POST: 2024-08-30T10:04:36+05:30

செய்தி வெளியீடு எண்: 1281

செய்தி வெளியீடு

நாள் : 24.08.2024

அகரமுதலி இயக்ககச் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஆய்வு!

தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் 23.08.2024 ஆம் நாள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. வே. இராஜாராமன் இ.ஆ.ப.,

தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

அகரமுதலி இயக்ககத்தில் உள்ள மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்களும், அரசு செயலாளர் அவர்களும் மாலை அணிவித்தும். மலர் தூவியும் புகழ் வணக்கம் செலுத்தினர்.

அகரமுதலி இயக்ககச் செயற்பாடுகள், வெளியீடுகள், சொற்குவைத் திட்டத்தின் பரவலாக்கம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அவற்றை மேம்படுத்துவது குறித்துக் கலந்தாய்வு நடத்தியதோடு எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்.

மேலும், அகரமுதலி இயக்கக அகராதிகளைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசுப் பொது நூலகங்கள் வழியாக மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மும்முரப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களான தமிழ் வளர்ச்சி இயக்ககம். உலகத்தமிழ்ச் சங்கம் ,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் உள்ள விற்பனை மையங்களில் இவ்வியக்கக அகராதிகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கல்லூரிக் கல்வி இயக்ககம் வழியாகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் அகரமுதலி இயக்கக அகராதிகளை வழங்குவதற்கும். அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையப் பயிற்சி மையங்கள். அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் போன்ற இடங்களிலும் இவ்வகராதிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டு சேர்க்கவும் ஆவனசெய்யுமாறு குறிப்பிட்டார்.

அகரமுதலி இயக்ககப் பொன்விழா ஆண்டை இந்தாண்டு தமிழ் அகராதியியல் நாள் விழாவோடு இணைத்துச் சிறப்பான முறையில் கொண்டாடவும், இவ்வியக்ககத் தமிழ்க் கலைக்கழகத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5-இலிருந்து 10ஆக உயர்த்தி அதன் செயற்பாடுகளைப் புத்தாக்கம் செய்யவும். பொன்விழா ஆண்டை முன்னிட்டு அகரமுதலி நூல்களை 50 விழுக்காடு சிறப்புக் கழிவில் விற்பனை செய்யவும். காலத்திற்கேற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட ஆங்கிலம் தமிழ் அகராதி, தற்காலத் தமிழ் அகராதி ஆகியவற்றை உருவாக்கி வெளியிடவும், வருங்காலங்களில் இயக்கக வெளியீடுகள் அனைத்திலும் விரைவுத் துலங்கல் குறியீடு (QR Code) இடம்பெற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

தமிழிலுள்ள 70 விழுக்காடு சொற்களுக்கு வேர்ச்சொல் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில் அப்பணியை 100 விழுக்காடு நிறைவு செய்யவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இயக்குநர் (மு.கூ.பொ.)
செ.சொ.அ.தி.இ.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *