ஏன்? எப்படி??
அழியாத மை என்று எப்படி நேற்று எழுதினீர்கள் என்று என் அப்பாவின் உதவியாளர் பிரதாப் இன்று காலை வினவினார்..
நேற்று வாக்குச்சாவடியில் வைத்தது சாதாரண மை அல்ல.
விரலின் மீது வைக்கப்பட்டால் எந்த ஒரு ரசாயனம், சோப்பு, எண்ணெய்யாலும் அகற்ற முடியாது.
ஒரு சில மாதங்களுக்கு அழியாமல் அப்படியே இருக்கும் என்றேன்.
கருநாடக அரசு நிறுவனமான மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் நிறுவனம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அழியாத மையை தயாரித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்கி வருகிறதாம் .
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் இந்த வகை மையை பயன்படுத்த
தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் சிறப்பு உரிமம் வழங்கப்பட்டுள்ளது .
அனைத்து தேர்தல்களுக்கும் இந்த அழியாத மையை வழங்க ஒன்றிய சட்ட அமைச்சகம், தேசிய இயற்பியல் சோதனை கூடம் ,தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மைசூர் பெயிண்ட் மற்றும் வார்னிஷ் நிறுவனத்துடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்து கொண்டதாம்.
தேர்தல் நடத்தும் விதி 37(1).ன் படி, தேர்தல் அதிகாரி அல்லது வாக்குச்சாவடி அதிகாரியால் ஒவ்வொரு வாக்காளரின் இடது கை சுட்டு விரல் நகத்தின் மேல் பகுதியில் இருந்து சதையும் நகமும் இணையும் அடிப்பகுதி வரை இந்த மை வைக்கப்படுகிறது
இந்த மையில் இருக்கும் ரசாயனப் பொருளான சில்வர் நைட்ரேட்,
புற ஊதா ஒளியில் படுவதால் அழிக்க முடியாததாக மாறிவிடுகிறதாம்.
தோலின் வெளிப்பகுதி செல்கள் மாற்றம் அடையும் போது தான் இந்த மை அழியும் என்றேன்.

Add a Comment