வர் – கழக முதல்வர் – கலைகளின் நிறைகுடம் – பொதுநலம் தேடினோர் புகலிடம் என மகிழ்ச்சியடைகிறது

வாழ்க தமிழ்…

அமெரிக்காவில் வாழும் தமிழ்ச்செல்வி தேமொழி அவர்கள்
தொகுத்தெடுத்த காணொளிக்கு
என் கைகுவித்த வணக்கம் .

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *