இந்த உலகம் துன்பம் நிறைந்தது. இது நிலை இல்லாதது, பொய்யானது, மாயமானது என்றுதான் அனைத்து சமயங்களும் குறிப்பிடுகின்றன.
ஆனால், இந்த உலக வாழ்க்கையைக் கண்டு அஞ்சக் கூடாது. நல்ல நெறியை, நல்ல ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு எந்தத் துன்பமுமில்லை. இந்த உலக வாழ்வில், நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு நன்மையும், நல்ல வளமையும் கிடைக்கும் என்பதில் ஐயமுமில்லை.
மேல் உலகம் எனும் வீடு பேற்றில் எத்தகைய சிறப்பு, இன்பம் போன்றவை கிடைக்கும் என்று நாம் நம்புகிறோமோ அவை அனைத்தும் இந்த உலகத்திலேயே கிடைக்கிறது.
உலக வாழ்வை வெறுக்காமல், இந்த உலகில் பற்று கொண்டு, நல்லெண்ணத்துடன் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று புதியதொரு கருத்தைக் குறிப்பிடும் திருவள்ளுவர், சமயக் கருத்தாளர்களுக்கு மாறுபட்ட கருத்தினைக் கொண்டவர். அவரைக் குறிப்பிட்ட சமயத்தவர் என்றும், அவர் இயற்றிய திருக்குறள் நூலைக் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தது என்றும் கருதுகிற பார்வையை மாற்றிட வேண்டும்.
திருக்குறளை உலகப் பொதுமறையாகப் போற்றிட வேண்டும்.

Add a Comment