POST: 2024-04-04T07:01:42+05:30

உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை
42வது நினைவு நாள்
==============================================

இந்த நினைவு நாளை (3.4.2024). என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார்.

கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும்

“உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி”

என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2.2018),
நினைவில் வாழும் பேராசிரியர் கு சிவமணி (25.2.2020)
மாநிலக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் இராமன் (15.2.2021)
ஆகியோர்
“உரைவேந்தர் ஔவை துரைசாமி”
என்னும் தலைப்பில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப் பெற்றுள்ள ஒளவை துரைசாமி அறக்கட்டளையில் உரையாற்றி உள்ளனர்.

அடடா ஈதென்ன ஆண் ஒளவை என வியப்பா !

ஏடும் எழுத்துமாக வாழ்ந்து பீடும் பெருமையும் அணி செய ஒளவையின் வாழ்வு மிளிர்ந்ததை நினைவு கூர்கிறோம் .

வாழ்வில் அவர் தொடங்கிய முதற்பணி உரை வரைதல் தான் ,
அவருடைய நிறைவுப்பணியும் திருவருட்பா உரை தான் .

நற்றிணை ,ஐங்குறுநூறு ,
பதிற்றுப்பத்து,புறநானூறு ஆகிய சங்க நூல்களும்
சிவஞானபோதம்,ஞானாமிர்தம், திருமுறை ,திருப்பதிக உரைகள் ,சன்மார்க்க உலகுக்கு கொடையாக வழங்கிய திருவருட்பா உரையும் எண்ணினால் அறுபதாயிரம் பக்கங்களைத் தாண்டும்.

அவர் வாழ்வின் பயன் இலக்கிய விளக்கமாகவே அமைந்தது.

சங்க இலக்கியங்களுக்கு உரை கண்டதற்கு ஓர் அரியணையும்.

சைவ சித்தாந்த நூல்களுக்கு உரை விளக்கம் வழங்கியதற்கு இரண்டாம் அரியணையும்

சமுதாய வரலாற்றுக் கல்வெட்டுப் பொருண்மைகளுக்கு விளக்கம் வரைந்ததற்கு மூன்றாம் அரியணையும்,

சன்மார்க்க மாமலையாகத் திருவருட்பாவுக்குப் பேருரை எழுதியதற்கு நான்காம் அரியணையும்

என நான்கு அரியணையில் ஏற்றி, உரைவேந்தரைப் ” பேருரை விளக்கப் பெரும்புலவர் ”
என்று தமிழ் உலகம் போற்றுகிறது.

ஒளவை துரைசாமியின் அளப்பெரும் புகழ், என்றும் நம்மைக் களிப்பில் ஆழ்த்தும்!

—– ஔவை அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *