முரசொலி – 27 2 2022 – பக்கம் எண் : 4
வரலாறு வெல்க வளர்பிறையாக !
முதல்வரின் புதல்வர் என
மகிழ்ந்திருந்தோம் அன்று
முதல்வர்களின் முதல்வர் என
வியந்து நிற்கிறோம் இன்று !
தயாளு அன்னையார் ஈன்ற
தயாளம் நீ
தலைமைக்கு வந்திருக்கும்
நிதானம் நீ !
மாற்றத்தின் ஊற்றாக
மறுமலர்ச்சிக் காற்றாக
மாநிலத்தின் விடிவாக
மலர்ந்து வந்த உதயம் நீ !
சங்கத்தமிழ்ச் சொற்றொடர்களின்
மங்கல முழக்கங்கள் –
எங்கெங்கும் ஒலிக்கட்டும் !
உன் இனிய பிறந்தநாளில் !..
திட்டங்கள் வரைவதில்
உனக்குப் பன்முகம்
திறமையில் அமைந்ததோ
பொன்முகம்
கலைகளைப்போற்றும்
கவின் முகம் !
கலங்கித் தவிப்போர்க்கு –
கண்ணீர் துடைக்கும் கை !
கடின உழைப்பும்
கடமை உணர்ச்சியும்
காலம் உன்னையே
எங்களுக்குக் காட்டுகிறது !
நினைவில் நிற்கும் நிகழ்ச்சி சில :
விலங்குகள் தங்கிய வண்டலூர் வனத்தில்
வேங்கை ஒன்று இறந்தது –
முதல்வர் ஓடி வந்தது – தவித்தது !
மாவீரன் அசோகன் மனத்தை
நினைக்க வைத்தது
கோவையில் மருத்துவமனையில்
கொடுமையில் வருந்துவோர்
துயர்நீங்க
நெருங்கி நலிவடைந்தோரிடம்
நின்று வருந்தியது !
அனைத்து மகளிருக்கும்
இலவசப் பேருந்துப் பயணம் !
நல்லாட்சிக்கு நற்சான்றாக
உள்ளாட்சி பெற்ற
ஒப்பிலா வெற்றி !!
எண்ணமுடியாத அறச்செயல்கள் –
எட்டுத் திசைகளிலும்
பட்டொளி வீசுகிறது ..
மன்னுக பெரும என –
மனங்குளிர வாழ்த்துகிறோம் !
வரலாறு வெல்க
வளர்பிறையாக !
வாழ்க !
வாழ்க பல்லாண்டு !!
வாழ்த்துகளோடு
ஒளவை நடராசன்

Add a Comment