POST: 2024-09-20T10:55:29+05:30

பயின்ற கல்லூரியில் அறுபதாம் அகவை பெருவிழா

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை
தமிழிலக்கியம் முதலாண்டு மாணவராக 1985இல் இணைந்த பொழுது
முதுகலை ஆங்கில இலக்கியம் இரண்டாமியாண்டு பயின்று வந்த என் இனிய நண்பர் சிவகுமார்
கல்லூரியின் முதல் தளத்தில் உள்ள பவுல் வெண்கலத் திருவுருவச்சிலைக்கு அருகில் சேலத்திலிருந்து வந்திருக்கும் பேச்சாளர் தோழி அருள்மொழி ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு வகுப்பில் இணைந்துள்ளார் என்று எனக்கு அறிமுகம் செய்தார்…

அப்பொழுதே பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி நண்பர்கள் அவரை சூழ்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள்…

எந்தையார் பெரிதும் பாராட்டும் பகுத்தறிவுப்பிழம்பு,
புதுமைப் பெண்ணின் மாட்சி
கம்பராமாயணம்
சீவக சிந்தாமணி சீறாப்புராணம் ஆகிய காப்பியங்களில்
எத்தலைப்பிலும் பேசினாலும் கல்லூரிப் போட்டிகளில் முதல் பரிசு பெறுகின்ற ஆற்றலரசி அருள்மொழி என்றுதான் வாழ்த்துவார் மேலும் அவரை அனல் மொழி என்றே விளிப்பார்…

எந்தையார் மறைவின் பொழுது நாள் முழுவதும் இல்லத்திலேயே இருந்து எங்களை எல்லாம் தேற்றிய மூத்த அக்கா அருள்மொழி ஆவார்.

அக்காவின் அறுபதாம் அகவை பெருவிழா
மாநிலக் கல்லூரியில் புதன்கிழமை நண்பகல் (18.9.24) நடைபெற்றது.

கல்லூரி முதல்வர்
அரும்பெரும் பேராசிரியர் முனைவர் இராமன் தலைமையில் அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள்,இனமானத் தோழர்கள், மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர், மாநிலக் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவச் செல்வங்கள் அணி திரண்டு பெருமிதத்தோடு விழா நடத்திய அரங்கில் பேசுகின்ற
நல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்

தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என்று போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களைத் தலைவராக போற்றி வழி நடக்கும்
தோழி அருள்மொழி நூறாண்டு சொல்லாண்டு பகுத்தறிவுப்பரப்புரைத்து வாழ்க வாழ்க என வாழ்த்தி மகிழ்ந்தேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *