*கல்வியில் காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டும்!
*என்னைக் கவர்ந்த கவிஞர்கள்!
* மிரட்டினால்தான் தமிழர்களுக்கு ஞானபீடம் கிடைக்குமா?
-தமிழறிஞர் ஒளவை நடராஜன் சிறப்பு நேர்காணல்!
இனிய உதயம் vol 20-issue 08
Jan 2021 ரூ 30/- இலக்கியத் திங்கள் இதழ்
———————————————————
தமிழறிஞர் ஒளவை நடராசன் –
ஆழ்ந்தகன்ற அறிஞரான இவரை அறியாதவர் எவருண்டு இங்கு? இந்திய அரசால் ’பத்மஸ்ரீ ’விருதுகொடுத்துச் சிறப்பிக்கப்பட்டவர் இவர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தராகவும், தமிழக அரசின் செய்தித்துறைச் செயலாளராகவும், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகவும் பொறுப்பேற்றுத் திறம்பட செயலாற்றியவர். தனது தனித்துவத் தன்மைகளால் கலை இலக்கிய பண்பாட்டுத் துறையில் முத்திரை பதித்து, இலக்கியவாதிகளின் இதயங்களில் எல்லாம் நீங்கா இடம் பெற்றவர்.
உலகத் தமிழர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நிறைமொழிப் பேச்சாளர், கனிவும் பணிவும் கைவரப்பெற்றவர். இவரின் உரைகேட்போர் உள்ளம் புதுப் புதுச் செய்திகளால் நிரம்பி வழியும். தெளிந்த சொற்களில் தேர்ந்த சிந்தனைகளை அள்ளித் தரும் அவரோடு, தமிழர் திருநாளுக்காக நாம் கண்ட சிறப்பு நேர்காணல் இதோ…
1 பள்ளிப் பருவத்திலேயே தமிழிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தவர்கள் நீங்கள். பெருந்தமிழறிஞரான தங்களின் தந்தையார், இலக்கியத்தின் பால் எப்படித் தங்களை நெறிப்படுத்தினார் ?
வடார்க்காடு மாவட்டத்தில் திருவத்திபுரம் – செய்யாறு என்னும் பேரூரில் தான் நான் 1936 இல் பிறந்தேன். என் தந்தையார் அப்போது நகராட்சிப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்தார்.
தமிழாசிரியராகப் பணியாற்றிய போது செய்யாற்றில் பிறந்த எனக்கு, நான் வளர்ந்த நான்கு ஆண்டுகள் நினைவில்லை. அதன் பிறகு செய்யாற்றிலிருந்து செங்கம், போளூர் ஆகிய ஊர்களுக்கு மாறுதலானார். பிறகு திருப்பதியில் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கீழ்த்திசைக் கல்லூரியில் பணியேற்கச் சென்றார். நான் திருப்பதிக்குச் சென்ற ஆண்டு நினைவிருக்கிறது.
திருப்பதியில் தான் பள்ளி முதல் வகுப்பே தொடங்கியது என்று நினைக்கிறேன்.பிறகு திருப்பதியிலிருந்து அண்ணாமலை பல்கலைகழகத்தில் என் தந்தையார் பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். நான்காம் வகுப்பு முதல் பள்ளியின் பத்தாம் வகுப்பு வரையில் நான் அண்ணாமலை நகரில் பள்ளிக்கல்வி பயின்றேன்.
அண்ணாமலை நகரின் சூழலை நினைத்துப் பார்த்தால், எங்கும் தமிழ் வளம் கமழ்கின்ற ஒரு கலைக்கோயிலுக்குள் இருந்த நினைவு எனக்குத் தோன்றுகிறது.
காரணம் தந்தையாருடன் நெருங்கிய நண்பர்களான அறிஞர் வெள்ளைவாரணனார் – கல்வெட்டு ஆராய்ச்சிப் பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார் முதலிய அறிஞர் பெருமக்களுடன் என் தந்தையார் பழகுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அப்போது அவர்கள் பேசிய பேச்சின் இனிமையையும், தமிழ் மொழியின் வனப்பையும் கண்டு எனக்கு இலக்கியத்தின் பால் ஈர்ப்பு இயல்பாக வந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
எல்லாவற்றையும் விட எனக்குச் சிறப்பாக இருந்தது, எனக்கு உயர்நிலைப் பள்ளியிலே தமிழாசிரியராகத் திகழ்ந்தவர் பெயர் புலவர் கணபதி என்பதாகும். அவர் கணபதி என்ற பெயரைக்கூடக் குழு உத்தலைவன் என்று குறிப்பாக வடசொல்லை மொழிபெயர்த்துத் தமிழ்ப்பெயரிட வேண்டும் என அவர் வலியுறுத்தியது எனக்கு நினைவிருக்கிறது.
ஆசிரியர்கள் குழுவில் புலவர் கணபதி அவர்களைக் காண்பது மகிழ்ச்சி தருவதாகவும், எழுச்சியூட்டுவதாகவும் இருந்தது , அவர் பாடம் நடத்துகிற பாங்கு உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அப்பொழுது பேச்சுப்’போட்டி, சொற்போர் , ஒப்புவித்தல் முதலியவற்றுக்கு எங்களைப் பயிற்றுவித்த பெருமையும் அவரைத்தான் சாரும். அவர் வகுப்பில் எடுத்துக்கூறுகிற பாடல்களை நான் அப்படியே திருப்பிக் கூறினேன். தேசியகவி பாரதியாரின் பாடல்களை விடப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்களைத் தான் அவர் எப்போதும் எடுத்துச் சொல்வார். ஆகவே, திராவிடர் கழகச் சூழல், தனித்தமிழ்ப்பற்று, தமிழ்வீறு, இந்தி எதிர்ப்பு முதலிய கொள்கைளெல்லாம் எனக்கு உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டமாக வளர்ந்தன .
என் தந்தையாரைக் கண்டு பேசுபவர்களுக்கு இடையில் பல்கலைக்கழக மன்றங்களில் சொற்பொழிவாற்றும் அறிஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் உண்டு.
அவ்வப்போது அவர் பேசுகின்ற அரங்கங்களிலும், பேரவைகளிலும் அவர் ஆற்றும் உரைகளை நான் அப்போதே ஆர்வமாகக் கேட்பேன். தந்தையுடைய புகழும் அவர் பேசிய மேடையுரைகளும் தான் எனக்கு ஆர்வத்தை உருவாக்கிற்று.
தந்தையாரோ தமிழ் படிப்பென்பது உனக்குத் தானாக வரும். புதிய கலைகளைப் புதிய அறிவியல் பிரிவுகளைப் படிக்க வேண்டும் என எப்போதும் என்னைத் தூண்டினார் என்றாலும் நீங்கள் சொல்வது போல, என் மனத்தைத் தமிழுக்காகப் பறிகொடுத்து விட்டேன். தமிழ் உணர்வுக்காகவே வாழ்வது என்ற ஆர்வம் என்பால் மெல்லப் படர ஆரம்பித்தது.
2 பச்சையப்பன் கல்லூரியில் நீங்கள் தமிழ் படிக்க என்ன காரணம் ? தமிழ் படித்தால் வளமான வாழ்க்கையைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் படித்தீர்களா ?
அப்படி எந்த நோக்கமும் அப்போது எனக்கு இருந்ததாகத் தெரியவில்லை. இயல்பாகப் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, கல்லூரியில் போய்ச் சேர வேண்டும் என்ற நாட்டம் வளர்ந்தது.
படிக்கத் தொடங்கிய காலத்தில் பல்கலைக்கழக இடைநிலை வகுப்பில் நான் தியாகராசர் கல்லூரியில் சேர்ந்தேன். நான் அங்கு சேர்ந்த ஈராண்டுகளின் போது, அறிவியல் பாடங்கள் எனக்கு அறவே வராமல் போய் திக்கு முக்காடிப் போனேன். அதனால் தான் மீளப்படித்துத் தமிழ்ப் பிரிவுக்கு மாற்றம் பெற்றேன். அப்படி தமிழ்ப்பிரிவுக்கு மாற்றம் பெற்றதனால், நான் முதுகலையில் எந்தக் கல்லூரிக்குச் செல்வது என மருண்ட போது, அப்போது பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பி.ஏ. ஆனர்ஸ் என்ற ஒரு பிரிவு இருந்தது.
இடைநிலை வகுப்பு முடித்தவர்கள் நேராக அங்குப் போய்ச் சேரலாம். மூன்றாண்டுகள் முடித்த பிறகு தமிழ் பி.ஏ. ஆனர்ஸ் என்ற பட்டம் கிடைக்கும். இப்படியொரு கல்வியமைப்பு இருந்ததால் அப்போதே நான் முதுகலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால், உடனிருந்த என் இனிய நண்பர் திரு.இ .சு .பாலசுந்தரமும் நானும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தோம்.
தமிழ் முதுகலைப் பாடம், அந்த நாளில் சென்னையில் மட்டும்தான் இருந்தது. வேறு எந்த ஊரிலும் இல்லை. எனவே சென்னைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில் என் தந்தையும் விரும்பி அனுப்பினார்.
3 மு.வ. அப்போது உங்கள் பேராசிரியர் அல்லவா? அவர் உங்களிடம் தமிழ்ப்படிக்க வேண்டாம் என்று சொன்னாராமே?
அப்போதே பேராசிரியர் மு.வ வின் பெரும் புகழ் நாடறிந்ததாகும். அறிஞர் மு.வ எழுதிய புதினங்களை நான் பள்ளி மாணவனாக இருந்த போதே பலர் கையில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
வீட்டுக்குப் பால் விற்க வரும் பாலன் என்பவர், தோளில் இணை கயிறும், மறு கையில் மு.வ-வின் புதினத்தையும் வைத்துக் கொண்டு தான் வருவார். எனக்கு மு.வ எழுத்தின் மீது அவ்வளவு விருப்பம் என்று அவர் உணர்ச்சி பொங்கக் கூறினார் .மு.வ வைப் பார்த்தால் எங்களுக்குப் போதும் என்ற பெருவிருப்பத்தால், நான் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தேன். பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது.
நாங்கள் விடுதியில் வளர்ந்தோம். பேராசிரியர் மு.வ என்னிடத்தில் மட்டுமல்ல எவரிடமும் சொல்வார், ”
வாழ்க்கை என்பது வளமாக அமைய வேண்டும். வாழ்க்கையில் செல்வம் சேர்வது என்பது பெருமிதம் தரும் இயல்பாகும். தமிழ்க்கல்வியில் அதற்கு வாய்ப்பிருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே அறிவியல், தொழிலியல் கல்வியில் நீங்கள் ஏன் சேரவில்லை ?” என்பார்.
கலையியல் என்பது நாம் முயன்றால் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அறிவியலையும், தொழிலியலையும் நாம் தொடர்ந்து பாடநூல்களிலும் – பயிற்சியிலும் தான் வளர்த்துக் கொள்ளமுடியும். என்னைக் கேட்கிறார்கள் ? ஏன் உங்கள் மக்களைத் தமிழ் படிக்க வைக்கவில்லையென்று ? நான் தமிழ் படிக்க வேண்டாம் என்று எவரையும் தடுக்கவில்லை. ஆனால் என்னுடைய பிள்ளைகளுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் இருந்ததால், என்னுடைய மகன்கள் மூன்று பேருமே மருத்துவத் துறைக்குச் சென்றார்கள்.
எனவே தான் அப்போது மு.வ எங்களைப் பார்த்துக் கேட்டார். ’ நீ ஏன் தமிழ் படிக்க வந்தாய்? தமிழ் முயற்சி என்பது தமிழார்வத்தினால், தமிழ் எழுச்சியினால் முயன்றால் பெற்றுக் கொள்ளலாமே” என்று பரிவோடுதான் கேட்டார்.
இதனால் அவர் தமிழ்க்கல்வியைத் தடுத்தார் என்று பொருளில்லை. தமிழ் மக்கள் தம் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் ஓங்கிய சிறப்போடும், உயர்ந்த திறமையோடும் விளங்க வேண்டும் என்ற பேரவாக் கொண்டிருந்தார் அவர். அந்த வகையில் அறிஞர் மு.வ அவ்வாறு சொன்னாரே தவிர, தமிழ்க்கல்வியைத் தடுத்தார் என்று நான் கருதவில்லை.
அவர் நினைத்ததெல்லாம் எல்லாக் கல்வியையும் நம் தமிழர்கள் பெறவேண்டும். தமிழர்கள் எல்லா நலங்களிலும் சிறந்து விளங்கவேண்டும் என்ற கருத்தை வைத்துத்தான் சொன்னார். அது மட்டுமில்லாமல், அவர் அப்போது சொன்னார், மரபாகப் படித்து வருபவர்களைக் காட்டிலும், மதிப்பெண்களை நிறையப் பெற்று மருத்துவத்திலும், பொறியியலிலும் சேர்ந்திருப்பவர்களைப் பார்க்கும் போது, எனக்குப் பெருமையாகக் கூட இருக்கிறது என்று எங்கள் வகுப்புகளிலும் கூடச் சொல்லியிருக்கிறார்.
4 சங்க இலக்கியத்தில் இருந்து சமகால இலக்கியம் வரை ஆழ்ந்து கற்றவர் நீங்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் நுட்பமான ஆய்வு இன்றும் மேற்கொள்ளப்படுது என்று நினைக்கிறீர்களா ? அதில் மானுடவியல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா ?
காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. கருத்துக்கள் அந்தந்த காலத்திற்கு ஏற்றவகையில் அமைகின்றன. புதுமைகள் நாளும் பூத்து மணம் கொழிக்கின்றன .மேலும் வாழ்வியல் மிகப்பெரிய மாற்றங்களைப் பெற்றிருக்கின்றது . அறிவியற் கருவிகளும் பொறியியல் திறமையும் புதுமைகளும் ஓங்கி வளர்ந்திருக்கும் போது எல்லாக் கலைகளும் நாம் எதிர்பாராத பெரிய மாற்றங்களைப் பெறுகின்றன. அந்த வகையிலே தமிழ்க்கல்வியும், அனைத்து அறிவியல் கோட்பாட்டையும் சார்ந்திருக்கவேண்டும் .
“நனியுண்டு நனியுண்டு காதல் தமிழ் நாட்டினர்
யாவருக்குமே தமிழ் மீதில்’ என்பது புரட்சிக்கவிஞருடைய பொன்வரிகளாகும்.
அந்த வகையில் இப்போது, தமிழ் முதுகலை பயில்கின்ற மாணவர்களைப் பற்றி எண்ணும் போது, எனக்கு கூடக் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
ஏன் முதுகலை படிக்க வந்தீர்கள் என்று கேட்டால் வேறு துறைகளில் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்கிறார்கள். கடைசியாக, வாழ்க்கைக்கு இதுதான் முடிவு என்று நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல்லும்போது அவலமாக இருக்கிறது.
எனவே, இலக்கிய ஆய்வு என்பது உரிய மாற்றங்களைப் பெறவேண்டும். இலக்கியங்களைப் புதுமையாக எவ்வாறு ஆராய்வது ?
தமிழ்க்கலைக் கல்லூரிகளில் தொன்மையான இலக்கண இலக்கியக் கூறுகளை வைத்துக் கொண்டு காண்பதா?
அல்லது உலக நாடுகளில் வளர்ந்திருக்கின்ற இலக்கியப் போக்குகளையும் – நோக்குகளையும் ஆராய்ந்து தமிழையும் உறவு வைத்துக் காண்பதா?
என்ற ஒரு போக்கினைக் கண்ட போது, முதலில் எனக்குக் கூட மருட்சியாகத் தான் தோன்றியது. ஆனால் இப்போது புதுமையின் விளைவாகப் பல்வேறு கருத்துக்களை ஆய்வாளர்கள் சொல்லி வருகிறார்கள்.
அந்தக் கருத்துப் பழமையைப் போற்றிய வகையில் நம் காதுக்குப் பல நேரங்களில் கசப்பாகக்கூடத் தெரிகிறது. ஆனாலும் அந்தக் கசப்பை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் நான் முடிவு கண்டேன்.
எனவே என் தந்தையாரும் கூட உரை எழுதும் போதே செல்வார்.
“என் காலத்திற்கேற்ற வகையில் என் எண்ணங்களை எழுதி வருகிறேன். பொருந்தாத கருத்துக்கள் என்று சொன்னால், அதை மறுத்துப் புதிய வழியில் தொடங்குவது நல்லது.
சமயக் கருத்துக்களை, சித்தாந்தக் கொள்கைகளாக அல்லது பழைய சிந்தனைகளாகத் தமிழ் மக்கள் தம் காலத்திற்கேற்றவாறு கண்டார்கள். ஆனால் இன்றைய நிலையில் அக்கருத்துக்கள் வாழ்க்கைக்குப் பொருந்தும் என்று நான் வலியுறுத்த மாட்டேன்” என்று சொல்வார்கள்.
அந்த வகையிலே மானுடவியல் மட்டுமன்று அறிவியல் பிரிவுகள் எல்லாவற்றிலும் சேர்ந்து உளவியல் பாங்கில் இலக்கியங்களை அணுகும் முறையால் தமிழ் நாளும் வளர வேண்டும். அதை மிகவும் மகிழ்ச்சியாக இருகை நீட்டி வரவேற்றுப் பாராட்ட வேண்டும் என்பது தான் என் முடிவு.
5 மிகச் சிறந்த பேச்சாளரான தங்களது முதல் பேச்சு, எங்கு எப்போது அரங்கேறியது?
என்னால் நினைவு கூர இயலவில்லை .
பேசுவது என்பது இயல்பாக வாழ்க்கையில் பிறந்தது.
நான் பள்ளிப் பருவத்திலேயே மேடையில் பேசிப் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். மனனம் செய்து ஒப்புவித்தல் போட்டியிலும் நான் முதல் பரிசு பெற்றிருக்கிறேன். அந்த வகையிலே தான் கல்லூரிக்கு வந்த போது, பச்சையப்பன் கல்லூரியில் படித்த போது, அனைத்துக் கல்லூரிகளுக்கும் இடையிலான பேச்சுப் போட்டி வைத்திருந்தார்கள். அந்தப் பேச்சு போட்டியில் பங்கு பெறுகின்ற வகையில், நான் வேறு கல்லூரி மாணவர்களோடு நட்புக் கொண்டிருக்கிறேன்.
அந்தப் போட்டிகளில் பங்கெடுத்துப் பரிசு பெற்றதால் அடைந்த ஊக்கத்தை நான் நினைத்துப் பார்த்தால் இன்பமாகத்தான் இருக்கிறது .
நான் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றி இருக்கின்றேன். அங்குப் பணியாற்றிய ஐந்தாண்டுகளில் சனி, ஞாயிறு என்று வந்தால், அயல் ஊர்களுக்குச் சென்று தமிழ்க்கூட்டங்களில் உரையாற்றுவது, மாநாடுகளில் பங்கு பெறுவது என்ற வகையில் பாரதியார் விழாவிலும் – பாவேந்தர் விழாவிலும் சங்க இலக்கிய விழாக்களிலும் பங்கு கொண்டு பேசியிருக்கிறேன்.
என்னுடைய பேச்சை ஆர்வத்தோடு வரவேற்று மிகச் சிறப்பாக நீங்கள் பேசுகிறீர்கள் என்று சொல்லி மூன்று நாட்கள் எனது உரையைக் கேட்ட பெருமை காரைக்குடி நண்பர்களையே சாரும்.
காரைக்குடியில் தான் நான் பேசுவதை மக்கள் கேட்டு மகிழ்ந்தார்கள். ஒரு மணி நேரம் பேசியதாக நினைவிருக்கிறது. காரைக்குடிக்கு அப்போது நான் வாரந்தவறாமல் சென்று பேசியதும், பின்னர் அழகப்பர் கல்லூரியில் பேசியதும் நினைவில் நிழலாடுகின்றன.
காரைக்குடியில் நான் பங்கு கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணா அவர்களும் கலைவாணர் என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களும் பங்கு கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவே நானும் அமர்ந்து ’இதுவல்லவா இன்பம்’ என்று உரையாற்றியதை இன்றும் நான் நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
6 நீங்கள் தியாகராசர் கல்லூரியில் பாடம் நடத்தினாலும் கவிஞர்களை வளர்த்த பெருமை உங்களின் பெரிய சிறப்பாகிறதே !
தியாகராசர் கல்லூரியில் நான் விரிவுரையாளராகக் கூட இல்லை. உரையாளனாக இருந்தேன். அப்போது உடனிருந்த ஆசிரியர்களைக் காட்டிலும் பிற வகுப்புகளில் பேராசிரியர்கள் வராத நேரத்தில், மாணவர்களின் உரை நிகழ்ச்ச்சிகளுக்குத் போய்த் தலைமை தாங்கும் வாய்ப்பும் எனக்கு வந்தன .
அப்போது நான் எனது கருத்துக்களை எடுத்துச் சொல்லவும், அதில் மாணவர்கள் ஆர்வம் காட்டவும், நான் புதிய நூல்களைப் படிக்கவும், கவிதைகளை நயமோடு எடுத்துச் சொல்லவும் ஆர்வம் கொண்டேன்.
அந்த ஆர்வத்துடைய ஒரு படர்ச்சியாகத்தான்
கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மீ .இராஜேந்திரன், கவிஞர் மேத்தா, கவிஞர் அபிபுல்லா, கவிஞர் காமராசன் இருந்தனர். பெயர்களில் சிலவற்றை நான் மறதி காரணமாக விட்டுவிட்டால் நண்பர்கள் வருந்த வேண்டாம் என்று சொல்வேன்.
ஏறத்தாழ எனது வகுப்பில் படித்தவர்கள் அவ்வளவு பேரும் கவிஞர்களாகவே மாறிவிட்டார்கள். ’ பாடும் பறவைகளின் கூடு’ என்று எனது வகுப்பறையைக் கவிஞர் சுரதா எழுதிப் போற்றினார் .
அந்த வகையில் அருமையான கருத்துகளைத் திறமையாக எடுத்துக் கூறுவதில் பெரிய ஆர்வம் வந்தது.
நூற்றாண்டு காணும் சுரதா குறித்து ஒன்றைக் கூற மறந்து விட்டேன். பச்சையப்பன் கல்லூரியில் நான் இருந்த போதே எனக்கு பெருமதிப்பிற்குரிய நண்பர் என்று சொல்ல மாட்டேன், தலைவர் போன்று விளங்கினார் கவியரசர் சுரதா. எனவே சுரதா அவர்களோடு நான் சுற்றாத இடமில்லை. செல்லாத திரையரங்கமில்லை, அவர் பேசுவதைக் கேட்டு மகிழாத நாளில்லை.
பச்சையப்பன் கல்லூரியில் எனது அறையிலேயே பல நாள்கள் அவர் தங்கியிருக்கிறார். அவர் பாடுகின்ற முறையும், விருத்தங்களை அவர் எழுதிக் காட்டுகின்ற நெறியும் பெரிய தமிழ்க்காதலை எங்கள் நெஞ்சங்களில் கிளர்ந்து எழச்செய்தன . அதன் விளைவாகத் தான் உவமைக்கவிஞர் சுரதா அவர்களுடைய பாட்டுவரிகள் போல அமைய வேண்டும் என்ற எண்ணத்தை எங்குப் பார்த்தாலும் சொன்னேன்.
எண்ணிப்பார்த்தால் 1956 – 58 ஆண்டுகளில் வளர்ந்த கவிஞர்கள் அவ்வளவு பேரும் சுரதா அவர்களின் போக்கில் சாய்ந்தவர்களே .அந்த வகையிலேதான் கவிஞர்களுக்கு நடுவில் என்னுடைய நட்பை நான் வளர்த்துக் கொள்ள முடிந்தது.
பச்சையப்பன் கல்லூரியில் என் வகுப்பில் உடன் பயின்ற கவிஞர் நீலமணி ஒப்பற்ற திறமை கொண்டவர் .என்னை விழுங்கி ஏப்பம் விடுகிற நீலமணிக்கு எவரும் நிகரில்லை என்று சுரதா கூறினார் .
அதே நிலையில் கவியரசனாக மின்னூர் சீனிவாசனும்,வல்லம் வேங்கடபதியும் மிளிர்ந்தார்கள் .வகுப்பில் பாடம் நடக்கும் போது நான் முதல் வரியில் தொடங்க, வல்லம் வேங்கடபதி தேனாக விருத்தத்தை முடித்துக்காட்டும் திறமையாளர் .
7 சரபோஜி மன்னர் கல்லூரியில் பணிபுரிந்த காலத்தின், இனிக்கும் நினைவுகள் சிலவற்றைப் பகிரமுடியுமா ?
வேலை பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தால் நான் சரபோஜி மன்னர் கல்லூரியில் பணிபுரிந்தேன்.
அங்கு மாணவர்கள் நான் பேசிய நடையையும், முறையையும் கண்டு என்னிடம் ஒட்டிக் கொண்டனர். எனக்கும் மாணவர்களுக்கும் அவ்வளவு நேயம் வளர்ந்தது.
கலைப்போட்டிகளிடையே மாணவர்களுக்குக் கவிதைகளைச் சொல்லிக்காட்டுவது என்ற நட்புறவு மிகப் பெரிதாக ஓங்கி வளர்ந்திருந்தது.
இன்னும் கூட நினைக்கிறேன், நான் சரபோஜி மன்னர் கல்லூரியில் இருந்த போதுதான், நான் சென்னையிலிருந்தது போல் மகிழ்ச்சியோடு இருந்ததோடு மட்டுமல்லாமல் நான் விடுதிக்குக் காப்பாளராகவும் இருந்தேன்.
எனவே மாணவர்களுக்கும் எனக்கும் அவ்வளவு நட்பு இருந்தது. புரட்சித்தலைவர் அவர்கள் மூன்று நாள்கள் நாடகம் நடத்துவதற்காகத் தஞ்சைக்கு வந்திருந்தார். ’இன்பக் கனவு ’ என்பது நாடகத்தின் பெயர்.
மாணவர்கள் என்னைப் பிடித்துக்கொண்டு உங்களுக்குத் தான் எல்லோரையும் தெரியுமே. புரட்சித் தலைவரை எப்படியாவது நம் கல்லூரிக்கு அழைத்து வாருங்கள் என்று கூறினர். அந்த நாளில் புரட்சித் தலைவர் ஒரு கல்லூரிக்கு வருவதென்பது மாபெரும் கனவாகும் . யாரும் அவரை அவ்வளவு எளிதில் அணுகமுடியாது. ஆனால் புரட்சித்தலைவரிடம் பணியாற்றிக் கொண்டிருந்த கவிஞர் முத்துக்கூத்தன் எனக்குப் பச்சையப்பன் கல்லூரியிலிருந்தே நண்பரானவர். அது மட்டுமல்லாமல், கவியரசர் சுரதாவோடு நான் சென்றிருந்த போது புரட்சித் தலைவரைக் கண்டிருக்கிறேன். பேசியிருக்கிறேன்.
புரட்சித் தலைவருடைய தமையனார் பெருந்தகை சக்கரபாணி அவர்களோடு நாங்கள் நட்பாகப் பழகியிருக்கிறோம்.
அந்த வகையில் நான் புரட்சித் தலைவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன போது கவிஞர் முத்துக்கூத்தன் ’ வாங்க எவ்வளவு நாளாயிற்று உங்களைப் பார்த்து’ என்று மகிழ்ச்சியோடு அவரிடம் அழைத்துக் கொண்டு போனார்.
புரட்சித் தலைவர் என்னைப் பார்த்து ‘எங்கே இருக்கிறீர்கள் நடராசன்’ என்று கேட்டார். அப்போது அவருக்கு நடராசன் என்ற பெயர் தான் நினைவுக்கு வந்தது. நான் இந்தக் கல்லூரியில் பணிபுரிகின்றேன். புரட்சித் தலைவரை மாணவர்கள் – ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எல்லோரும் புரட்சித்தலைவர் கல்லூரிக்கு வர வேண்டும், பேச வேண்டும் என்று துடிக்கிறார்கள் என்று கூறினேன். அதற்கென்ன ? நீங்கள் சொல்லும் நாளில் வருகிறேன் என்றார். ஆனால் அவரைச் சுற்றியிருந்தவர்கள் – தலைவரே , நீங்கள் ஒரு பத்துமணித் துளிகள் பேசலாம். மாணவர்களைப் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இருக்க வைக்க முடியாது. அதோடு கட்சிக்கூட்டங்கள் எல்லாம் இருக்கின்றன எனப் பலபேர் சொன்னார்கள்.
நம்ப மாட்டீர்கள். சரபோஜி மன்னர் கல்லூரிக்கு வந்து ஒரு மணி நேரம் பேசினார் எம்.ஜி.ஆர். அவர் உடுத்தியிருந்த உடை, அவர் அணிந்திருந்த கண்ணாடி, கையிலிருந்த கடிகாரம் மிகப் பெரிய அணிகலன்களாக அவரை மேலும் அழகு செய்தன . அந்த நாள் கல்லூரிக்குப் பொன்னாளாக அமைந்தது .
மேலும், தஞ்சையில் நான் தமிழறிஞர்கள் பலரிடம் பழகியிருக்கிறேன்.
பள்ளியகரம் நீ. கந்தசாமி பிள்ளை பேரறிவுப் பெருங்கடல். திருவையாற்றுக் கல்லூரியில் இராம. கோவிந்தசாமி பிள்ளை அவர்களெல்லாம் மிகப்பெரிய கல்விவாணர்கள்.
அதே போல வழக்கறிஞர் டி.என்.ஆர். கல்வியில் கரைகண்டவர். ஆங்கிலமும், தமிழும் ஆகிய இரண்டு கடல்களையும் நீந்தி வென்றவர். இவர்களுக்கு நடுவிலே தான் நான் எப்போதும் இருப்பேன். எனவே இவர்களிடத்தில் பொழுதைக் கழித்தபோது எனக்குக் கல்வி வளர – உலகியலை நான் உணர – வாழ்வியலில் தெளிவு பெற மிகப் பெரிதாக இருந்தன . இப்படித்தான் என் தமிழும் வளர்ந்தது.
8 சமீப காலங்களில் நம் தமிழ் விழாக்கள் பின்தள்ளப்பட்டு, வடக்கத்திய விழாக்களைச் சிலர் முன்னிலைப்படுத்துவதால், நம் பண்பாடு சீரழிவுக்கு உள்ளாகாதா ?
மரபுக் கலைகளும் தமிழுணர்வோடு சார்ந்த விழாக்களும் , மெல்ல மெல்ல நலிந்த நிலையில் தேய்ந்து வருகின்றன. முன்னர் மாநில உணர்வு என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் ,முத்தமிழறிஞர் கலைஞரும், தமிழ் மக்கள் நெஞ்சில் எழுச்சித் தீயை அணையாமல் வளர்த்து வந்திருக்கிறார்கள்.
இதனால் காலத்தினுடைய மாற்றமும் அரசியல் போக்கும் திசை மாறின . இந்த நிலையில் மாநில உணர்வுகள் மிஞ்சினால் இந்திய அரசுக்கு இடர்ப்பாட்டை உருவாக்கும் என்ற பிழையான எண்ணம் படர ஆரம்பித்தது. அந்தப் படர்ச்சி நல்லது இல்லை.
மாநிலங்கள் தலைமையும் முதன்மையும் பெறுகின்றபோது, நாம் நினைக்கிற நல்வாழ்வும் நற்கலைகளும் தமிழ்ப் பண்பாடும் சிறந்து ஓங்கும் என்று நம்புகிறேன்.
9 எல்லாக் கவிஞர்களையும் உச்சி மேல் வைத்து மெச்சுகிறவர் தாங்கள் என்பதால் கேட்கிறோம்.
பக்கத்து மாநில மொழிக் கவிஞர்களுக்குக் கூட ஞானபீட விருது கிடைக்கிறது. ஆனால் அது தமிழ்க் கவிஞர்களில் ஒருவருக்குக் கூட இதுவரை கிடைக்கவில்லையே ?
* தமிழகத்தில் வாழும் கவியரசர்கள் ஈடில்லாத கவிதைகளைப் படைத்து, எட்ட முடியாத உயரங்களைத் தொட்டிருக்கிறார்கள்.
அவர்களின் படைப்புகளைக் கண்டு அயல்நாட்டவர் சிலரிடம் நான் மொழிப் பெயர்த்துச் கூறியதைக் கேட்டு வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.
நான் பழகியதில் வாழும் கவிப்பேரரசு வைரமுத்து, கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், சாகித்ய அகாதமியின் துணைத் தலைவராகவும் திகழும் கவியரசர் சிற்பி பாலசுப்பிரமணியம், புதுக்கவிதை தமிழகத்தில் பிறந்த போதே அதனை எடுத்து வளர்த்து எழில் கூட்டிய பெருமைமிகு கவிஞர் மு.மேத்தா, நான் முன்னமே குறிப்பிட்டதைப் போல, கல்லூரியியில் என்னோடு உடன் படித்தவரும், எழுத்துக்கு எழுத்து என்னை இவர் விஞ்சிவிடுவார் போலிருக்கிறது என்று சுரதாவால் குறிப்பிடப்பட்டவருமான கவியரசர் நீலமணி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனிடத்தில் நெருங்கிப் பழகி, அவரது நெஞ்சைக் கவர்ந்து, இன்றுவரை முல்லைச்சரம் கவிதை இதழை நடத்திவரும் கவிஞர் பொன்னடியான், கவியரசர் புலமைப்பித்தன். மறைந்த பொன்னிவளவன் ,புலவர் இளஞ்செழியன் என என் நெஞ்சைக் கவர்ந்த பலரை நான் நினைக்கிறேன் .
அதேபோல் கவிஞர் சென்னிமலை தண்டபாணி எளிய நடையில் எழுதும் எரிமலை எண்ணங்களைக் கொண்டிருக்கிறார் . இத்தனைக் கவியரசர்கள் நம்மிடையே இருந்தும் இதுவரை ஞானபீட விருது, இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காதது வருத்தத்திற்குரியது.
இந்திக் கவிஞர்களைப் போற்றுவது போல மாநிலக் கவிஞர்களை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று என்னிடத்தில் ஒருமுறை கேட்டார்கள் .
இதிகாசக் கதை மாந்தர்களை உயர்த்திப் பிடிப்பதில் பிற மாநிலக் கவிஞர்கள் – கதையாசிரியர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் .தமிழில்தான் தன்மானப் புரட்சியான எண்ணங்கள் பூத்துள்ளன என்று சொன்னேன். தொன்மங்களில் தோய்ந்து புரள்வதை தமிழ்க்கவிஞர்கள் வெறுத்துப் பல ஆண்டுகள் கழிந்துவிட்டன .
ஒரு நிகழ்ச்சி இப்போது என் நினைவுக்கு வருகிறது. நான் தமிழ் வளர்ச்சித்துறையில் செயலாளராக இருந்தபோது, என்னோடு இசை மாமன்றச் செயலாளர் என்ற வகையில், என் நண்பரும் தொழிலதிபருமான டி.டி.கே வாசு , சங்கீத அகாதமியின் சார்பில் தில்லியில் நடந்த சங்கீத அகாதெமியின் செயற்குழுவுக்கு வந்திருந்தார்.
அந்த ஆண்டின் விருதுகளை அங்கே அறிவித்த போது, அந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பெயரும் இல்லை. அது நல்ல மாலை வேளையில் நடந்த நிகழ்ச்சி. டி.டி.கே வாசு அவர்கள், இதனால் கோபமுற்றுத் திடுமென எழுந்து நின்று, கைகளை வலுவாக வீசியபடி தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு ஐந்து இடங்களைக் கூடத் தரவில்லை என்றால், உங்களைத் தொலைத்துவிடுவேன் என உரக்க அதட்டிக் கூறினார்.
அவருடைய உரத்த குரலைக் கேட்டு அஞ்சி ஐவருக்கு விருதுகளை அப்போதே அறிவித்தார்கள். எனவே கையசைத்துக் காட்டி, மிரட்டுகிறவர்களைக் கண்டுதான், அச்சுறுத்துகிறவர்களைக் கண்டுதான் விருதுகள் வரும் என்ற தில்லியின் போக்கு நல்ல போக்காக எனக்கு அப்போதே தெரியவில்லை.இதுதான் ஞானபீடத்துக்கும் விடை .
10 தங்கள் நெஞ்சில் நிறைந்த ஆசிரியப் பெருமக்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா ?
பள்ளியில் நான் பயிலும் போது எனக்குக் கற்பித்த ஆசிரியர் புலவர் கணபதி அவர்களை மறக்கமுடியாது. அதேபோல், தியாகராசர் கல்லூரியில் நான் பணியாற்றும் போது உடனிருந்த பேராசிரியர் ஆர்.சங்கரநாராயணன் , பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் மு.வ., பேராசிரியர் அ.மு.ப. ஆகியோரை எல்லாம் எண்ணிப் பார்க்கிறேன். பேராசியர் மு.வ.வைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர்கள் ந .சஞ்சீவி, சி.பாலசுப்பிரமணியன், இ .சுந்தரமூர்த்தி இவர்கள் எல்லாம் பேராசிரியர்களாக இருந்து துணைவேந்தர்களாகவும் விளங்கினார்கள். பேராசிரியர் சஞ்சீவியார்க்கு அந்த வாய்ப்பு வந்து அவராலேயே தவறி விட்டது .
பேராசிரியப் பெருமக்களில் சிலர் அறிவாற்றலிலும் தகுதியிலும் திறமையிலும் சிறந்து வருகிறார்கள். நாடு போற்றும் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், பேராசிரியர் எழில் முதல்வன், பேராசியர் தி.இராசகோபாலன், பேராசியர் இராம.குருநாதன் ஆகியோரையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். அந்தத் திறமையாளர்கள் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
11 தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எண்ணுகிறீர்கள் ?
எதிர்காலம் பொற்காலமாக அமையும் என்பதுதான் என் உறுதியான எண்ணம், கனவு ,ஏக்கம். மூடுபனி மறைத்தாலும் கூட முகிலைக் கிழித்துக்கொண்டு வெண்ணிலவு வருவது போல, காலம் வரும் போது, தமிழின் பெருமிதம் ஞாலமெல்லாம் கைதொழுது போற்றும் உயர் நிலையை அடையும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. என்னுடைய அந்த விருப்பம் நிறைவேறி வருவதாக நம்புகிறேன்.
12 இன்றைய வாழும் கவிஞர்களில் உங்கள் இதயத்தைத் தொட்ட சிலருடைய பெயரைக் குறிப்பிட முடியுமா ?
கவிப்பேரரசு வைரமுத்து, எல்லையில்லாத பரிசுகளைப் பெற்று எட்டமுடியாத உயரத்தில் இருக்கிறார்.
கவியரசு ஈரோடு தமிழன்பனும் நானும் நெருங்கிய நண்பர்கள். தியாகராசர் கல்லூரியில் பணியாற்றும் போது, அவரது அழைப்பில்தான் சேலம், ஈரோடு, மற்றும் அதைச் சுற்றியுள்ள கோவை உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் இலக்கிய விழாக்களில் கலந்துகொண்டேன். அப்படிப்பட்ட விழாக்களை நடத்துவதற்குப் பெரிய தூணாக இருந்தவர் , அவருடைய செல்வாக்கு அவருடைய தோற்றம், அவர் காட்டுகிற பரிவு, அவர் அளிக்கும் விருந்து, இவற்றை நான் நினைத்து நினைத்துப் பார்த்துப் பெருமிதமடைகிறேன். ஈரோடு தமிழன்பன் புதிய வடிவங்களைப் புனைந்து காட்டுவதில் வல்லவராகத் திகழ்கிறார் .புரட்சிக்கவிஞர் அவரை அழைத்துக்கொண்டு போய் பாரி நிலையத்தில் அவர் எழுதிய புதினத்தைக்காட்டி எவர் இவரைப்போல எழுதமுடியும் , நாளையே பாரி இதை அச்சடிக்கத் தொடங்கவேண்டும் என்றார்.
நான் பச்சையப்பன் கல்லூரியில் இருக்கும் போதே எனக்கு நன்றாகத் தெரிந்தவர் சிலம்பொலி செல்லப்பன். அவருடைய உடன் பிறவாத இளவல் போலக் கவியரசர் ஈரோடு தமிழன்பன் கவிதையில் புதுநெறிகள் காட்டிச் சிறந்து செழித்து நிற்பதைக் காணும்போது, என் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அந்த வகையில் நான் எப்போதும் போற்றும் பெருமித வரிசையில் கவிப்பேரரசு வைரமுத்து – கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் – சிந்தனைக்கடல் சிற்பி பாலசுப்பிரமணியன் இடம் பெற்றிருக்கிறார்கள் .
13 மொழிப் போராட்டங்களில் கலந்து கொண்டதுண்டா ? இந்தி எதிர்ப்புக் காலகட்டத்தில் தங்கள் நிலைப்பாடு
எப்படியிருந்தது ?
நான் அப்போது கல்லூரியில் உரையாளராகச் சேர்ந்திருந்தேன். அருமை மாணவர் திலகங்களான கா.காளிமுத்து, நா.காமராசன், விருதுநகர் பெ. சீனிவாசன் ஆகியோர்தாம் அந்த நேரத்தில் இந்தி எதிர்ப்புப் போரட்டக் களத்தில் மாணவர்களுக்குத் தலைமை தாங்கினார்கள்.
மாணவர்கள் மனத்தில் அடங்காத தமிழ் ஆர்வமும் – காங்கிரசு இயக்கத்தின் மீது கடுங்கோபமும் கொப்பளித்துக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது அங்கே தமிழ்த்துறைத் தலைவராகத் திகழ்ந்தவர் மான மறவர் தொல்காப்பியப்போராளி பேராசியர் இலக்குவனார் ஆவார்.
மாணவர்களுக்கு அப்போது ஒரு சிந்தனை இருந்தது. அதை இப்போது சொன்னால் குற்றமில்லை. தமிழார்வம் என்பது அவர்களுக்குப் பெருக்கெடுத்து ஓடியபோதும், திராவிடர் கழகச் சிந்தனைகள் அவர்கள்பால் இருந்த போதும், தமிழ் உணர்வு வேறு… தனித்தமிழ்ச் சிந்தனை என்பது வேறு… என்பது போலக் கொஞ்சம் முரண்பட்டிருந்தார்கள். அப்படி முரண்பட்டதிலும் பிழை இல்லை. அப்போது மாணவர்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் வழிகாட்டுவதற்குப் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்தான் துணையாக இருந்தார்கள்.
தனித்தமிழ் இயக்கத்தை அரசியலாக மாற்றக்கூடாது என்று நான் வலியுறுத்தினேன். பிறகு என் கருத்தே தக்கது என்று அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். தியாகராசர் கல்லூரி அப்போது ஒரு தமிழ்க் களமாகக் காட்சியளித்தது.
அப்போது அங்கே மாவட்ட ஆட்சித் துணைத் தலைவராகப் பணியாற்றியவர் நண்பர் நாகராசன் ஆவார்.
அவரைப் பற்றிச் சொல்வதென்றால் எல்லோருக்கும் வியப்பாக இருக்கும். அவர் முத்தமிழறிஞருடைய செயலாளராக இருந்தவர். இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தடுக்கப்பட்டவர். அவர் புதுக்கோட்டையில் கல்லூரி மாணவராக இருந்தபோது அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டியில் பங்குபெற்று முதற்பரிசு பெற்றவர். ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் திறமை வாய்ந்தவர். அப்போது அவர் அரசுப் பொறுப்பில் இருந்ததால் அவர் அடிக்கடி கல்லூரிக்கு வந்து காண்பார். அவர்தான் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம், விபரீத எல்லையைத் தொடாதபடி, தணிக்கவும், அதே நேரம் மாணவர்களின் உணர்வுகளைப் பாராட்டவும் இருந்தார் . அவர் அப்போது என்னையும் கூட ஆற்றுப்படுத்தினார் . களத்தில் இறங்குவது போன்ற நிலை எனக்கு இல்லாது போனாலும், நான் அதைக் கண்டு ஊக்கப்படுத்தி வந்தேன்.
அப்போது என் நெஞ்சம் கவர்ந்த அருமை மாணவரான கா.காளிமுத்து, தான் ஆற்றுகிற உரைகளை எல்லாம் , என்னிடத்திலே அளித்து இதை நீங்கள்தான் செப்பமாக முடித்துத் தரவேண்டும் என்பார்.
’சிட்டுக் குருவிகளைச் சுட்டுத் தள்ளுவது போல, எட்டுப் பேரைக் கொன்றவரா, இனிமேலும் இந்த நாட்டை எப்படிக் காப்பார் ? எப்பக்கம் வந்து புகுந்து விடும் இந்தி, எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்?’ என்பது போன்ற தொடர்கள் அப்போது நிலைபெற்றன . ’
இந்த மாணவர்களை எல்லாம் ஈரம் படிந்த தீக்குச்சி என்று நினைக்காதீர்கள். ஒருமுறை உரசினாலேயே ஊரே பற்றியெரியும் பாருங்கள்..’
என்றெல்லாம் நெருப்பு வரிகளை, நான் எழுதிக்காட்டிய நிகழ்வுகளெல்லாம் என் நினைவுக்கு வருகின்றன.
14 செய்தித்துறை துணை இயக்குநராக இருந்த நீங்கள் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக ஆனது எப்படி ?
நான் செய்தித்துறையில் வந்து சேர்ந்தபோது, பெருந்தகை நாகராசன் முதலமைச்சருடைய செயலாளராக இருந்தார். அந்த வகையிலே அவர் என் மீது அன்புகொண்டவர் என்பதால், செய்தித்துறையில் ஒரு பத்துத் திங்கள் இருந்திருப்பேனா என்று தெரியவில்லை,. அதற்குள்ளாகவே என்னை மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக மாற்றிவிட்டார்கள். அது பெருமை தருவதுதான் என்றாலும். செய்தித்துறையினுடைய செல்வாக்கும், ஆட்சித் திறனும் அங்கே குறைவு. இருந்த போதும், மொழிபெயர்புத்துறை இயக்குநராக அப்போது ஓய்வுபெற்ற அறிஞர் கு.இராஜவேலு அவர்களின் இடத்திற்கு நான் செல்வதில் பெருமிதம் கொண்டேன்.
ஏனென்றால் எவரும் எளிதாக நெருங்க முடியாத அனலைப் போல விளங்கியவர் அவர். அவருடைய தமிழ்ப் புலமையைப் பேராசியர் மு.வ. பராட்டிக் கூறியதைக் கண்டு மாணவ நிலையிலேயே நான் பலமுறை வியந்திருக்கிறேன். பேராசிரியர் மு.வ., பேராசிரியர் தெ.பொ.மீ, இருவரும் அவருக்கு அவ்வளவு உவப்பாக இருந்தார்கள். தேசிய இயக்கத்தில் பெருந்தலைவர் காமராசருக்கு வலது கரமாக இருந்து பல்வேறு சிந்தனை முடிவுகளைக்கூற அவருக்கு உதவியாக இருந்தவரும் பேராசிரியர் இராஜவேலுதான். தியாகச் சுடரான அவர் மாணவப் பருவத்தில் பி.ஏ.ஆனர்ஸ் முடிக்கும் போதே, ’ அழகு ஆடுகிறது ’ என்கிற ஒரு புதினத்தை எழுதி ’ கலைமகள் ’ இதழில் ரூபாய் ஆயிரம் பரிசு பெற்றவர். அவருடைய நடையழகும், சங்க இலக்கியத் தெளிவும்,ஆங்கில இலக்கிய ஆற்றலும் சிகரங்களைத் தொட்டவை .
அப்போது தேசிய இயக்கச் செல்வாக்குப் பெற்றவர்கள் என்று மூன்று பேரைச் சொல்வார்கள்.
ஒருவர் தலைமைச் செயலாளராக இருந்த கா .திரவியம், இன்னொருவர் செய்தித்துறை இயக்குநராகவும் பிறகு ஊரகத்துறை இயக்குநராகவும் இருந்த குழந்தைவேலு, மொழி பெயர்ப்புத்துறை இயக்குநராக இருந்த பேராசிரியர் கு.இராஜவேலு. இந்த மூன்று பேரும்தான் என்று அனைவரும் கூறினார்கள் .
முத்தமிழறிஞருடைய நெஞ்சத்தில் நிலையான இடத்தைப் பெற்ற பெருந்தகை கவிஞர் கருணானந்தம் போல அன்பு காட்டுகிறவர் என்று இன்னொருவரைச் சொல்ல முடியாது. அவருக்கு எவ்வளவு பெரிய ஆளுமை இருந்தது என்று சொன்னால், கலைஞர் எதையாவது எழுதிப் பாதியில் நிறுத்தியிருந்தால், மீதியை முடித்துக் காட்டுகிறவர் அவர்தான். மேலும் நாள்தோறும் முதலமைச்சர் கலைஞரை ஒரு மணி நேரமாவது அவர் சந்தித்து உரையாடுவார். அப்போது இருவரும் கலந்து பேசி யாருக்கும் தெரியாத அரசியல் முடிவுகளை எல்லாம் எடுத்ததை நான் நன்றாக அறிவேன். எனவே கவிஞர் கருணானந்தம் அவர்கள் நான்தான் பரிந்துரைத்தேன் .
நீங்கள் மொழிபெயர்ப்புத் துறைக்குப் போவதை நான் பாராட்டுகிறேன். அதற்கு ஆங்கிலப் புலமை பெரிதும் தேவைப்படும். எனவே நீங்கள் அந்தத் துறைக்குப் போகலாம். நான் இங்கேயே இருந்து, இந்திய ஆட்சிப் பணிக்கு வாய்ப்பு வருகிற போது, உங்களை எனக்குப் பதிலாக அழைக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார். அவருடைய சொல் எனக்கு மந்திரச் சொல்லாக இருந்தது. அவர் காட்டிய பரிவை இப்போதும் நினைக்கிறேன் .சரி என்று மொழி பெயர்புத் துறை இயக்குநராக மகிழ்வோடு போய்ச் சேர்ந்தேன்.
15 இனிய உதயம் வாசகர்களுக்குப் பொங்கல் திருநாள் வாழ்த்தாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
நான் பல்லாண்டுகளாக அறிந்த நண்பர் நக்கீரன் கோபால். அவருடைய நெஞ்சத் துணிவையும் நேர்மைக்குப் போராடுகிற ஆற்றலையும் நான் போற்றியிருக்கிறேன் .
பார்க்கின்ற போதே அவரது அடர்ந்த மீசை, அவருடைய நெஞ்சத்தில் வழிகிற அன்பு வெள்ளம், இவற்றைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் எப்போதும் போற்றிப் புகழும் கவியரசர் அப்துல்ரகுமான் சொல்லித்தான் இனிய உதயம் இதழ், கலைநலம்பொலியும் வடிவில் வருகிறது என்பதை அறிந்து என் நெஞ்சம் உருகுகிறது.
நான் கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதை வரிகளைச் சொல்லிக் காட்டவேண்டும் என்று நினைக்கிறேன்.
தியாகராசர் கல்லூரியில் அவர், மாணவராக இருந்த போது, இராசராசன் விழாவைப் பேராசிரியர் இலக்குவனார் நடத்தினார்.
அப்போது கவியரங்கத்தில் அப்துல்ரகுமான் பாடிய போது,
’ வாளெடுத்துப் போர் தொடுத்தல்
இவனுக்கு வாடிக்கை !
வீரக் களத்தில் – இரத்த
ஈரக் குளத்தில் ஆடிவருவது
அவனுக்கு வேடிக்கை ’
என்று சொன்னபோது, நாங்கள் வியந்தோம். அடுத்த எதுகை எப்படி என்று பார்த்தால்,
’ பாடிக் கைநீட்டிப் புலவர்கள் வந்தால்
தருவதற்கு அவனுக்கு இருந்தன கோடிக்கை ’
– என்று பாடியிருந்தார்.
அப்துல்ரகுமானுடைய சிந்தனை, ஆழத்திலும் ஆழம் உடையதாகும். அந்த ஆழ்ந்த சிந்தனையோடு, எழுத்தை எண்ணி எண்ணி கவிதையாகச் செதுக்கிய திறத்தை நான் பலமுறை நேரில் கண்டு நெஞ்சைப் பறிகொடுத்தவன் .
” வந்தாரா நடராசன் என்று வழிபார்த்து வருந்தி நின்றோம்
என் தாரா உடனிங்கு வந்தேன் என்று வந்தவரே
என்றும் எந்நாளும் என் இதயம் உவந்தவரே “-
என்று பெங்களூருவில் நடந்த விழாவில் அவர் கூறிய தொடர்கள் என் கண்களை நனைக்கின்றன .
அவருமில்லை – அவர் எழுதிய என் தாராவும் இப்போதில்லை .
அவர் இனிய உதயம் இதழுக்கான வழிகாட்டியாக இருந்தார் என்பதையும், ஏற்கனவே இதழியல் உலகத்தின் திலகமாகத் திகழ்கிற சகோதரர் நக்கீரன் கோபால், அவர் கருத்தை உடனே வரவேற்று ஏற்றுக்கொண்டார் என்பதையும் எண்ணிப் பெருமிதத்தோடு போற்றுகிறேன்.
நண்பர் ஆரூர் தமிழ்நாடன் ஆற்றல் வாய்ந்தவர். அவருக்குக் கவிதையும் தெரியும், உரைநடையும் தெரியும், காவியங்களும் தெரியும். இம்மூன்றின் எல்லையைக் கடந்து அரசியலும் நுணுக்கமாகத் தெரியும். எனவே அப்படிபட்டவர் உதயத்தின் இணையாசிரியராகத் திகழ்கிறார் .
இது இனிய உதயம்தான். இது எல்லாப் பொழுதிலும் எல்லாக் காலத்திலும் செழித்துச் சிறப்படைய வேண்டும் என்று நான் மகிழ்சியோடு வாழ்த்துகிறேன்.
வாசகர்களான தமிழ்ப் பெருமக்களுக்கும் படைப்பாளர்களுக்கும் என் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைக் கூறுவதில் மகிழ்கிறேன்.
நலிந்து மனம் உடைந்த நிலையிலும் என்னை நினைவு கூர்ந்ததை எண்ணிக் கலங்குகிறேன் .
*
நேர் காணல்: சென்னிமலையார்
உதவி: கே.பிரதாப்
படங்கள்: அசோக்

Add a Comment