தினமணி
நாள்: 07.12.2023
பக்கம்: 8
கலைச்சொல் கோயில் கட்டுவோம்!
தமிழ் சொல்வளம் மிக்க மொழி.
வழக்கில் உள்ள சொற்கள் சில ஆயிரமே என்றாலும், அகராதியில் உள்ள சொற்கள் இலட்சத்தைக் கடந்தவை.
அகராதியில் இல்லாத பலநூறு சொற்கள் மக்கள் வழக்கில் உள்ளன.
புதிய சொற்களைப் படைக்க முயலும் போது முதலில் பழைய சொற்களைத் தேடிப் பார்க்க வேண்டும்.
ஒரே சொல்லாகக் கிடைக்காவிட்டால், இணைப்புச் சொற்களை வைத்துக் கொள்ளலாம்.
அப்படியும் முடியாவிட்டால்தான், புதிய சொல்லைப் படைக்க வேண்டும்.
எந்த முயற்சியுமே செய்யாமல் இதற்கு என்ன தமிழ் என்று சிலர் அறைகூவல் விடும்கிறார்கள்,
அவர்களுக்கான நம் மறுமொழி தேடுங்கள் கண்டடைவீர் என்பதே.
ஒருமுறை என் பாட்டனார் உரைவேந்தர் ஒளவை க. துரைசாமியார், ‘ஸ்க்ரூடிரைவர்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தார்.
ஸ்க்ரூடிரைவர் என்பது திருகாணியை இறுக்கவும், கழற்றவும் பயன்படுவதால் அதனடிப்படையில்
திருகாணி சுற்றுநர்,
திருகாணி ஓட்டுநர்,
திருகு கழற்றுநர் என்றெல்லாம் சிந்தித்துப்பார்த்தார்.
ஆயினும் ஒரே சொல்லாகத் தமிழில் அமைத்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணி, “திருப்பான்’ என்ற சொல் சரியாயிருக்குமா என்று யோசித்தார்.
அப்போது வீட்டில் மரவேலை செய்து கொண்டிருந்த தச்சர் தன் உதவியாளரிடம் ‘அந்தத் திருப்புளியை எடு’ என்று கூறியது அவர் காதில் விழுந்தது.
உடனே அவரிடம் ஓடிச்சென்று அப்பெயரைக் கேட்டபொழுது அவர், ‘
சாதாரண உளியிலிருந்து வேறுபட்டது திருப்புளி.
இது திருப்புகின்ற உளி’ என்றாராம்.
தனது பேராசிரியத் தமிழ் சாதிக்க அல்லற்பட்டுக் கொண்டிருந்ததை அந்தத் தச்சர் தமிழ் எளிதாகச் சாதித்தது விட்டது என்றாராம்.
சொல்லுருவாக்கத்தில் ஈடுபடுமுன், எத்தொழில் செய்வாரிடம் அச்சொல்
புழக்கத்திலிருக்கும் என்று பார்த்து அவர்களைத் தேடிச் செல்வதை முதற்கடமையாகக் கொள்ள வேண்டும் என்பதுதான் சொல்லாக்கத்தின் கட்டளைக்கல்லாகும்.
அரசாங்கத்தின் வருவாயை இராணுவச் செலவுக்கு இவ்வளவு, கல்விச் செலவுக்கு இவ்வளவு என்று பங்கிடுவதைத் தானே ‘பட்ஜெட்’ என்கிறோம்?
‘பாதீடு’ என்பது தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ஒரு சொல்.
வெற்றி பெற்ற ஒரு வேந்தன், வெற்றிப் பொருளை வீரர்களுக்குப் பகுத்துக் கொடுத்ததை ‘பாதீடு தந்தனர்’ என்று ‘புறப்பொருள் வெண்பா மாலை’ குறிப்பிடுகிறது.
ஈழத் தமிழர்கள் இன்றும் ‘பாதீடு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ‘
அமைச்சர் பாதீடு தாக்கல் செய்தார்’ என்றே இலங்கை இதழ்கள் எழுதுகின்றன.
ஒரு புதிய சொல்லைப் படைக்குமுன், அதற்கு ஈடான சொல் தமிழ் இலக்கியத்தில் எங்காவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களிடம், குறிப்பாக கிராமப்புற மக்களிடம் பேச்சு வழக்கில் இருக்கிறதா என்று ஆராய வேண்டும்.
நண்பர் ஒருவர்,
மருத்துவமனைகளில் உள்ள லேபர் ரூமுக்கு தமிழில் என்ன பெயர் என்று கேட்டார்.
அப்போது வேறொரு நண்பர், ‘அது மகப்பேறு நடைபெறும் இடம்.
எனவே, அதனை மகப்பேறு இல்லம் எனலாம்’ என்றார்.
அவர் கூறியது ஒரு வகையில் சரியே.
ஆனால், அதற்குப் பழைய சொல் ஒன்று இருக்கிறது.
அது ‘ஈனில் என்பதாகும்.
இது சங்க இலக்கியத்தில் உள்ள சொல்.
‘இல்’ என்றால், இல்லம்; ‘ஈன்’ என்றால் பெறுதல். ‘
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே’ என்பது புறநானூற்றுப் பாடல். ‘
மாடு கன்று ஈன்றது’ என்பது இன்றும் மக்கள் வழக்கில் உள்ளது.
எனவே, மகப்பேறு நடைபெறும் அறையை, ‘ஈனில்’ என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றேன் நான்.
எந்த ஒரு மொழியும் அதனைப் பேசுவோர்களின் அறிவுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்பவும், கால சுழற்சியின் மாற்றத்திற்கேற்பவும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை நாம் கண்டுவருகிறோம்.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்கிறது நன்னூல் (462).
தொல்காப்பியமும் ‘கடிசொல்வில்லைக் காலத்துப் படினே’ (சொல்.452) எனக் கூறுகிறது.
மருத்துவம், பொறியியல், சட்டம், கணினியியல் போன்ற சிறப்புப் பகுதியின் கலைச்சொற்கள் உருவாக்குவதன் அவசியத்தை அனைவரும் அறிவோம்.
மொழி வளர்ச்சிக்கும் அறிவுத்திறன் பரிமாற்றத்திற்கும் புதுப்புது சொற்களை உருவாக்குவது இன்றியமையாததாக உள்ளது.
மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, கருத்தாக்கம் முதலியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கும் சொல் குறுஞ்சொல்லாக இருத்தல் நலம்.
மக்கள் பழக்கத்தில் உள்ள சொற்களை எடுத்தாளுவதோடு செம்மையான இலக்கியச் சொற்களையும் புகுத்தித் தமிழின் மேன்மையைத் தற்காத்துக் கொள்ளலாம்.
பலரின் கருத்துகளினால் உருவாகும் கலைச்சொல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உருவாகிக் குழப்ப நிலை ஏற்படாமல் இருக்க புதிய கலைச்சொற்களைப் பரவலாக்க வேண்டும்.
அன்றாட அலுவலுக்குத் தேவையான – குறிப்புகளைத் தமிழிலேயே பொருள் பிறழாமல் மயக்கந்தரா வண்ணம், அனைவரும் எளிதில் புரியும்படி அமைந்தால், அது ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் பரவ இயலும்.
‘நன்னூல்’ கூறுவது போல, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்,
நவின்றோர்க்கு இனிமை,
நன்மொழி புணர்தல்,
ஓசை உடைமை,
ஆழம் உடைத்து
ஆதல், முறையின் வைப்பே, உலகம் மலையாமை,
விழுமியது பயத்தல்,
விளங்கு உணர்த்தாதது ஆகுதல், நாவிற்கு (சொல்லிற்கு) அழகு என்னும் 10 இலக்கணக் கருத்துகள், இக்காலச் சொல்லுருவாக்கத்திற்கு மிகவும் பயன்தரும் வாய்ப்பாடு எனலாம் (நூற்பா 13).
பல்வேறு துறையினரடங்கியக் கலைச்சொல் உருவாக்கக்குழு அரசின் கண்காணிப்பின் கீழ் அமைக்கப்பட்டு, வளரும் துறைகளுக்கான புதிய சொல்லை உருவாக்கி ஊடகங்கள் வாயிலாக பேசுமொழியில் புகுத்துவதன் மூலம் கலைச்சொற்களின் உருவாக்கம் உதவியுடையதாக அமையும்.
பயனுக்குள் வரும் புதியசொல், பழக்கத்தில் நுழைந்தால், சமூகத்திலும் தனிமனித உரையாடல்களிலும் பதிந்துவிடும்.
சங்க இலக்கியக் கால அறிவியற் சொற்களாக இருப்பவற்றைக் கண்டறிதல், கட்டாயமாக்குதல் நலம் பயக்கும்.
ஆங்கில மொழி அறிஞர்கள், ஆங்கில மொழிச் சொற்களை தொகுத்தல் முறையில் அணியமாக்கி, மொழி ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அதுபோல், உலகின் பழமையான மொழிகளுள் மூத்த மொழியாகக் கருதப்படும் நம் தமிழ் மொழியிலும் அத்தகைய தொகுப்பு தேவை என்பதை உணர்ந்து, ‘சொற்குவை’ என்ற திட்டம் தமிழ்நாடு அரசால்
தொடங்கப்பட்டுள்ளது.
இதில் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல்,
சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல்,
நிகரான சொற்களை பதிவு செய்தல்,
சொற்களின் தொடராக்கப் பரிமாணங்களைப் பதிவு செய்தல், சொற்களுக்கான பொருள் விளக்கத்தைத் தேடும் வசதியை அமைத்துக் கொடுத்தல்,
அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், வந்த சொல்லே மீளவும் வராமல் தடுத்தல்,
புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டு, அவை இணையதளப் பொதுவெளியில் உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், மொழியியல் ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழறிஞர் வீரமாமுனிவர்,
‘ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அம்மொழியின் சொல்வளம் இன்றியமையாதது.
எந்த மொழியின் சொல்வளம் குன்றிப் போகிறதோ அந்த மொழி வழக்கொழிந்து தன் வாழ்நிலையையே இழக்கிறது.
இவ்வாறு வழக்கொழிந்து போன மொழிகள் பல.
இந்நிலைத் தமிழ் மொழிக்கு ஏற்படாமலிருக்கும் பொருட்டு நிகண்டுகளையும், அகராதிகளையும் உருவாக்கி, அதன் வாயிலாகத் தமிழ்ச் சொற்களைத் திரட்டி, பிற்காலத் தலைமுறைக்காகப் பாதுகாத்து வைத்தேன்.
அந்த நிகண்டுகளைச் சீரமைக்க எண்ணி, – சொற்களை, அகர வரிசையில் அடுக்கியும், அச்சொற்களுக்கான பொருளைத் தந்தும், ‘சதுரகராதி என்னும் பெயரில் முதல் அகராதியை 1732-ஆம் ஆண்டில் படைத்தேன்.
அதன் வாயிலாக தமிழ் மொழியின் வளமையைக் காக்க வழியேற்பட்டது’ என்று கூறியுள்ளார்.
அவருக்குப் பின்னர் பேரகராதிகளைப் பலர் உருவாக்கினர்.
அவற்றுள் ‘சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, ‘சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழக அகராதி, ‘கதிரைவேற்பிள்ளை அகராதி போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இத்தகைய அகராதிகள் இன்றைய மக்களின் பயன்பாட்டிற்குப் பெரும் உதவியாக இருக்கின்றன.
அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில் புதிய சொற்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டியதும், பழந்தமிழ்ச் சொற்கள் பாதுகாக்கப்பட வேண்டியதும் கட்டாயக்கடமை.
எதிர்காலத் தலைமுறையினருக்காகத் தமிழ்ச்சொற்கள் அனைத்தையும் சேமித்துப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ‘சொற்குவை’ திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஒருவர் ஆங்கிலத்தில் ஒன்றைக் கூறிவிட்டால் உடனே போட்டி போட்டுக்கொண்டு அதனைப்பலரும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்வது தற்போது வழக்கமாகிவிட்டது.
“அவர் அதனை ஆங்கிலத்தில் ஏன் சொன்னார், எதற்காகச் சொன்னார் என்று எவரும் சிந்திப்பது கிடையாது.
எவ்வளவோ பொருளடக்கங்களுக்கு கலைச்சொல் உருவாக்க வேண்டியிருக்கிறது.
ஏன், எதற்கு புரிந்துகொள்ளாமல் உடனே மொழிபெயர்ப்பு செய்வதைத் தவிர்ப்பது நலம் பயக்கும்.
தமிழ்நாட்டிலுள்ள மாணவச் செல்வங்கள், ‘எந்த கருத்தையும் தாய்மொழியில் எடுத்துரைப்பேன்’ என்கிற உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
கட்டுரையாளர்:
ஔவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழக அரசு

Add a Comment