தினசெய்தி நாளிதழில் இன்று (03.08.2020) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
தென்னாட்டின் மன்னாதி மன்னவனே!
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ஆந்திர நாட்டின் மாபெரும் நடிகர் கண்ணன் பெருமகனாகவே மக்களால் போற்றி வணங்கப்படும் தெய்வ வடிவமாக என். டி. ஆர் கருதப்பட்டார். திரைப்பட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் என்.டி.ஆர். அவர்களுக்கு புரட்சித் தலைவர்தான் உற்ற நண்பராகவும், ஒளிவிளக்கு தரும் அறிஞராகவும், எல்லா வகையிலும், பெரும் பேராசிரியராகவும் திகழ்ந்தார் என்று சொன்னால் மிகையாகாது.
திரு.என்.டி.ஆர் அவர்கள் தான், முதன்முதலாக அரசியல் கட்சி தொடங்கப்போகிறேன். அதற்கு நீங்கள்தான் பெயர் சூட்ட வேண்டும் என்றும், அதில் தெலுங்கு என்ற பெயரும் இடம்பெற வேண்டும் என்று என்.டி.ஆர். அவர்கள் புரட்சித்தலைவரிடம் கேட்டார்.
புரட்சித்தலைவருக்கு எவ்வாறு இரட்டை இலை சின்னம் கிடைத்ததோ, அதுபோல் என்.டி.ஆர். அவர்களுக்கு இரட்டை சக்கரங்கள் கொண்ட சைக்கிள் சின்னம் கிடைத்தது.
அக்கால கட்டத்தில் என்.டி.ஆர். எது செய்தாலும், அதில் புரட்சித்தலைவரின் ஆலோசனை இருக்கும் என்று ஆந்திரம் மற்றும் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுவது வாடிக்கையாகும்.
தெலுங்கு கங்கை திட்டத்தை அறிமுகம் செய்வதற்காக ஒரு மாபெரும் ஒப்பந்தத்தில் தமிழ்நாடுஆந்திராகர்நாடகமராட்டிய அரசுகள் கையெழுத்திட்டன. ஆந்திராவிலிருந்து, தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வர வேண்டும் என்ற மாபெரும் கனவை நனவாக்க வித்திட்ட தூண்களாக என்.டி.ஆர். அவர்களும் புரட்சித்தலைவர் அவர்களும் விளங்கினர். இந்த கிருஷ்ணா நதி நீதி திட்டம் ஏறக்குறைய 406 கிலோ மீட்டர் தொலைவில் தண்ணீரை தமிழகத்திற்கு கொண்டு வரும் ஒரு நுட்பமான திட்டமாகும். இத்திட்டத்திற்கு தமிழக, ஆந்திர மற்றும் மந்திய அரசும் பேரூக்கம் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணா நதிநீர் திட்ட தொடக்க விழாவிற்கு வருகை புரிந்தபோது, நான்கைந்து மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்த காட்சி, இன்றைக்கும் மாட்சி தரும் காட்சியாக என் கண்முன்னே நிற்கிறது.
ஆந்திரப் பெரு நடிகர் என்.டி.ஆர். தன் உரையைத் தொடங்கும்போதே, புரட்சித்தலைவரைப் பார்த்து,” The King Maker of South India” என்று விளித்து மாபெரும் கைத்தட்டலைப் பெற்றார். அதே சமயத்தில் என்.டி.ஆர். அவர்களின் ஆங்கில உரையை தமிழாக்கம் செய்யும் பணி எனக்குக் கிட்டியது. நான் உடனே புரட்சித்தலைவரையும், ஆந்திரப் பெரு நடிகர் என்.டி.ஆர். அவர்களையும், மேடையில் உள்ளவர்களையும், எதிரில் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்து
“ தென்னகத்தின் மன்னாதி மன்னனே” என்று கூறினேன்.
அந்த ஆங்கிலத் தொடருக்கு ஏற்ப தமிழ்த் தொடரைக் கூறியவுடன் இடி போல் கைத்தட்டலும், புரட்சித்தலைவரும் இரண்டு முறை தன்னுடைய கருப்பு கண்ணாடி மூலம் ஏறிட்டு பார்த்த காட்சியும், அவருக்கே உரிய வெட்கமான புன்னகை பூத்ததும், என்.டி.ஆர். சிலிர்த்ததும் அன்றைக்கு நடைபெற்ற மாபெரும் காட்சிகளாகும்.
அந்த உரை வருமாறு….
(25.05.1983 ஆம் ஆண்டு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற
தெலுங்கு கங்கைத் திட்ட தொடக்க விழாவில் பங்கு கொண்டு ஆற்றிய உரை)
இந்த நிகழ்ச்சி என் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்தான நிகழ்ச்சியாகும்.
ஒரு வரலாற்றுச் சிறப்பான சாதனையை எதிர்கொண்டு நிற்கிறேன் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1976ஆம் ஆண்டு, சென்னையில் இது போன்ற கூட்டத்தில் பிரதமர் அவர்கள் தெரிவித்த அறிவிப்புகள் தான் இந்தக் கிருஷ்ணா நதி நீர்த் திட்டம் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவர் கூறும் நல்ல கருத்துகள் நிறைவேறுவதைச் சிலர் தாமதப்படுத்தினாலும், அந்த நல்ல திட்டங்கள் என்றேனும் நிறைவேறியே தீரும் என்பது உண்மையாகும்.
இந்த மாநிலத்தின் ஒரு மாவட்டம் என்கிற அளவுக்குச் சென்னையில் மக்கள் தொகை 35 இலட்சத்திலிருந்து 40 இலட்சம் வரை கணக்கிடப்பட்டுள்ளது. இங்குக் குடிநீர்ப் பிரச்சினை எவ்வளவு பெரிது என்பது நமக்குத் தெரியும். நான் எப்போதும் ஒருமைப்பாடு பற்றிப் பேசுபவன் என்பதையும், ஒருமைப்பாடு நாட்டில் இருக்கவேண்டும் என்றால் உள்ளத்தில் பரந்த போக்கு உருவாக வேண்டும் என்றும் சொல்வேன்.
இந்த மேடையில் வீற்றிருக்கும் மாநில முதல்வர்கள் எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்கள், நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்? கர்நாடக முதல்வர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? இங்கு நான்கு கட்சிகளைச் சேந்தவர்கள் இருக்கிறோம் இதைப்பார்க்கும் போது ஒருமைப்பாடு மகத்தானது என்பதும், அதை நிறைவேற்ற விரிந்த உள்ளம்தான் வேண்டும் என்பது நன்கு புரியும். இந்தியாவில் ஒருமைப்பாடு என்பது பிரிக்க முடியாததாகும். இங்கு ஒருமைப்பாடு சிக்கல் இல்லாத ஒன்றாகிவிட்டது.
இந்தத்திட்டம் நிறைவேற எவ்வளவு உழைக்க வேண்டும் என்று உணராமல் இல்லை. கருநாடக மாநில முதல்வர் இங்கே பேசும் போது, காவிரிப் பிரச்சினை குறித்து மனம் விட்டுப் பேசவேண்டும். அப்படி பேசினால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடக்கூடியதுதான் என்று குறிப்பிட்டார். அதற்காகக் கர்நாடக முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நாங்கள் எவ்வளவு காரியமாற்றினாலும் மத்திய அரசின் ஆதரவும் ஊக்கமும் இருந்தால்தான் இந்தத்திட்டம் வெற்றி பெற முடியும், இந்தத்திட்டம் தனிப்பட்டவர்களுக்காக அல்ல ஆனால் பணம் வீணடிக்கப்பட்டதாகச் சிலர் குறை கூறுகிறார்கள். வாழமுடியாதவர்கள் வாழ்கையில் ஏமாற்றமடைந்தவர்களின் வயிற்று எரிச்சல் அது. இந்தத் திட்டம் காலத்தையும் மீறி நிலைத்து நிற்கும்.
மாராட்டிய முதல்வர் கூறும்போது, “நான் கஷ்டப்படுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் பிறர் துயரப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமுடியாது. முதலில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்” என்று கூறினார்கள். இதைத்தான் நாமும் சொல்கிறோம். காந்தியடிகளும், அண்ணாவும் இதனையே கூறியுள்ளார்கள்.
“பிறரை நேசி., அவர்கள் உங்களை நேசிப்பார்கள்” என்றார், விவேகானந்தர். மாண்புமிகு முதல்வர் அருமைத் தம்பி என்.டி.ஆர். அவர்கள் நீண்ட உரையாற்றினார். அதற்கு இப்போது பதில் சொல்ல வேண்டுமா என்று எண்ணுகிறேன். நாட்டு நலனுக்காக அவருக்குச் சில ஆவல், ஆதங்கம் இருக்கிறது அதைப் பிரதமர் உணர்வார். அதன் அடையாளம் தான் 20 அம்சத் திட்டம்.
20 அம்சத்திட்டம், அதைத்தான் சொல்கிறது 1976 ஆம் ஆண்டு நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது 20 அம்சத் திட்டத்தைத் தெருத்தெருவாகச் சென்று பரப்பிய போது, சிலர் கேலி பேசினார்கள். அவர்களைப் பார்த்து இந்தக் கூட்டம் கேலி செய்கிறது இந்த விழா தனிப்பட்ட மனிதருக்கோ தனிப்பட்ட கட்சிக்கோ சாதிக்கோ நடக்கும் விழா அல்ல இது மக்களுக்காக நடத்தும் மக்கள் விழா.
முன்பு விளக்கு இருந்தது. திரியும் இருந்தது. எண்ணெய்யும் இருந்தது, ஆனால் அதை ஏற்றிவைக்க ஆளில்லாமல் இருந்தது. இன்று அந்த விளக்கை ஏற்றி வைக்கிறார், பிரதமர். இந்த நாடு முழுவதும் இதுபோல் பல விளக்குகள் பிரதமரால் ஏற்றிவைக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் மீது பிரதமருக்கு நல்லெண்ணமும் அனுதாபமும் எவ்வளவு இருக்கிறது என்று புரிகிறது. நீங்கள் பல்லாண்டு வாழ்க! நாட்டிற்கு நல்லது செய்யுங்கள்.
சித்திரா பௌர்ணமியில் நடக்கும் இந்த அடிக்கல் நாட்டுவிழா ஆந்திர மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள சகோதர பாசத்திற்கு எடுத்துக் காட்டாக நடக்கின்ற விழாவாகும். இத்திட்டத்தால், ஆந்திராவில் உள்ள இராயலசீமா போன்ற பகுதிகளில் இருக்கிற விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எவ்வளவு நம்மை என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் 65 இலட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு அரசு மூலம் இலவசச் சத்துணவு அளித்து வருகிறோம். அதேபோல் இங்கே எனது தம்பி, ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் அவர்கள், ஏழை எளிய குழந்தைகளுக்கு ரொட்டியும் பாலும் அளித்து வருவதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். இன்றைய குழந்தைகள் நல்ல ஊட்டச் சத்தோடு வாழ்ந்தால்தான், எதிர்காலத்தில் இத்தேசம் ஒளிமயமாகும். இத்தகைய திட்டம் இந்தியா முழுவதும் வரவேண்டும்.
எங்கே போனாலும் வேலை இல்லை; போதுமான ஊதியம் கிடைக்கவில்லை; சொந்தமாகக் குடியிருக்க வீடில்லை என்கிறார்கள். இது தமிழகத்திலோ, ஆந்திராவிலோ மட்டுமல்ல; இந்தியா முழுவதும் இருக்கிறது. இந்த நிலை மாறப் புதிய திட்டங்கள் தீட்டப்படவேண்டும். படித்தவர்கள் நூற்றுக்கு நூறு என இருக்க வேண்டும். தாய்மார்கள், நூற்றுக்கு எழுபது சதவீதத்துக்கும் குறைவாகவே படித்தவர்களாக இருப்பதை வருத்தத்தோடு குறிப்பிடுகிறேன்.
ஆந்திர முதல்வர் அவர்கள் இத்திட்டத்திற்கு ஒத்துக்கொண்டது ஏன் என்று சிந்திக்கிறேன். வெறும் விவசாயத்திற்கு மட்டுமல்ல தண்ணீர். இத்திட்டத்தின் மூலம் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலையும் தரவிருக்கிறார். இந்த அணைக்கட்டு கட்டும் போது இலட்சக்கணக்கான வேலையற்றோர் வேலை பெற இருக்கின்றனர். அதுபோலவே தான் கோடிக்கணக்கான ரூபாயில் நீர்ப்பாசனத்துக்காக கால்வாய் வெட்டும் திட்டமும்.
பாசனத்திற்குத் தண்ணீர் குடிப்பதற்குத் தண்ணீர்மக்களுக்கு வேலை எல்லாம் இத்திட்டத்தில் இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். அதேநேரத்தில் பல தொழில்கள் பெருகும். இதைச் சுற்றிச் சிறுசிறு தொழில்கள் இங்கு தோற்றுவிக்கப்படும். வேலைவாய்ப்பு உறுதியிருந்தால், மக்கள் வாழ்வு உத்தரவாதத்தோடு மேம்படும். காப்பீடு போல வாழ்க்கை உத்தரவாதம் கிட்டும்.
மாண்புமிகு ஆந்திர முதல்வர் அவர்கள் இங்கே பேசுகிறபோது ஒன்றைக் குறிப்பிட்டார்கள். “சொன்னதை நிறைவேற்றுகிறேன்” என்றார். எந்த மாநிலத்திலும், மூன்றே மாதத்தில் இப்படித் திட்டமிட்ட வரலாறே கிடையாது. அது என்.டி.ஆர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது, நாட்டு மக்களாகிய உங்கள் துணையுடன். இந்த துணை அவருக்கு எப்போதும் இருக்க வேண்டுமென என் தாயாம் தெய்வத்தை வேண்டுகிறேன்.
இந்திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள 45 இலட்சம் மக்களுக்குக்குக் குடிநீர் கிடைக்கவிருக்கிறது. அங்கே தமிழ் பேசுவோர் மட்டுமல்ல; தெலுங்கு பேசுவோரும் இருக்கின்றனர். இதுமட்டுமல்ல; கர்நாடக மக்களும், குஜராத், பஞ்சாப், மகாராட்டிரம் இப்படிப் பல மாநில மக்களும் அங்கே இத்தண்ணீரைக் குடிக்க இருக்கின்றனர். இதை இங்கு நான் கூறக்காரணம், சகோதரர் என்.டி.ஆர். ஆந்திராவுக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் சொந்தம். அவ்வகையில் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். அண்ணா நாமம் வாழ்க!
ஔவை நடராசன்,
தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment