தமிழ் விளக்கு அணைந்தது !
( 3. 7. 1948 -. 4 5 2021 )
மதிப்பு வாய்ந்த பதிப்பாளராக வாழ்ந்து தமிழறிஞர்களின் அரிய நூல்களைத் தேடித் திரட்டித் தமிழுக்குச் செழுமை ஊட்டியதைத் தமிழுலகம் என்றும் மறவாது .
நாடு முழுவதும் அலைந்து அலைந்து தொல்காப்பிய உரை வளத்தை ,சங்க இலக்கியக் கட்டுரைகளை – தொகை தொகையாக வெளியிட்டு தன்னுடைய நிலங்களையும் விற்றுப் பெரும் செலவு செய்த கொடை மனம் இளவழகனாரையே சாரும் .
நிறைவாகக் கடந்த ஆண்டு இன்றைய தமிழக முதல்வரைக் கொண்டு பேரறிஞர் அண்ணாவின் எழுத்து வடிவங்கள் முழுவதையும் 65 தொகுதிகளுக்கு மேல் வெளியிட்டார் .
தினமணி ஆசிரியர் கலாரசிகனில் அவரைப் பாராட்டிப் பாதுகாப்பான பழைய பனுவல்களைத் தேடி வெளியிட்டதையும் – அறிஞர் இளங்குமரனாரின் உரை நூல்களையும் வனப்பாகப் பதிப்பித்ததையும் என்றும் போற்ற வேண்டும் .
” எந்நாளும் தமிழ் – எப்பணியும் தமிழ்ப்பணியே ”
என்ற உயர்ந்த நோக்கத்தோடு தமிழுணர்வாளராக ஓங்கிய சிறப்படைந்து பொதுப்பணிகள் ஆற்றியதை நாடு நன்றியோடு நினைவு கூரும் .
இளவழகனாருடைய மறைவு –
இளவழகனாரின்றி அரிய நூல்கள் தொகுப்பாரின்றி புலம்பும் .
முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைந்து தமிழ்க்காட்சியகம் அமைக்க தன் சொந்த நிலத்தை வழங்கியதை எவரும் மறக்க முடியாது .
கொரோனா கொடுமை கண்ணில்லாமல் – ஒளிவிளக்கை அணைத்து விட்டது .
ஆற்றொணாத் துயரத்தோடு
ஒளவை நடராசன்

Add a Comment