POST: 2020-10-19T09:58:30+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 57)
“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (V)”

முனைவர் ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

காட்சி – 25:

அண்ணன் சக்கரப்பாணியும் எம்.ஜி.ஆரும், குடந்தையிலிருந்து புதுவைக்குப் புறப்படுகின்றனர். நாராயணன் நாயர் அழைத்துச் செல்கிறார். தாயின் பிரிவை எண்ணிச் சகோதரர் இருவரும் கண்ணீர். தாய் சத்யா அழுகை, இரயிலுடன் கூடவே….“ராமு…சக்கு…” என்றபடி ஓடி வருகிறார். எம்.ஜி.ஆர். தாயின் கையைப் பிடித்துக் கொள்கிறார். ரயில் அவர்களைப் பிரிக்கிறது.

காட்சி – 26:

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆரும், சக்கரப்பாணியும் சேருகின்றனர்.

காட்சி – 27:

நடன ஆசிரியர் ஸ்ரீராமுலு நடனம் சொல்லிக் கொடுக்கும் போது பிரம்பினால் எம்.ஜி.ஆரை அடிக்கிறார். அண்ணனிடம் தனிமையில் எம்.ஜி.ஆர். அழுகிறார்.

எம்.ஜி.ஆர்: (அழுதபடி) இப்படி அடிபட்டுக்கிட்டு என்னாலே இனி மேல் இங்கே இருக்க முடியாது. வா…நாம்ப…ஊருக்குப் போயி அம்மா கூடவே இருக்கலாம்.

சக்கரப்பாணி: அம்மா கூடவே இருக்கலாம்…… சரிதான்! அம்மாவுக்குப் பாரமா எத்தனை காலத்துக்குத்தான் இருக்கிறது. இவ்வளவு காலமா நமக்காக அவுங்க எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டாங்க. அவுங்களுக்காக இனிமே நாம்ப இதையெல்லாம் சகிச்சுக்கத்தான் வேணும்.சம்பாதிச்சு அம்மாவை நல்லா வச்சுக்கணும்.

எம்.ஜி.ஆர்: எப்படி…? மாதம்…நாலணா சம்பளம்..அதோட ..அடி உதை…திட்டு வேறு. இதில் எதை அம்மாவுக்குக் கொடுக்கிறது?

சக்கரப்பாணி: பயிற்சி முடிஞ்சதும் அஞ்சு ரூபாய் சம்பளம் கொடுப்பாங்க. நம்பப் பாடுபட்டா அது மேலும் மேலும் அதிகமாகும்.

எம்.ஜி.ஆர்: சரி…அண்ணே! எப்படியோ அம்மா நல்லபடியா இருக்கிறதுக்காக எத்தனை கஷ்டமாக இருந்தாலும் பொறுத்துகிறேன்.

எம்.ஜி.ஆர். முகமலர்ச்சியோடு செல்கிறார்.

காட்சி – 28:

எம்.ஜி.ஆருக்குப் பாடல், சண்டைப்பயிற்சி முதலியவை அளிக்கப்படுவதை ஒளி-நிழல் காட்சியாகக் காண்பித்தல்

காட்சி – 29:

பயிற்சி முடிந்ததும் முதன்முதலாக அர்ச்சுனனுக்கு அம்புகள் எடுத்துத்தரும் உத்தர இளவரசனாக எம்.ஜி.ஆர் முதன் முதலில் நடிக்கிறார்.

அர்ச்சுனன் மீது கால் தடுக்கி விழுந்து, “ஐயோ பாம்பு…. காப்பாத்துங்க” என்று கூறியதும் மக்கள் கையொலி எழுப்புகின்றனர்.

காட்சி – 30:

‘நல்ல தங்காள்’ நாடகத்தில் கடைசி மகனாக நடிக்கிறார். அழுகை வராததால், திரை அருகில் நின்று கொண்டிருந்த காளி என் ரத்தினம், நாராயணன் நாயர் ஆகியோர் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கொண்டு தலையில் குட்டுகின்றனர். எம்.ஜி.ஆருக்கு அழுகை தாங்க முடியவில்லை. அழுது கொண்டே சுற்றி வந்தார் நாடக மேடையை…!

எம்.ஜி.ஆர்: எள்ளும் தண்ணீரும் இரைப்பதற்கும் கொள்ளி வைப்பதற்கும் என்னையாவது உயிரோடு விட்டு விடம்மா…! என்று கண்ணீர் விட்டுக் கதறுகிறார். மக்கள் கைதட்டுகின்றனர். “பலே…பேஷ்..”என்று குரல்.

காட்சி – 31:

‘தசாவதாரம்’ நாடகத்தில் பரதனாக நடித்து வந்த பி.யு.சின்னப்பாவுக்கு குரல் கம்மியதால், நாடகப்பேராசிரியர் எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆரை. பரதன் வேடத்தில் நடிக்க வைக்கிறார். அன்று நாடகம் பார்க்க வந்த எஸ்.ஜி. கிட்டப்பா, எம்.ஜி.ஆரைப் பாராட்டி, கட்டித் தழுவுதல்.

காட்சி – 32:

அன்னை சத்யா தன் இரு பிள்ளைகளையும் எம்.கந்தசாமி முதலியாரிடம் ஒப்படைத்தல்.

எம்.கந்தசாமி முதலியார்: எனக்கு இதுவரையில் ஒரே பிள்ளை (எம்.கே.ராதா) தான். இனிமேல் உங்கள் பிள்ளைகளையும் சேர்த்து மூன்று பிள்ளைகளாகக் கருதி வளர்ப்பேன். கவலைப்படாதீர்கள்.

காட்சி – 33:

நாடகக் குழுவினருடன் எம்.ஜி.ஆர், சக்கரப்பாணி பர்மா செல்கின்றனர். உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியுடன் இரங்கூனில் ஆறு மாதங்கள் தங்கி நடித்தனர். அப்போது அவருக்கு வயது 15. மீண்டும் தமிழகம் திரும்பியதும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆர் சேர்ந்தார். ‘பதிபக்தி’ என்ற சமூக நாடகத்தில் முக்கியமான வேடமேற்று நடித்தார்.

காட்சி – 34:

‘சதி லீலாவதி’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராகக் காலடி எடுத்து வைத்தார். இன்ஸ்பெக்டர் வேடத்தில் தான் முதன் முதலில் அவர் படத்தில் நடித்தார்.

படம் காண்பிக்கப்படுதல்.

‘சதிலீலாவதி’ படத்தின் கதையை எழுதியவர் கலை மேதை எஸ்.எஸ்.வாசன். எம்.கே.ராதா, டி,எஸ்.பாலையா, கலைவாணர்.என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய பலர் நடித்து அறிமுகமான படம் அது. 1936 ஆம் ஆண்டு அந்தப்படம் வெளிவந்தது.

தொடர்ந்து பல படங்கள்…..

ஆனால், சின்னச்சின்ன வேடங்கள்!

இரு சகோதரர்கள், தஷ்யக்ஞம், வீராஜெகதீஷ், மாயமச்சேந்திரா, பிரகலாதன், அசோக்குமார், சீதாஜெனனம், தாசிப்பெண், தமிழறியும் பெருமாள், அரிச்சந்திரா, மீரா, சாலிவாகனன், ஸ்ரீமுருகன், பைத்தியக்காரன் போன்றவை அவருடைய திரையுலக வளர்ச்சிக்குப் படிக்கட்டுகளாக அமைந்த படங்கள்

ஒளிப்படங்கள் காண்பிக்கலாம். நடனக்காட்சி (சிவ-பார்வதி) காண்பிக்கலாம்

காட்சி – 35:

‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பல தடைகள், தூக்கு மேடையில் உண்மையில் தொங்கி, மூச்சு திணறி உத்தரம் உடைந்து விழுந்ததால் உயிர் பிழைக்கிறார்.

காட்சி – 36:

எதிர் வீட்டுப் பெண் மீது எம்.ஜி.ஆர்.காதல். அந்தப் பெண்ணும் விரும்புகிறது. இதனைத் தாய் சத்யா கவனித்து, திருமணம் முடிக்கத் தீர்மானிக்கிறார்.

காட்சி – 37:

ஊருக்குச் சென்ற தாய்க்கு உடல்நலமில்லை என்று அண்ணன் சக்கரப்பாணி கூறியதைக் கேட்டு, எம்.ஜி.ஆர்.பதறிக்கொண்டு புறப்படுகிறார். தாய் வற்புறுத்தலின் காரணமாக (பார்கவி) தங்கமணியைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார். ஒரேயொரு நிபந்தனை விதிக்கிறார். ‘கதராடைதான் திருமணத்தின் போது அணிவேன்’ என்று! அவர் பிடிவாதத்திற்கு அன்னை சத்யா சம்மதிக்கிறார்.

திருமணம் முடிந்து, சென்னை திரும்பினர். எம்.ஜி.ஆர். தனது முதல் மனைவி மீது அன்பைப் பொழிகிறார். உயிருக்குயிராக விரும்புகிறார். (1938)

அண்ணல் காந்தியடிகள், சுபாஷ் சந்திரபோஸ் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் எம்.ஜி.ஆர்.

காட்சி -38:

இரண்டாம் உலகப்போர் காரணமாகச் சென்னை நகரை விட்டுச் செல்கின்றனர் பலர்.மருமகள்களையும் பேரக்குழந்தைகளையும் அன்னை சத்யா பாலக்காடுக்கு அனுப்பி வைக்கிறார். கணவரைப் பிரிய மனமின்றித் தங்கமணி அழுகை.எம்.ஜி.ஆர்.கண்ணீர்.

காட்சி – 39:

தங்கமணி இரண்டு மாதங்களில் மாரடைப்பினால் இறந்து போனார். விரைந்து சென்ற எம்.ஜி.ஆர்.தன் மனைவியின் முகத்தைக் கூடக் கடைசியாகக் காண முடியவில்லை. மனம் வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். சக்கரப்பாணி தடுத்து, காப்பாற்றி விடுகிறார்.

காட்சி – 40:

ஜுபிடர் பிக்சர் ‘ராஜகுமாரி’ படம் வெளிவந்தது. பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம்.கே.ராதா, கே.ஆர்.ஆர். போன்ற முன்னணி நடிகர்கள் மிகவும் பிரபலமாக இருந்த போது, எம்.ஜி.ஆர். முதன்முதலில் கதாநாயகனாக நடித்த படம் வெற்றிவாகை சூடியது (1947)

‘ராஜகுமாரி’ படத்தில் முக்கியக் காட்சி திரையிடலாம்.

காட்சி – 41:

கதாநாயகன் வேடத்தில் நடித்த பின்பும் ‘அபிமன்யு’, ’ராஜமுக்தி’, ’ரத்னகுமார்’, ‘மோகினி’ ஆகிய படங்களில் இரண்டாவது கதாநாயகன் வேடங்களிலும் நடித்தார்.

‘ரத்ன குமார்’, ‘மோகினி’ படக் காட்சிகள் அல்லது ஒளிப்படங்கள் காண்பிக்கலாம்.

காட்சி – 42:

தாய் சத்யா வற்புறுத்தலின் காரணமாகச் சதானந்தவதியை மணக்கிறார், எம்.ஜி.ஆர். பெண் பார்க்கச் செல்லவில்லை. தாயே பார்த்து முடித்த திருமணம். சதானந்தவதி கருத்தரித்தார். காசநோய் பற்றிக் கொள்கிறது. சிகிச்சையின் பலனாகக் கருச்சிதைகிறது. இருமுறை (1950) இவ்வாறு நேரிடுகின்றது. அவர் படுத்த படுக்கையாக இருந்து 1962 இல் காலமானார். இதற்கிடையில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் நடிக்கும் போது, படத்தின் நாயகி, வி.என்.ஜானகி மீது எம்.ஜி.ஆருக்குக் காதல் அரும்புகிறது. இருமனமும் ஒரு மனமாகி, டைரக்டர் கே.சுப்ரமணியம் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

காட்சி – 43:

எம்.ஜி.ஆர்.கதராடை அணிந்து, கழுத்தில் மணிமாலை அணிந்திருப்பார். நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தார். போஸ் காங்கிரசிலிருந்து பிரிந்து விட்டார் என்றதும் மனம் வருந்தினார்.

காட்சி – 44:

பேரறிஞர் அண்ணாவை 1952 ஆம் ஆண்டு டி.வி. நாராயணசாமியுடன் சென்று சந்தித்தார். ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் சிவாஜி வேடத்தில் நடிக்கும்படி அண்ணா கூறினார். எம்.ஜி.ஆர்.ஏற்றுக் கொண்டார். திரைப்படங்களில் ஓய்வின்றி நடித்ததினால் நாடகத்தில் நடிக்க முடியாமல் போயிற்று.

காட்சி – 45:

அண்ணாவின் எழுத்தும், பேச்சும் எம்.ஜி.ஆரை அரசியலைக் கூர்ந்து நோக்க வைத்தன. ‘பணத்தோட்டம்’ போன்ற நூல்கள் பலவற்றைப் படித்தார். அவருடைய பண்பும், அரசியல் நோக்கும் எம்.ஜி.ஆரையும் அண்ணாவின் இயக்கத்தில் இணைத்தன.(1953) கலைவாணர் என்.எஸ்.கே. இயக்க ஆதரவாளராக இருந்தார். கே.ஆர்.ஆர். ‘நடிப்பிசைப்புலவர்’ என்று போற்றப்பட்டார்.

காட்சி – 46:

‘மர்மயோகி’ படம் 1951 வெளிவந்தது. கரிகாலன் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பும், சண்டைக்காட்சிகளும் பாராட்டப்பட்டன. பெரும் புகழ் சேர்ந்தது.

‘மர்மயோகி’ படக்காட்சிகள் காண்பிக்கலாம்.

‘சர்வாதிகாரி’, ‘அந்தமான் கைதி’, ‘என் தங்கை’, ‘குமாரி’, ‘நாம்’ ஆகிய படங்கள் வெளிவந்தன.

’சர்வாதிகாரி’ படக்காட்சி… ‘அந்தமான் கைதி’ படத்தில் ‘காணி நிலம் வேணும் பராசக்தி’ பாரதியார் பாடலை இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் பாடியது… ‘என் தங்கை’யில் சோக நடிப்புக்காட்சி ஆகியவை காண்பிக்கலாம். இல்லையேல் ஒளிப்படங்கள்.

காட்சி – 47:

அன்னை சத்யா (1953) மரணம். எம்.ஜி.ஆர். துயரம். அன்னையின் விருப்பத்தின்படி, அவர் வாழ்ந்து மறைந்த இலாயிட்சு சாலை இல்லத்தை விலைக்கு வாங்கி அன்னையின் பெயர் சூட்டினார்.

காட்சி – 48:

‘மலைக்கள்ளன்’ படம் மகத்தான வெற்றியடைகின்றது (1954). இந்திய அரசு வெள்ளிப்பதக்கத்தைப் பரிசாகப் பெறுகின்றது.

’மலைக்கள்ளன்’ படக்காட்சி காண்பிக்கலாம்.

காட்சி – 49:

எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த முதல் படம் (ஒரே படம்) ‘கூண்டுக்கிளி’ வெளிவந்தது. ‘கூண்டுக்கிளி’ காட்சி

காட்சி – 50:

‘குலேபகாவலி’, முதல் வண்ணத்தமிழ்ப் படமான ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘மதுரை வீரன்’, ‘தாய்க்குப்பின் தாரம்’, ‘சக்கரவர்த்தித் திருமகன்’, ‘மகாதேவி’, ‘புதுமைப்பித்தன்’, ‘ராஜராஜன்’ ஆகிய படங்கள் அவருடைய புகழுக்குப் புகழ் சேர்த்தன. பல படங்கள் சாதனை படைத்தன. படக்காட்சிகள் அல்லது ஒளிப்படங்கள்

காட்சி – 51:

நேருவுக்குக் கருப்புக்கொடி காட்ட அண்ணா முடிவு. கழகத்தலைவர்கள், எம்.ஜி.ஆர். கைது. (4.1.1958) முதல் சிறைவாசம். சில நாட்களில் விடுதலை.

காட்சி – 52:

‘நாடோடி மன்னன்’ படத்தைத்தயாரித்து இயக்கி, நடித்து வெளியிட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் திட்டங்களை வெளியிடும் காட்சி. ‘சும்மாக்கிடந்த நிலத்தை’- பாடல் காட்சி திரையிடலாம்.

காட்சி – 53:

மதுரையில் 110 சவரன் கொண்ட மணிகள் பதித்த தங்க வாள் பரிசளிப்பு. நாவலர் வழங்குகிறார். மதுரை முத்து நடத்திய மாபெரும் விழா.(16.10.59) காட்சி அல்லது ஒளிப்படம்

காட்சி – 54:

சென்னையில் ‘நாடோடி மன்னன்’ பாராட்டு விழா. 5 ½ அடி உயர மிகப்பெரிய வெள்ளிக் கோப்பை பரிசளிக்கப்படுகின்றது. பேரறிஞர் அண்ணா பாராட்டுகிறார். நிகழ்ச்சியின் காட்சி அல்லது ஒளிப்படம்

காட்சி – 55:

தமிழ் நடிகர் சங்கத்தலைவரானார். தென்னிந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்தார். ‘நடிகன் குரல்’ மாத இதழ் தொடங்கப்பட்டது. இதழின் ஆசிரியரானார்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன்

தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *