POST: 2020-05-08T10:01:28+05:30

வானவில் கட்செவி குழுவில் பாரதியாரைப் பற்றிய என் கட்டுரை – 05.05.2020
==============================================

பாரதியாரைநாளும் நினைவோம் !
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

புதுவைக் குயிலின் பொன்னோவியம்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

பாரதியாரின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எப்போதும் இடைவெளியிருந்ததில்லை. நெஞ்சில் கனல் மணக்கும் நித்திலப் பூவாக அவர் எப்போதும் வாழ்கிறார். புலவர்களின் பெரும்பாலோர் பெற்று வாழ்ந்த பேராளர்கள். அவர் ஒருவர்தான் கொடுத்துச் சிவந்த கோமான். வாழ்க்கை முழுவதும் தோற்றார் என்றாலும், எந்த இடத்திலும் தன் தோல்வியைச் சொன்னதில்லை. இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் “எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்று பாடுவதற்கு ஒருவர் முன்வர இயலுமா?

தேசிய நோக்கில் படைக்கப்பட்ட காப்பியம், பாஞ்சாலி சபதம். பக்திப் பாங்கில் படைக்கப்பட்டது கண்ணன் பாட்டு. தத்துவ இழையில் பின்னப்பட்டது குயில் பாட்டு.
குயில்பாட்டு எழுநூற்றி நாற்பத்து நான்கு அடிகளில் படைக்கப்பட்ட காப்பியம். இந்த குயில் படைப்பு ஒன்பது பகுதிகளாக விரிகிறது.

தலைப்பு அடிகள்
========= =========

குயில் 36
குயிலின் பாட்டு 30
குயிலின் காதற்கதை 75
காதலோ காதல் 27
குயிலும் குரங்கும் 80
இருளும் ஒளியும் 46
குயிலும் மாடும் 122
நான்காம் நாள் 66
குயில் தனது பூர்வீக கதை உரைத்தல் 262

குயிலின் பாட்டாக இடையிடையே வருகின்ற பகுதிகளைத் தவிர எஞ்சியுள்ள பகுதிகள் அனைத்தும் வெண்பா யாப்பில் அமைந்திருக்கின்றன. முப்பெரும் காப்பியங்களுள் இந்தக் காப்பியமான குயில் பாட்டு மட்டும் சங்ககாலப் பத்துப் பாட்டுகளை ஏதோ ஒரு வகையில் நினைவூட்டுவதாகவே அமைந்துள்ளது.

குக்கூ என்ற குரலில் காதல், அருள், இன்பம், நாதம், தாளம், பண், புகழ், உறுதி, கூடல், சூழல் ஆகிய பத்துப் பொருண்மைகளையும் ஒளியாலும் சூழலாலும் குரல் வெளிப்பட்ட முறையாலும் பாரதியார் உணர்கிறார். சின்னக் குயிலின் மடியில் வெட்டுண்ட நிலையில் கிடக்கும் சேரமானின் இறுதிப் பேச்சு,

கண்ணகியின் மடியில் வெட்டுண்ட கோவலன் பேசிய இறுதிப் பேச்சைப் பல இடங்களில் குயில் பாட்டில் நினைவூட்டுகிறது. ஐயுற்று மன்னன் மகன் வீசும் வாள் வீச்சு, காயசண்டிகையின் கணவன் உதய குமரன் மீது வீசிய வாள் வீச்சையும் நினைவூட்டுகிறது.

குயில்பாட்டில், மக்கள் மட்டும் பாத்திரங்களாக வரவில்லை. பேய், பிசாசு, விலங்கு, புள் ஆகியவனவும் பாத்திரங்களாகின்றன.

எல்லா உயிர்களுக்கும் உள்ள காதல் உணர்ச்சி, இங்கே புதிய முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாகக் கவிஞர்கள் அன்பிலும், அழகிலும், பெண்மையிலும், ஈடுபாடு கொண்டவர்கள். மகாகவி பாரதியார், பெண்மையைப் போற்றுபவர், சக்தியை வழிபடுபவர், புதுமைப் பெண்ணைக் காணத் துடிப்பவர். அவர் கண்ட குயில், தமிழ்ச் சமுதாயத்தின் சராசரி பெண்ணுக்குக் குறியீடாகிறது. இந்தியச் சமுதாயத்தின் சராசரி பெண் என்றாலும் தவறில்லை.

குயிலின் சோகம், இந்த சமுதாயச் சராசரி பெண்ணின் சோகம், அல்லது பெண்மையின் சோகம். குயிலின் வரலாறு இந்த சமுதாயப் பெண்ணின் வரலாறு. குயிலின் காதல் கதை ஆண்டாண்டாக அவலத்தில் ஆழ்ந்த பெண்ணின் காதல் கதை. குயில்பாட்டின் மையப் பொருள் குயில்.

பாரதியார், தன் குயில் பாட்டில் காட்டியுள்ள பாத்திரங்களைத் தாம் புனையும் கவி அமைப்புக்கு ஏற்பக் கற்பனை உலகில் இட்டு உருக்கி, கவிதை அச்சில் வார்த்தெடுத்து, உளவியல் சாணையில் தீட்டி, ஓவியம் எழுதி, உயிரும் உணர்வும் ஊட்டி உலா வகுத்த நீண்ட கனவின் நிகழ்ச்சியாகும்.

பாரதியாரின் கவித் திறனுக்கும், கற்பனை வளத்துக்கும், புதியன புனையும் ஆற்றலுக்கும் சொல்லோவியத் திறனுக்கும் குயில் பாட்டு தனிப் பெரும் சான்றாகத் திகழ்கிறது.

ஆண்டு தவறாமல் ஸ்ரீராம் நிறுவனம், பாரதி பெருவிழா நடத்தும்போது மூன்று தலை சிறந்த அறிஞர்களுக்குக் காசோலையும், விருதும் வழங்குவது மரபு. ஒவ்வோராண்டும் வானவில் இரவி அவர்களிடம் அளவளாவி, அறிஞர்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து விருதுகளை எந்தையார் பரிந்துரைப்பதும் மந்தணம். ஒருநாளும் தனக்கு விருது தர வேண்டும் என்று அவர் நிறுவனமாகட்டும், அரசாகட்டும் யாரிடமும் ஏங்கி நின்றதில்லை. பாரதியின் அன்பின் ஊற்றாகவும், பரிவின் உருவாகவும், பண்பின் நிலையமாகவும், தொண்டின் சிகரமாகவும், வாழும் நல்லோராக மிளிர்பவர் கவிஞர் இரவி கல்யாணராமன் ஆவார். அறிவுத் தோழமைக்கு அணிகலனாக விளங்கும் அவர் ஆணைக்கிணங்கச் சில வரிகளை நானும் வரைந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *