4e541f78-e4c7-4ac4-b3cc-693ff23262f2

இயற்கையோடு இணைந்த இலக்கியச் செல்வர்

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில்,
சுதந்திரப் போராட்டத் தியாகி
திரு. அரிகிருஷ்ணன்
திருமதி தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக திரு குமரி அனந்தன் 1933 மார்ச்சு 19ஆம் தேதியன்று பிறந்து
2025 ஏப்ரல் 9ஆம் தேதி அன்று சென்னையில் மறைந்தார்.

பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர் என்று பெருமிதத்துடன் சொல்லி வாழ்ந்து மறைந்தவர்.

காங்கிரசுப் பேரியக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவராக இருந்தவர்.

மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு பணிவின் சிகரமாக தன் சிறகுகளை மடக்கிக் கொண்டவர்.

ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து இராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டதன் விளைவாக 15.08.1984 அன்று 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர்.

இலக்கியச் செல்வராகவும்,
மேடைப்பேச்சாளராகவும் எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகத் திகழ்ந்தவர்.

நாகர்கோயில் தொகுதியில் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவைக்குச் சென்ற முதல்நாளிலிருந்து தமிழில் பேசுவதற்குப் பலமுறை போராடி, பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டு, சோர்ந்துவிடாமல் அவரின் தொடர் முயற்சியால் 20.11.1978இல் தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்து, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தமிழிலேயே பேசியவர் என்ற சிறப்புக்கு சொந்தக்காரர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக நான்கு முறை
(1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில்) தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுதி மேம்பாட்டிற்குத் தொண்டாற்றியவர்.

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழ்நாட்டில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்ததை தமிழர்கள் என்றென்றும் நினைவில் கொள்வர்.

எட்டயபுரம் கூட்டுறவு நூற்பாலைக்கு பாரதியாரின் பெயரினை சூட்டுமாறு உண்ணா நோன்பிருந்து கோரிக்கையில் வெற்றி பெற்றதையும்

சென்னை, திருவல்லிக்கேணியில் பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர் வர முனைந்து வென்றதையும்

வானொலி என்பதை ஆகாஷ்வாணி என்றாக்க முனைந்தபோது எதிர்த்து சென்னையில் பேரணியும்

சாத்தூர் வைப்பாற்று மணல் வெளியில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்; தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரை அழைத்து பெரிய மாநாடு நடத்தி வானொலி தொடர்ந்து நிலைக்க வழி வகுத்ததையும்

நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது POST- CARD; MONEY ORDER FORM என்பனவற்றைத் தமிழில் அஞ்சலட்டை, பணவிடைத்தாள் என்று தமிழில் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றி CHEQUE என்பது காசோலை என அழைக்கவும். தந்தியை விரைவு வரைவு என அழைத்துச் செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததும் தமிழ்நாட்டு வரலாற்றில் பொறிக்கத்தக்க பொன் சுவடுகளாகும்.

நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார்,
சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன், பார் அதிரப் பாடிய பாரதி உட்பட 29 நூல்களை எழுதி தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் நிறைந்திருப்பவர்.

சென்னையில் உள்ள பெரும்பான்மை கல்லூரிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் குறிப்பாக தியாகராயர் நகரில் மகாகவி பாரதியார் குறித்த தனி உரைகளும்
மாணவ, மாணவிகளுக்கும் பேச்சுக்கலையில் பயிற்சி அளித்து, மாணவர்களை மேடைகளில் பேச ஆக்கமும், ஊக்கமும் அளித்த சிறப்பிக்குரியவர்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா

என்ற பாரதியின் வாக்கை செயல்படுத்திக் காட்டிய பெருந்தகை நம் கண்ணில் காணமுடியாத நெடுந்தொலைவிற்கு கடந்து சென்றுவிட்டாரே!

தமிழ்நாடு அரசின் மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராசர் விருதுகளோடு கடந்த ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து உயரிய விருதான தகைசால் தமிழர் விருதினைப் பெற்றபோது அருகினிலே கண்குளிரக் கண்டு மகிழ்ந்ததை மறக்க முடியுமா?

சொல்வளத்துடன் பனைவளத்தையும் தமிழகத்தில் ஓங்கிய நிலையில் வளர்த்து இயற்கையோடு கரைந்த இலக்கியச் செல்வர் எந்தையாரின் நெருங்கிய நண்பராகவும் என் மீது தனிப்பரிவு கொண்டு அகமகிழ்ந்து இருவரும் சிரித்துப் பேசிய அமுத மொழிகள் என் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்று இருக்கிறது.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

826a8ec4-ff86-49ce-ae95-bc00e76f0e3b

மணி விளக்கு அணைந்தது!

அப்பாவின் ஆருயிர் தங்கை
திருமதி மணிமேகலை சுப்பிரமணியன் (23.5.1938-8.4.2025)
இன்று காலை 9.45 மணி அளவில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

தலைமை குணத்தின் பிறப்பிடமாகவும்
அன்பின் வடிவமாகவும்
பண்பின் உறைவிடமாகவும் திகழ்ந்தார்.

தன்னுடைய நான்கு மக்கட் செல்வங்களையும்
வங்கியாளர் ராஜன்
மருத்துவர் செந்தில்
முனைவர் கதிரவன்
வங்கியாளர் திருமதி வேணி பாஸ்கரன்
உயர் கல்வியில் உயர்வற உயர உயர்த்திய ஆற்றலரசியாக மிளிர்ந்தார்.

தன்னுடைய நீண்ட நெடுவாழ்வில் நான்கு மக்கட் செல்வங்களின் செழுமையான பள்ளிப்படிப்பு, கல்லூரி வாழ்வு, பல்கலைப் பெருமிதம்,அலுவலகப் பணி மற்றும் பணி ஓய்வு வரை இருந்து கண்டு மகிழ்ந்தார்.

கீழ்வீதியின் பெரும் குடும்பத்தில் திருமணம் செய்து தன் தங்கை திலகவதி அவர்களின் திருமணத்தையும் மைத்துனருக்கே திரு நரசிம்மன் அவர்களுக்கு , திருமணம செய்து தந்த பெருமிதத்தை எந்நாளும் எந்தையார் போற்றினார்.

உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் இரண்டாம் மகள்

மணிமேகலை காப்பியம் உரை எழுதத் தொடங்கும் பொழுது பிறந்த திருமகள் என்பதனால் மணிமேகலை என்று பெயர் சூட்டப்பட்டவராவார்.

மழலையாக நான் இருந்தபோது பெற்றோர்கள் இலங்கைக்குச் சென்ற பொழுது மணிமேகலை அத்தை மடியில் வளர்ந்தேன் என்று ஆயிரம் முறை சொல்லி மகிழ்ந்தவர்.

நாங்கள் மூவரும்
கண்ணன் அருள் பரதன்
மணிமேகலை அத்தை இருந்த லாயிட்ஸ் குடியிருப்பில் வார இறுதி நாட்களில் மகிழ்ந்து விளையாடிய நாள்கள் என்றும் நினைவில் மங்காது.

வாய் நிறைய வாஞ்சையான சொற்களாலும்

நுங்கும் நுரையுமான சிரிப்பலையும்

அருள் அருள் என்ற அன்பான அழைப்பும் நிறைந்த மணிமேகலை அத்தையின் பிரிவு தாங்க முடியாத இழப்பாகும்.

செவிலியர்கள் துணையுடன்
அண்ணன் ராஜன் இல்லத்திலும் அண்ணன் கதிரவன் இல்லத்திலும் அத்தை இருந்த காட்சி என்றும் நிழலாடிக் கொண்டிருக்கும்.

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன் எங்கள் அருமை மணிமேகலை அத்தை ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்தார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கண்ணன் அருள் பரதன்

81bd9170-17ee-4293-8bc0-6ca5cbad8225

முந்திக் கொள்ளும் செயலார்வம் முடங்கிப் போனதே!

திரு. இரா. நாறும்பூ நாதன் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில்
சு. இராமகிருஷ்ணன் சண்முகத்தம்மாள் இணையரின் மகனாக 27.12.1959 இல் பிறந்தவர்.

கணிதத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

திரு. இரா. நாறும்பூநாதன் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியாவில் முப்பத்து மூன்று ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் இலக்கியத்துறையில் ஈடுபட்டு முழு நேரத் தமிழ்த் தொண்டராகத் திகழ்பவர்.

மாவட்டக் கலைமன்றத்தின் உதவிச் செயலாளராகவும்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் திகழ்ந்தவர்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியக் கூட்டங்கள் பலவற்றை நடத்தி வருபவர்.

சிறுகதைகளை எழுதத்தொடங்கிய இவர்,

‘எண்ணங்கள்’, ‘த்வனி’ போன்ற இதழ்களை நடத்தினார்.

நண்பர்களுடன் இணைந்து ‘தர்சனா’ என்ற நாடகக் குழுவை உருவாக்கியது மட்டுமன்றி, ‘ஸ்ருஷ்டி’ என்னும் நாடகக் குழுவுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் சென்று நூற்றுக்கும் மேறப்ட்ட நாடகங்களை நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.

2011 இல் ‘நாறும்பூ’ என்னும் வலைத்தளத்தைத் தொடங்கினார்.

இவருடைய முதல் நூலான
‘கனவில் உதிர்ந்த பூ’ பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டது.

‘கண்முன்னே விரியும் கடல்’, ‘
யானை சொப்பணம்’, ‘
ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’,
‘இலை உதிர்வதைப்போல’
எனச் சிறுகதை நூல்களையும்,

‘தட்டச்சு கால கனவுகள்’
‘திருநெல்வேலி – நீர் நிலம் மனிதர்கள்’,
வேணுவன மனிதர்கள்’,
‘கி.ரா. கடைசி நேர்காணல்’, ‘பால்வண்ணம்’ எனும் புதினங்கள் உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்.

திரு. இரா. நாறும்பூநாதன் அவர்களின் இலக்கியப் பணிகளையும், நாடகப்பணிகளையும் வலைத்தளப் பணிகளையும் பாராட்டும் வகையில் இவருக்குத் தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டின் உ.வே.சா. விருது வழங்கி, விருதுத்தொகையாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலை தகுதி உரையினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் 22.2.2024 வழங்கி மகிழ்ந்த தருணம்….

16.3.25 மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்ததும் வருத்தத்தில் வாடினேன்.

அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் என்ன ஆறுதல் சொல்வோம்?

f84832cc-e8c3-46f8-b8fa-0104894c815a

பிரிவால் வருந்துகிறோம்

திரு சுப்பிரமணியன் நடராஜன் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கிறது.

எங்கள் பெற்றோர் மீது அளப்பரிய அன்பும் பரிவும் பொழிந்த பண்பாளராகத் திகழ்ந்தவர்

என்னுடைய மனைவிக்கு முதன் முதலாக சென்னையில் அண்ணா சாலையில் செஞ்சுரி வணிக வளாகத்தில் தன் உடன் பிறந்தவர்களுடன் நடத்தி வந்த கணினி சார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை வழங்கிய பெருந்தகையாவார்.

அண்ணலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்

நெருங்கிய உறவுகளான வழக்கறிஞர் கருணாநிதி

திருமதி சாந்தி எழில்

ஆகியோருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

9ea0ae30-9264-48a9-9410-df5eaebe7352

மறைந்த பின்னும் பேச வைக்கும் பெருமை வாய்ந்தவர்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை 21.10.24 அன்று திருச்சிராப்பள்ளியில் உள்ள
ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், எழுச்சியோடு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் த.மு.எ.க.ச வின் துணைத்தலைவரும் வங்கி அலுவலரான திரு நெடுஞ்செழியன் சிங்காரவேலு என்கிற கவிஞருமான நந்தலாலா அவர்கள் “சீரிளமைத்திறம் வியப்போம்”என்ற தலைப்பில் ஆற்றிய உரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாது, மாணவர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

நிகழ்வு முடிந்ததும் கவிஞர் நந்தலாலா கல்லூரியின் முகப்பில் உள்ள அரச மரத்தடிக்கு என்னை தனியாக அழைத்துச் சென்றார்.

அம்மரத்திற்கு அடியில் அண்ணல் காந்தியின் சிலையினை சுட்டிக்காட்டி
, “1934 ஆம் ஆண்டு இக்கல்லூரிக்கு காந்தியடிகள் வந்தபோது, இம்மரத்திற்கு அடியில் அமர்ந்து தான் மாணவச் செல்வங்களோடு கலந்துரையாடினார். அதன் நினைவாகவே இச்சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது”, என்ற வரலாற்று ஆதாரத்தோடு சொன்னது நீங்கா நினைவுகளாக உள்ளது.

இனிய சொற்பொழிவாளர், கவிஞர், நூலாசிரியர், வரலாற்று ஆய்வாளர் என பன்முகத்தன்மைக் கொண்ட வளமான சிந்தனையாளர் நந்தலாலா அவர்கள் 4.3.2025 அன்று வானில் கலந்தார் என்ற செய்திக் கேட்டு கலங்கினேன்.

நிலமிருக்கும் நாள் வரைக்கும்
நின் புகழ் இருக்கும்.

துயரத்துடன்

அருள்

bad21da9-31da-4358-8f30-9124e84ced1d

எப்படி மறப்பேன்!

தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநராகப்பணியில் சேர்ந்தவுடன் பல கோப்புகளை நுணுகிப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

அப்பொழுது ஒரு கோப்புக்கு முடிவு சொல்லும் பொழுது எந்நிலையிலும் ஓய்வு பெற இருக்கும் அலுவலர்களுக்கு நிலுவை ஏதுமின்றி குறைகள் நேராதபடி ஓய்வினை மகிழ்ச்சியாக துய்ப்பதற்கு ஏதுவாக கோப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவ்வகையில் நாளது வரை அதில் தொய்வில்லை.

ஆனால் விதிவிலக்காக ஒரு கோப்பு மட்டும் சில ஆண்டுகளாக முடிவு எட்டாமல் இருந்ததை உடனுக்குடன் அதற்குத் தீர்வுதந்து அந்த அலுவலருக்கு கடந்த மூன்று திங்களுக்கு மேல் ஓய்வூதியம் பெறுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ததோடு அவர் எல்லையில்லாத மகிழ்ச்சியில் துள்ளி என்னை ஆரத்தழுவி நீண்ட நேரம் தான் கலந்து கொண்ட பல கூட்டங்களையும் அலுவலால் தான் செய்த சாதனைகளையும் சுட்டிக்காட்டினார்.

அப்பெருந்தகை 25.2.25 செவ்வாய்க்கிழமையன்று மதியம் மறைந்தார் என்ற செய்தி வந்ததும் துயரில் ஆழ்ந்தேன்.

அவரை நான் எப்பொழுதும் அண்ணா என்று சொல்லி தான் பேசுவேன்.

அவருக்கு ஓய்வூதியம் கிடைத்த பிறகு சிரித்துக் கொண்டே சொன்னேன் ஊருக்கே தெரிந்த வசனத்தை சொல்லுகிறேன் என்று வருத்தப்படாதீர்கள் குமார் என்றேன்.

இன்று எங்களை எல்லோரையும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் திரு. குமார் வானில் கலந்தார்.

அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் எப்படி சொல்வேன்?

துயரத்துடன்

அருள்

360_F_619379858_tec8RcV1vNTKFTmKiZGDUiFOJMaIdNfC

இழந்து விட்டோமே!

ஆற்றல் திலகம்
பண்பின் பெட்டகம்
தமிழ், தமிழர்கள் தமிழ்ப்பண்பாடு, மொழிபெயர்ப்பு தொடர்பான பொருண்மைகளை அலைபேசியில் உடனே அழைத்துக் கேட்பதும் அதற்கேற்ற முடிவுகளை அவர் வழியிலேயே நிறைவேற்றிக் காட்டுவதும் தான் திரு ரமேஷ் அவர்களின் கூடுதல் சிறப்பு.

பல நேரங்களில் துணை இயக்குநர் என்றால் ஆங்கில மொழிபெயர்ப்பான Deputy என்று தான் அரசு அலுவலகங்களில் எண்ணுவார்கள்.

ஆனால் திரு ரமேஷ் இதற்கு ஒரு விதிவிலக்கு

தமிழில் எப்படி கடவுள் துணை என்று எழுதுவார்களோ அதுபோல அவர் பணியாற்றிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் துறையின் அலுவலகத்தில் அவர் உற்ற துணையாகவும் பேரறிவுப் பெருந்தகையாகவுமாக மிளிர்ந்தார்…

அண்மையில் கவிப்பேரரசு என்னிடம் வெளிநாட்டுத் தூதர் தமிழ்நாட்டில் யார் என்றால் தனக்கு
திரு ரமேஷ் என்று அவர் மகிழ்ச்சியாக சொல்லி அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசிய பொழுது பெருமிதம் அடைந்தேன்.

அவரின் மறைவு மீள முடியாத துயரம்

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்
அலுவல் பெருமக்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்

e311c843-c589-419f-8006-cd04ebb06a25

களப்போராளியை இரக்கமில்லாத காலன் கவர்ந்து விட்டானே!

பாண்டிய மன்னரை போன்ற தோற்றமும்
செம்மாந்த நடையும்
பெருமித குரலும்
கண்டாரைக் கவரும் காசிக்கோ என்கிற கண்ணு சிவகுமாரன்(23.12.1964-25.1.2025)
சனிக்கிழமை 25.1.25 அன்று காலை
மலேசிய மருத்துவமனையில் மறைந்தார் என்ற திடுக்கிடும் செய்தியை வழக்கறிஞர் சிவகுமார் தொலைபேசி வாயிலாக
சொன்ன போது
அந்தோ!
மணி நிகர் இனிய நண்பரை இழந்தோமே!
என்று துயரத்தில் வெம்பினேன்.

சென்ற மாதம் தான்(24.12.24) தனக்கு மணிவிழா மலேசியா வர வேண்டும் என்று அழைப்பிதழ் நீட்டிய கரத்தை என்னென்று சொல்வது…

வாய் திறந்தால் தமிழ் தான் உலகில் தலைசிறந்த மொழி

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை அனைவரும் மறவாமல் கடைபிடிக்க வேண்டும்

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று உரிமையுடன் நாள் தவறாமல் மலேசியாவில் இருந்து
எப்பொழுது தொலைபேசி எடுத்தாலும் வணக்கம் தமிழகம் என்று விளிக்கும் வணிக வித்தகர்
எப்படி நம்மை விட்டுப் பிரிந்தார்?

நாடு போற்றும் நயவுரை நம்பி அவர்களை சென்னைக்கு வரும்பொழுதெல்லாம் சந்தித்து அளவளாவும் வணிகச்செம்மலாக திகழ்ந்தவர்.

மாலத்தீவில் மாபெரும் அளவில் வணிகச் சிறகுகளை விரித்த நயத்தகு நாகரீகர்.

சென்னை வந்தவுடன் கந்தக்கோட்டத்தில் தவறாது வழிபடும் நண்பரை
முருகா கந்தா கதம்பா விரைந்து ஏன் அழைத்துக் கொண்டாய்?

நினைவில் வாழும் டான்ஸ்ரீ
சாமிவேலுவின் நெருக்க வளையத்தில் இருந்த பண்பாளர் திலகத்தை இழந்து விட்டோமே!

மரத்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் அதில் மகத்தான பல வடிவங்களான நாற்காலிகளை, மேசைகளை, அறைகலன்களை ஏன் வீடுகளையே வடிவமைத்து மலேசியாவில் தொழிற்சாலையே உருவாக்கி மாலத்தீவு கடலிலேயே சுற்றுலாப்பயணர்களுக்கு உயர்தர மரக்குடில்களை வடிவமைத்த மறவர் எங்கள் காசிக்கோ என்று பெருமிதமாக 27 ஆண்டுகளுக்கு முன்பு நல்லறிஞர் நல்லகுமார் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட இணையற்ற நண்பரவார்.

25 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை தரமணியிலுள்ள டைடல் மென்பொருள் வளாகத்தில் உட்புற வாயிலில் மேற்கூரையில் வைரம் மின்னுவது போன்ற
வண்ணப்படிம உமிழ் விளக்குகளை உலகளாவிய ஒப்பந்த வாயிலாக வெற்றி பெற்று அணி செய்த
நுட்பவாணர் என்று பாராட்டப்பட்டவர்.

அவரின் போற்றுதலுக்குரிய வாழ்க்கைத் துணைவியார் திருமதி தேவிகா ராணி மற்றும் வெற்றித் திலகங்களான
இரு மகன்கள் தருமேந்திரன்
யுகேந்திரன்
செல்ல மகள் நித்திய லட்சுமிக்கும் மற்றும் இனிய நண்பர் நல்லகுமாருக்கும் என்ன ஆறுதல் சொல்வது?

இளவல் காசிக்கோ அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது

ஆழ்ந்த இரங்கலோடு

ஔவை அருள்
25.1.25

9e056c16-801b-4185-b7a8-513dc2249595

புரையுநர் இல்லாப் புலமையாளர்!

கரந்தைப் புலவர் கல்லூரியிற் பயின்று, தமிழ் முழுதறிந்த தன்மையராகத் முழுமையாகப்பெற்ற தமிழாகரர் சாமி. தியாகராசன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.

சிவந்த மேனியும், சிரித்த முகமும், சிந்தனை மிளிரும் வகையில் சிவசொற்களை அணிந்து பேசும் தன்மையர் கண்டாரைக் கவர்ந்து ஈர்க்கும் பான்மையுடையன.

தேசிய உணர்விலும் பாரதியார் பாடல்களிலும் தம்மை ஆட்படுத்திக்கொண்டு அவர் ஆற்றிய பணிகள் பல.

நினைவில் வாழும் மூதறிஞர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களோடு சூழ இருந்த அவைக்களத்தில் சாமி.தியாகராசன் அவர்களுக்கும் தனித்த இடமும், மாசற்ற மனமும், பிறர் மனங்குளிரப் பேசும் திறமும் நுணுகிக் காணும் நுழைபுலமும்
தாம் பெற்ற சிந்தனை வளத்தை வழுவிலாத நடையில் வனப்புற எழுதும் திறத்தை பலமுறை எந்தையார் பாராட்டியிருக்கிறார்.

கருப்புச் சட்டை அணிந்த இளைஞராகக் காட்சி தந்த பேராசிரியர் சாமி தியாகராசன் கதருடை அணிந்ததோடு கடவுள்நெறி இணைந்தவராகப் பெருமிதமாகத் திகழ்ந்து வருவதைப் போல எனக்கெல்லாம் அப்படிப்பட்ட மாற்றங்கள் வரவில்லையே என்று எந்தையார் அடிக்கடி சொல்லி மகிழ்வார்.

தமிழ் வேளாகவும், தன்னிகரற்ற புரவலராகவும் ஒளிரும் சிவாலயா மோகன் அவர்களோடு சேர்ந்து திருக்குறள், பெரிய புராணப் பழைய உரைகளை தேடித் தொகுத்து வெளியிடும் பொறுப்பேற்றிருப்பதால் பேராசிரியர் அவர்களைச் சென்னையிலேயே கண்டு மகிழ முடிகிறது என்று அவரின் முத்து விழாவில் அப்பா குறிப்பிட்டது பசுமையாக உள்ளது.

எங்கள் அம்மா மறைந்தபோது புண்ணியவதி தாரா இன்று நம்மிடை இல்லை என்பது மாயமோ! மருக்கையோ! புரியவில்லை.
நம்மை மீறி நடைபெறும் காரியங்கட்குக் காலமே பொறுப்பாகின்றது என்று நெகிழ்ந்து எழுதிய இரங்கலுரை நெஞ்சத்தில் நிழலாடுகிறது.

உயர்ந்த குடிப்பிறப்பும்
ஓங்கிய திருவும் பாங்குறப்பெற்ற அண்ணல் இன்று நம்மிடை இல்லையே என்று யாரிடம் சொல்லி அழுவேன்!

600px-M._t._vasudevan_nair_2_1

அழியாத முத்திரை

எந்தையாரின் நெருங்கிய நண்பர், மலையாள இலக்கியவாணர் பத்மபூஷன் விருதாளர்
திரு எம்.டி. வாசுதேவன் நாயர் (13.7.1933-25.12.2024) மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு ஆற்றொணாத் துயருற்றேன்.

சாகித்திய அகாதெமி விருது தொடர்பான பாராட்டு விழாவின் போது, கொச்சியில் இரண்டு நாட்கள் அவர் இல்லத்தில் தங்கியிருந்து மகிழ்ந்ததைப் பேருவுகையுடன் எந்தையார் சொன்னதை அப்பாவின் இனிய நண்பர் மருத்துவர் பத்மாநந்தன் ஓசூரிலிருந்து தொலைபேசியில் தெரிவித்தார்.

சங்ககால மற்றும் தற்கால இலக்கியங்கள் குறித்து எந்தையாரும் அவரும் மணிக்கணக்கில் விவாதித்து இலக்கிய இன்பத்தில் திளைத்ததையும், திரு. வாசுதேவன் நாயர் அவர்களின் இல்லத்திலிருந்த அரும்பெரும் நூல்களைக் கொண்ட நூலகத்தைக் கண்டு வியப்புற்றதையும் எந்தையார் கூறக் கேட்டுள்ளேன்.

இலக்கியச் சிந்தையில் எந்தையாரை ஒத்திருந்தாலும், இணையற்ற புதுமைச் சிந்தனைகளின் புகலிடமாக
மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் மிளிர்ந்தார்.

மலையாள மனோரமா இதழின் வாயிலாக தன் தடத்தை ஆழமாக பதித்ததோடு
21 மாநில திரைப்பட விருதுகளையும்
7தேசிய விருதுகளையும்
திரைப்படவுலகின் வாழ்நாள் சாதனையாளர் ஜே சி டேனியல் விருதையும்
கேரளா அரசின் உயரிய விருதான கேரள ஜோதி விருதினையும் ஞானபீட இலக்கிய விருதையும் பெற்றவராவார்.

இலக்கியத்தையே தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் அவர்களின் மறைவு இந்திய இலக்கிய உலகத்திற்கு உள்ளவாறே பேரிழப்பேயன்றி வேறில்லை.