POST: 2018-10-17T08:20:50+05:30

=========================================
துக்ளக் இதழில் – வி.வி.ஐ.பி. மீட் பகுதியில் – 24.10.2018 அன்று இடம்பெற்ற நேர்காணல் (பகுதி – 2)
=========================================

*******************************************************************
பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதால் நம் தாய்மொழி சீர்குலைந்துவிடாது
*******************************************************************

1. பத்மநாபன்:
———————

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட் டுத்துறைச் செயலராக இருந்த காலகட்டத்தில், தமிழுக்காக நீங்கள் சாதித்து என்ன?

ஔவை நடராசன்:
—————————-

ஒரு மொழியின் வளர்ச்சி என்றால் என்ன என்பதை நாம் முதலில் வரையறுத்துக் கொள்ளலாம். மொழி வளர்ச்சி என்பது அந்த மொழியைப் பேசும் மக்களின் நெருக்கத்தோடும் பொருந்தியது; அந்த மொழியில் வெளியாகும் இதழ் களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்; அந்த மொழியில் நாளிதழ்கள் வளர்வது; சிறுகதைகள் பெருகி வருவது; நெடுங்கதைகள் நிறைய வருவது ; காட்சி ஊடகங்கள் மூலம் அந்த மொழியில் செய்திகளையும் கருத்துக்களையும் வழங்குவது; கவிதைகள், கட்டுரைகள் பெருகுவது; மொழி பெயர்ப்புகள் அதிககரிப்பது; அறிவியல் நூல்கள் செழிப்பது; அந்த மொழி மூலமே பெரிய, பெரிய தேர்வுகளில் பங்கு பெறுவது இவையெல்லாம் மொத்தமாக வளர்வதுதான் மொழியின் வளர்ச்சி. இதற்கு அரசு என்ன வேலையைச் செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். அரசுத் தரப்பில் தேவையான ஆட்சிச் சொற்கள், கலைச் சொற்களை உருவாக்கித்தர வேண்டும். அப்படி இன்று வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய தமிழ்ச் சொற் கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தற்போதைய தமிழ் வளர்ச்சி இயக்குநர் சமீபத்தில் என்னிடம் கூறினார். தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல் வாழ்வியல் கலைக் களஞ்சியங்களை, நாற்பது தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. ஒரு சொல் எப்படி வரும் என்ற கேள்விக்கு நாள் முழுதும் விடை சொல்லலாம். டைரக்டர் என்ற வார்த்தைக்கு இயக்குநர் என்பதா, நெறியாளர் என்பதா, என்று கருத்து வேறுபாடுகள் வரலாம். போர்டு என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஆயம் என்பதா, வாரியம் என்பதா என்ற கருத்து வேறுபாடுகள் வரலாம். நிகராடையா, சீருடையா என்று சர்ச்சை எழுந்தது. இவற்றையெல்லாம் நேர்க்கோட்டில் கொண்டு வர வேண்டும். மேலும் வருடத்திற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைப்பாடுகளில் நால்களுக்கு கம்பர், பாரதியார், பாரதிதாசன், உ.வே.சாமிநாதய்யர், திரு.வி.க., டாக்டர் ஜி.யு.போப் இப்படி பத்துக்கும் மேற்பட்ட தமிழ் மேதைகளின் பெயர்களில் அரசால் விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும் பத்துக்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பாளர்கள் அரசால் கெளரவிக்கப்படுகிறார்கள். இப்படி ஒரு மொழியை பரப்பு வதற்கும், பரப்புவர்களை கௌரவப்படுத்துவதற்கும் தமிழ் வளர்ச்சித் துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ் வளர்ச்சிக்கு அரசுப் பணிகள் ஒரு தூண்டுகோலே தவிர, அனைத்துப் பிரிவினரும் அவரவர் நெறிகளில் – மொழி வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும்.

2. பாலமுருகன்:
————————

உங்கள் தந்தையார் உரைவேந்தர் ஔவை துரைசாமி, நிறைய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஆனால், நீங்கள் அந்த மாதிரி எழுத்தாளர் ஆகவில்லையே ஏன்?

ஔவை நடராசன்:
—————————-

நான் பேசிய அளவிற்கு எழுதவில்லை என்பது உண்மைதான். எனக்கு அது ஒரு பெரிய குறை. குரலால் வாழ்ந்தால் போதும்; விரலால் வாழத் தேவையில்லை என்று தவறாக நினைத்துக் கொண்டேனோ என்னவோ தெரியவில்லை. என் தந்தையார் சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்று, பழைய உரையாசிரியர்களைப் போலத் தனது கருத்துக்களைப் புதுமையாகச் சேர்த்து உரையெழுதினார். எனக்கு அந்த மாதிரியான வாய்ப்போ, அந் தளவு புலமையோ அமையவில்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

3. பத்மநாபன்:
———————

தமிழ் வளர்ச்சித் துறை எல்லாம் வந்த பிறகும் கூட, இன் றும் பல அரசாணைகள் ஆங்கிலத்திலே யேதான் வெளியிடப்படுகின்றன. அதற்கு என்ன காரணம்?

ஒளவை நடராசன்:
—————————-

ஒரு செய்தியை நீங்கள் கவனிக்க வேண்டும். நாற்பதாண்டுகளுக்கு மேலாக நாள் தவறாமல் தமிழ் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மாற்றலாகி வெளியூருக்குப் போய்விட்டு, திரும்பி வரும் மகனைப் பார்த்து அம்மா, ‘ஏன்பா இப்படி இளைத்து விட்டாய்’ என்று ஏங்குவாள். அதுதான் தாய் மனம். அது போலத்தான் ஏராளமான ஆணைகள் தமிழில் வந்தாலும், சில ஆணைகள் இன்னமும் ஆங்கிலத்தில் வருகின்றனவே என்று கேட்பதும். நமது ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் பெரிய புலமை பெற்றவர்கள் அல்லர். அவர்கள் தமிழில்தான் சிந்திக்கிறார்கள்; தமிழில்தான் பேசுகிறார்கள்; தமிழில்தான் முடிவெடுக்கிறார்கள். ஆனால் அவைதான் சில உயர் அலுவலர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் படுகிறது. இது இன்றைய நேற்றைய பிரச்னை இல்லை. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோதே, இந்தப் பிரச்னை எழுந்து விட்டது.
பல்வேறு சட்டங்களையும் விதிகளையும் உருவாக்கும்போது, அவற்றை அந்தந்த மொழிகளில் வரையும்போது சில சிக்கல்கள் வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பிரதமரான நேரு தான் சொன்னார், ‘முதலில் எல்லாச் சட்டங்களையும், விதிகளையும், ஆணைகளையும், உட்கூறுகளையும் ஆங்கிலத்தில் உருவாக்கி வைத்துக் கொள்வோம். அதிலிருந்து வெவ்வேறு மொழிகளில் அந்த சட்டங் களை மொழிபெயர்ப்போம். இறுதியானது எது, சான்று அளிக்கக் கூடியது எது என்று சச்சரவு வரும் போது, ஆங்கிலமே இறுதியானது என்று வைத்துக் கொள்ளலாம்’ என்றார். எனவே அதிகாரிகள் மீது நாம் பழி போட வேண்டாம். பின்னாட்களில் மத்திய அரசுக்கு அனுப்புவதற்கும், உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்புவதற்கும் இடர்ப்பாடில்லாமல் இருக்கும் என்பதால், அவர்கள் ஆங்கிலத்தில் ஆணைகளைத் தயாரிக்கக் கூடும். சில நிலைகளில் இது தவிர்க்க முடியாததாகவும் இருக்கும். இனிவரும் காலங்களில் ‘துக்ளக்’ வாசகரான உங்களின் வேதனையை ‘அதிகாரிகள் உணர்ந்து, தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புவோம்.

4. பாலமுருகன்:
————————

நம் முடைய பல துணை வேந்தர்கள் மீது நிறைய – குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்போது வேறு மாநிலத்தைச் சேர்ந்த – ஒரு துணை வேந்தரை நியமித்திருக்கிறார் கள். அவர் ஊழல் கறை படியாதவர், எந்த குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகாதவர். ஆனால், அவரை இங்குள்ள அறிஞர் பெருமக்கள் எதிர்ப்பதற்கு என்ன காரணம்? இதில் மாநில வித்தியாசம் பார்ப்பது சரியா?

ஔவை நடராசன்:
—————————-

ஒரு சச்சரவு என்றாலே எதிர் நிலை, சார்பு நிலை என்று இரு நிலைகள் இருப்பது இயல்பே. எல்லாவற்றிற்கும் எதிர்க்கேள்வி கேட்பதும், எதிர்வினையாற்றுவதும் இந்த நூற்றாண்டின் நோய் என்றே சொல்ல வேண்டும். இதை போக்குவதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழ்ப் பல் கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தரே கேரளத்தில் இருந்து வந்தவர்தான். அவர் பெரிய தமிழறிஞர். டெல்லி தொலைநிலைக் கல்வி பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் வா.செ.கு. சென்றதும், அறிஞர் அனந்தகிருஷ்ணன் கான்பூர் சென்றதும் நாம் அறிந்த ஒன்றுதானே ?

5. உஷா மதனகோபால்:
———————————–

மற்ற மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியைத் தவிர, ஹிந்தியும் பேசுகிறார்கள். நம்முடைய மாநிலத்தில் மட் டுமே தமிழைத் தவிர வேறு மொழி தெரியாமல் இருக்கிறோம். இது திராவிட கட்சிகள் நமக்கு செய்த துரோகமா? நன்மையா?

