POST: 2023-03-24T08:02:08+05:30

கவிச் சக்கரவர்த்தி கம்பர்
திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம்

24.03.2023

செய்திக் குறிப்பு

கம்பன் ஓர் உலகப் பெருங்கவிஞர்;

உலகப் பெருங் காப்பியங்களின் வரிசையில், உன்னதமான இடம் வகிக்கும் ஒரு பெருங்காப்பியத்தைப் படைத்த பெருமைக்கு உரியவர்;

‘புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று சொல்லிப் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு
அருந்தமிழுக்கு அழியாகப் புகழ் சேர்த்தவர்.

இராமாவதாரம் என்ற கம்பர் காப்பியம்
பாலக் காண்டம், அயோத்தியாக் காண்டம், ஆரணியக் காண்டம், இலங்கைக் காண்டம் என ஆறு காண்டங்களாக 10,368 பாடல்களைக் கொண்டது.

ஒரு பாடலுக்கு நான்கு சீர்களில் இருந்து எட்டுச் சீர்கள் வரையிலான நான்கு அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டு படைத்தார்.

கம்பன் உருவாக்கிய காப்பிய மரபுகள், அவருக்குப் பின் காப்பியப் படைப்பில் ஈடுபட்ட அனைத்துக் கவிஞர்களாலும் பின்பற்றப்பட்டன என்பதில் ஐயமில்லை; இது, கம்பன் தோற்றுவித்த காப்பிய மரபுகளுக்குக் கிடைத்த வெற்றியே! தமிழ்த் கவிஞர்கள் மட்டும் அன்றிப் பிறமொழிக் கவிஞர்களும் கம்பனின் காப்பிய மரபுகளைப் பின்பற்றியுள்ளனர்.

‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவை கம்பர் படைத்த படைப்புகளாகும்.

தம் கவிபாடும் திறத்தால் புவி மக்கள் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட கவிஞர் கம்பர்!

அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.

அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் ‘கவிச்சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டினார்.

“கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

கவிச்சக்கரவர்த்தியை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில்
தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் மார்ச்சு திங்கள் 24ஆம் நாளன்று சென்னை அண்ணா சதுக்கத்திலுள்ள கம்பர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வகையில், 24.03.2023 வெள்ளிக் கிழமை அன்று காலை 9.30 மணிக்கு கம்பர் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வணக்கத்திற்குரிய மேயர், வணக்கத்திற்குரிய துணை மேயர், சீர் பெருமக்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *