கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை – 03.06.2009
========================================
பத்மஸ்ரீ ஔவை நடராசன்
(பகுதி – 2)
—————-
நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம், திருவள்ளுவர் ஒரு புதிய தொடர் அமைத்திருக்கிறார், “நூலாரும் நூல் வல்லார்” என்பது அந்தத் தொடர். நூலாசிரியர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரை நூலாசிரியர் என்று சுட்டிக் காட்டுவதை “நூலாரும் நூல் வல்லார்” என்று புகழாகச் சொல்வார்கள். நம்முடைய அருமைத் தலைவர் அவர்களைப் பலர் பாராட்டினாலும், அவர் எழுதி வைத்ததைப் படிக்கின்ற ஒரு மாணவன் என்ற வகையில்தான் நான் இருக்கிறேன்.
கணக்கெடுத்துப்பார்த்தால் கலைஞர் அவர்கள், ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு முதல் பத்துப் பக்கங்கள் எழுதுவார். அவரால் எழுதாமல் இருக்கவே முடியாது. எழுதாமல் இருப்பது என்பது மட்டுமில்லை. முப்பது நாள் என்று கணக்கெடுத்தால், 300 பக்கங்கள். ஒரு ஆண்டுக்கு என்று கணக்கெடுத்தால், 3600 பக்கங்கள். இதைக் கணக்கெடுத்துப்பார்த்தால், 70 ஆண்டுகளாக இந்தக் கரம் எழுதிய தாள்கள் இரண்டரை இலட்சத்தைத் தாண்டுகிறது. இவ்வளவு பக்கங்கள் எழுதியவர் இந்தியாவில் எனக்குத் தெரிந்தவரை வேறு எந்த நாட்டிலும் இல்லை.
வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய தொகுதிகள் என்று கணக்கெடுத்துப்பார்த்தால், அவருக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த தொகுதிகள் ஆறு தொகுதிகள். அவர் கதை எழுதியவர், கட்டுரை எழுதியவர். பக்கங்களின் எண்ணிக்கை என்று பார்த்தால், பதினைந்தாயிரம் பக்கங்கள்தான்.
அண்ணல் காந்தியடிகள் எழுதியது நூறு தொகுதிகளாக வெளிவந்திருக்கிறது. பண்டிதர் நேரு அவர்கள் எழுதிய தொகுதிகள் ஒரு பதினேழு தொகுதிகள் வந்துள்ளதைக் காணலாம். காந்தியடிகள் தன் வாழ்நாளில் கடைசிவரை எழுதினார். நெடிய கட்டுரைகளை எழுதுவதை நிறுத்திவிட்டு, கடிதங்களுக்கு மட்டும் இருபது முப்பது தொடர்கள் என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

Add a Comment