ஔவை நடராசன்:
—————————-

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று வாழ்வதற்கு அந்தந்த மாநில மொழிகளைத்” தவிர, வேறு மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். தொழில் ரீதியாக வேறு மொழிகள் தெரிய வேண்டும் என்ற தேவையும் இப்போது இருக்கிறது. நான் இப்போது சொல்லப் போகும் கருத்தை என் நண்பர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. தமிழ் மொழி இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற பழமையும், தொன்மையும் நம் தலையின் மீது இருக் கிறது. தமிழினால் கிடைத்த பழமை, பெருமை என்ற சுமையை நாம் உணராமல் போய்விட்டதால், நம் முடைய கால்கள் தடுமாறின. எவ்வளவுதான் தொன்மையின் சிறப்பு இருந்தாலும், நம் முடைய தடுமாற்றத்தை உணர்ந்து, காலத்தின் உண்மை யைக் கருதி, நம் முடைய கருத்துக் களிலேயே புதுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உணர்வு பெருகுமானால், தமிழின் தகுதி எல்லா நிலைகளிலும் நிலை நாட்டப் பெற்றால், மற்ற மொழிகளும் வளர முடியும். இங்கேதான் தமிழ் போதிய அளவுக்கு இடம் பெறவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. மற்ற மொழிக்காரர்களுக்கு இந்த அளவுக்கு மொழித் தன்மையைப் போற்றும் பழக்கம் இருப்பதில்லை.

இன்றும் மத்திய அரசில் நம்முடைய தமிழ் மக்கள் பெருமிதத்துடன் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள், மஹாராஷ்ட்ரா, ஒடிஷா, குஜராத் போன்ற மாநிலங்களில் தலைமைச் செயலாளர் பதவியில் இங்கிருந்து சென்றவர்கள்தான் இருக்கிறார்கள். மொழி தெரியாமல் எங்கு போனாலும், அந்த மொழியைக் கற்றுக் கொண்டு இன்றும் சிறப்புடன் வாழ்கிறார்கள். நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், ‘ஹிந்தி கற்றுக் கொள்ளாமலே ஐந்து வருட காலம் டெல்லியில், நம் நாட்டின் முதல் குடிமகனாக பதவி வகித்து விட்டேன்’ என்று நகைச்சுவையாகக் கூறினார். எனவே சூழ்நிலையைப் பொறுத்தே மாற்று மொழியைக் கற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் நடக்கும். மாற்று மொழியைக் கற்றுக் கொள்வதாலேயே நம்முடைய தாய் மொழி சீர்குலைந்து விடுவதில்லை .

6. மகேசன்:
—————–

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, துணைவேந்தர் ஒருவரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியதாகவும், சரியான நேரத்திற்கு வந்து காத்திருந்த அவரை உரிய நேரத்தில் முதல் அமைச்சர் அழைக்காததால் துணைவேந்தர் எழுந்து சென்று விட்டதாகவும், பிறகு எம்.ஜி.ஆர். வருத்தம் தெரிவித்து அவரை மீண்டும் சந்தித்ததாகவும் ஒரு செய்தியைப் படித்திருக்கிறேன். ஆனால், இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறை செல்ல இருந்த ஒரு பெண்ணை , சம்பந்தமே இல்லாமல் ஏழு, எட்டு துணைவேந்தர்கள் நேரில் சென்று சந்திக்கிறார்கள். இவர்கள் தலைமையில் நம்முடைய பல்கலைக் கழகங்கள் சரியான பாதையில்தான் செல்கின்றனவா?

ஔவை நடராசன்:
—————————-

‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு இறையென்று வைக்கப்படும்’ என்ற வரிகளுக்கு ஏற்ப மக்கள் தலைவர்களுக்கு இருக்கும் மதிப்பும், செல்வாக்கும் சிறப்பான ஒன்றாகும். ஒரு கூட்டத்திற்கு அண்ணா காலதாமதமாக வந்தார். அவருக்கு முன்னால் கூட்டத்திற்கு வந்து விட்ட அமைச்சர் சி.சுப்ரமணியம், இதைக் குறித்து இடித்துக்காட்டும் வகையில் ‘delayed judgement is a denied judgement” என்று சொன்னார். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் அண்ணா “hurried judgement is a buried Judgement’ என்று சொன்னார். பல்வேறு அலுவல்களுக்கு இடையில் அவர்களால் சரியான காலத்திற்கு வர இயலாது. பொதுவாக அரசியல்வாதிகளுக்கு பல்வேறு மக்கள் பணிகள் இருக்கும். எனவே நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த துணைவேந்தர் பத்து நிமிடம் காத்திருந்தால் தவறில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால், இன்றைக்கு துணைவேந்தர்கள், தேவை கருதி தம்மை தாமே தாழ்த்திக் கொள்வது போலத் தெரிகிறது. அங்கே, இங்கே நடக்கிற சில சம்பவங்களைப் பெரிதுபடுத்திப் பேசுவதை நான் தவிர்த்து விடுகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *