POST: 2020-10-12T10:47:45+05:30

தின செய்தி – I2.10.2020

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 56)

“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (IV)”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

என் இனிய நண்பர், நாகை தருமனையும், புரட்சித் தலைவரின் நெருங்கிய தொண்டராகவும், புரட்சித் தலைவரின் திரைப்படக் கதை வசனத் துறையின் துணையாசிரிராகவும், ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு துணைக் கதையாசிரியராக கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து பணியாற்றியவரும், புரட்சித் தலைவரின் ‘கலையரசி’, ‘பாக்தாத் திருடன்’ ஆகிய திரைப்படங்களின் கதையாசிரியராகவும் பணியாற்றியவருமான நாகூர் கே. இரவீந்திரனையும் கொண்டு, 1992-ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மண்டபத்தில் வாரந்தோறும் திருமலை நாயக்கர் மன்னரைப் பற்றிய ஒலிஒளிக் காட்சி சிறப்பாக நடைபெறுவதைப்போல, புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு சிறப்பான ஒலிஒளிக் காட்சி நடத்தத் திட்டமிட்டார். அதற்காக புரட்சித் தலைவரை முழுமையாக அறிந்த இவர்கள் இருவரையும், ஒலிஒளிக் காட்சியை எழுதித் தருமாறு ஆணையிட்டார். அவ்வாணைக்கிணங்க காட்சித் தொடரை எழுதிக் கொண்டிருந்த வேளையிலேயே கே. இரவீந்திரன் மறைந்து விட்டார். ஏனோ சில காரணங்களால், ஒலிஒளிக்காட்சி நடைபெறாமலேயே போய் விட்டது. நாகை தருமன் கைப்பட எழுதிய காட்சித் தொடர் தினசெய்தி வாசகர்களின் பார்வைக்கு.
சத்யபாமா குழந்தையுடன் குமுறியபடி வெளியேறுகிறாள்
காட்சி:
சத்யபாமாவின் கணவர் கோபாலன் நீதிபதியாக இருந்தபோது, காவல்துறையில் பணிபுரிந்தவர் வேலுநாயர். அவர் பணிஓய்வுபெற்ற பின்னர் பார்க்க வருகிறார். சக்ரபாணி தாயிடம் அவர் வந்திருப்பதைக் கூறுகிறார். சத்யா வரவேற்கிறார்.
வேலுநாயர்: அம்மா… நீங்க பட்ட கஷ்டமெல்லாம் கேள்விப்பட்டேன். எப்படி இருந்தவங்க….. அதெல்லாம் எதுக்கும்மா, நீங்க ரெண்டு பேரும் நல்லதையே நினைச்சு நல்லதையே செய்தவுங்க. உங்களுக்குக் கடவுள் ஒரு குறையும் வைக்க மாட்டான். நம்ப உறவுக்காரவுங்க மத்தியிலே கஷ்டப்படத்தயாரா இருந்தாலும் சரியான மரியாதை இல்லேன்னா சங்கடமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்காக வாழணும்னு நினைக்குறீங்க. நான் ரிடையராகிட்டேன். பிழைப்பைத் தேடிக் கும்பகோணம் போறேன். நமக்குன்னு உள்ள உறவுங்க விலகிப்போனாலும், ஈரமுள்ள மத்தவுங்க உதவி செய்வாங்க. தமிழ்நாடு நம்மை வாழவைக்கும். பிள்ளைங்களை உருவாக்க நானும் உங்களுக்கு உதவியா இருப்பேன்.
சத்யபாமா: நீங்க சொல்றது சரிதான். வளமாக வாழ்ந்த இடத்திலே வறுமையிலே வாடுறதை விட, நம்மைப்பத்தி தெரியாதவுங்க மத்தியிலே எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சு, கால் வயித்துக் கஞ்சி குடிச்சாலும் மனசுக்கு நிம்மதிதான்.
வேலுநாயர்: நீங்க… பிள்ளைகளை அழைச்சுக்கிட்டு தயாராகுங்க… கும்பகோணம் புறப்படலாம். நம்பிக்கையோட வாங்க… அந்தத் தெய்வம் நல்வழிக்காட்டும்.
சத்யபாமா: சரிங்க…! மனுஷங்க கைவிட்டாலும் தெய்வம் காப்பாத்தும்ங்கிற நம்பிக்கையிலேயேதான் என்னைப் போல ரொம்பப் பேரு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க….
காட்சி மாற்றம்
குடும்பத்தினர் அமர்ந்துள்ளனர்.
ஆண்குரல்: பாலக்காட்டிலிருந்து சத்யபாமா தனது பிள்ளைகளுடன், வேலுநாயரோடு கும்பகோணம் வந்து சேர்ந்தார். வேலுநாயர் மிகவும் நம்பிக்கையுடன் உறவுக்காரர் இல்லத்திற்குச் சென்றார். அவர்கள் சரியானபடி உபசரிக்காததால் அவருக்குக் கோபம் வந்து விடுகிறது. அவரது உறவினர் நாராயணன் நாயர் மட்டும் ஆதரவாக இருக்கிறார். குறைந்த வாடகையில் ஒரு வீட்டை வாடகைக்கிப் பிடித்துச் சத்யபாமா அம்மையாரையும் குழந்தைகளையும் அங்குத் தங்க வைக்கிறார். சத்யத்தாய் பணிபுரிகிறார். வயோதிகரான வேலுநாயரும் வேலைபார்த்து முடிந்த அளவு உதவி செய்கிறார். கஷ்டங்களுக்கிடையில் குடும்பம் நடக்கிறது. எம்.ஜி.ஆர் தவழ்ந்து, நடந்து வளர்கிறார். தனது பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டுமென்று தாய் சத்யபாமா விரும்புகிறார்.
கும்பகோணத்தில் ஆனையடி பள்ளியில் எம்.ஜி.சக்கரபாணியையும், எம்.ஜி.ஆரையும் சேர்க்கிறார்.
காட்சி
காலை நேரம்,
சின்னஞ்சிறிய வீடு.
வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுகிறார் சத்யபாமா. பின்பு வீட்டிற்குள் வருகிறார்.
சிறுவர்களான சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் பாயைச் சுருட்டி வைக்கின்றனர்.
சக்ரபாணி வீட்டின் கொல்லைப் புறத்தில் சாம்பல் எடுத்துப் பல் துலக்குகிறார். சிறுவன் எம்.ஜி.ஆருக்குத் தாய் சத்யபாமா பல் துலக்கி விடுகிறார்; குளிப்பாட்டுகிறார்.
சத்யபாமா: (செல்லமாக)உன் வயசுப்பிள்ளைங்க தானா பல் துலக்கி, குளிச்சு முழுகிட்டும் பள்ளிக்கூடம் போகுது! கால கண்டா நீ மட்டும் ஏன்டா இப்படி அடம் பிடிக்கிறே!
எம்.ஜி.ஆர்: (சிணுங்கியபடி) அம்மா… உன் கை பட்டாத்தாம்மா பல்லு பளிச்சுன்னு இருக்குது.உடம்பு தங்கம் மாதிரி தகத் தகன்னு ஜொலிக்குது! ஏம்மா…. எங்கம்மா கை என் மேலே பட்டுக்கிட்டே இருக்கணும்-நீ எப்போதும் என்னோடவே இருக்கணும்னு நான் நினைக்கிறது தப்பாம்மா…
சத்யபாமா : (கண்கலங்கியபடி) நான் எப்பவும் உன் பக்கத்திலேயே தான் இருப்பேன்.
குஷியோடு குளித்துவிட்டுச் செல்கின்ற எம்.ஜி.ஆர்.
கொல்லைக் கொடியில் தன் கோவணத்தைக் காணாமல் குதிக்கிறார்.
எம்.ஜி.ஆர்: அம்மா…என் கோவணத் துணியை அண்ணன் எடுத்துட்டுது.
சத்யபாமா: என்ன..சொன்னே..?
எம்.ஜி.ஆர்: என் கோவணத் துணியையும் துண்டையும் அண்ணன் எடுத்துட்டுதும்மா…
சத்யபாமா: (கோவமாக) சின்னப்பிள்ளை நீ…! இப்பவே என்னுது…உன்னுதுன்னு பிரிச்சுப் பேச ஆரம்பிச்சுட்டியா…? அவன் மட்டும் யாரு….உன்னோட அண்ணன் தானே! இனிமே ‘என்னோடது’ என்கிற வார்த்தையே வரக்கூடாது! என்ன…இந்த மாதிரி சொல்லுவியா?
ஆத்திரத்தோடு மகன் எம்.ஜி.ஆர் முதுகில் தாய் சத்யா ஒரு அடி கொடுக்கிறார். எம்.ஜி.ஆர் அழுகிறார். அவர் கண்ணீரோடு ‘என்’ என்கிற தன்னலமும் கரைந்து, மறைந்து போகிறது.
சக்ரபாணி: அம்மாவோட கை எப்போதும் உன் மேலேயே பட்டுக்கிட்டு இருக்கணுமுன்னு சொன்னீயில்ல….அதான்…! போதுமா..?
சக்ரபாணி சிரிக்கிறார்.
தாய்சத்யபாமாவும் அழும் எம்.ஜி.ஆரும் தன்னை மறந்து சிரிக்கின்றனர்!
காட்சி
எம்.ஜி.ஆருக்கு அடர்த்தியான நீண்ட முடி, தலைவாரிப்பின்னி விடுகிறார் தாய். பின்னர்ப் பூச்சூட்டி, பொட்டு வைத்து, திருஷ்டிப்பொட்டு வைக்கிறார். சக்ரபாணி பின்னல் போட்டு, பூ வைத்துப் பொட்டு வைத்து நிற்கிறார். பின்னர்த் தட்டில் சோறு போட்டு அவரே சாப்பிடுகிறார். எம்.ஜி.ஆருக்கு மட்டும் அவருடைய தாயே சோறு ஊட்டி விடுகிறார்.
காட்சி
பிள்ளைகள் இருபுறமும் வர, சத்யபாமா அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச்செல்வது காண்பிக்கப்படுதல்
காட்சி
பள்ளியில் மூன்றாவது வகுப்பில் ஆசிரியர் ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்று அழைக்க….. “உள்ளேன்… அய்யா…” என்று எம்.ஜி.ஆர்.கூறுவது.
காட்சி
சடுகுடு, பச்சைக்குதிரை, கிட்டிப்புல், கோலி விளையாட்டு அனைத்திலும் எம்.ஜி.ஆர். வெற்றி பெறுவது தனித்தனியே காண்பித்தல்.
காட்சி
பள்ளிக்கூடம்
மாலைநேரம்
பள்ளிக்கூடத்தின் வாசலில் பள்ளியில் படிக்கும் சிறுவனின் புத்தகப்பையை இன்னொரு மாணவன் பறித்துக் கொண்டு செல்கிறார். பறி கொடுத்த அப்பாவி அழுகிறான். சிறுவன் எம்.ஜி.ஆர் பாய்ந்து ஓடிச் சென்று துரத்திப் பிடித்து அவனைப் பிடித்து விடுகிறான். அவனது கையிலிருந்த பையை வாங்கி வந்து, பறி கொடுத்த பையன் கையில் கொடுத்து அவன் கண்ணீரைத் துடைத்துச் சமாதானப்படுத்துகிறார். அழுதவன் சிரிக்கிறான்.
காட்சி
பள்ளிக்கூடம்
காலை நேரம்
மூன்றாவது வகுப்பில் தண்ணீர்ப்பானை வைப்பதற்கு ஒவ்வொரு மாணவனிடமும் வகுப்புத் தலைவன், காலணா வீதம் வசூல் செய்கிறான். காலணா கொடுக்காத ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனை, வகுப்புத் தலைவன் அடிக்கிறான். எம்.ஜி.ஆர்., இந்த மாணவனைக் காப்பாற்றி, வகுப்புத் தலைவனுடன் சண்டை போடுகின்றார். இந்தச் சமயத்தில் வகுப்பு ஆசிரியர் வந்துவிடுகின்றார். மாணவர்த் தலைவன் வசூல் செய்த பணத்தில் எதிரில் கடையில் உருண்டை வாங்கித் தின்றதாகக் கூறி எம்.ஜி.ஆர். நிரூபிக்கிறார். உடனே, தர இயலாத ஏழை மாணவனை அடித்ததை, தான் தடுத்துச் சண்டையிட்டதைத் தெரிவிக்கிறார். வகுப்பு மாணவர்கள் அவருடைய பக்கம் நிற்கின்றனர். ஆசிரியர் அந்த வகுப்புக்கு எம்.ஜி.ஆரைத் தலைவராக்குகிறார்.
காட்சி
காலை நேரம்
தாய் சத்யா அடுத்த வீட்டு வாசலில் நிற்கிறார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு முறத்தில் அரிசி நொய் கொண்டு வந்து போடுகிறார். சத்ய பாமா அதனை முந்தானையில் வாங்கிக் கொள்கிறார். அப்படியே மடித்து, முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டிற்குள் வருகின்றார்.
இதனை எதிர்பாராதவிதமாக எம்.ஜி.ஆர்.கவனித்துக் கொண்டு, நிற்கிறார் கண்கலங்கியபடி.
காட்சி
மதிய வேளை
அன்னை சத்யா அடுத்த வீட்டிலிருந்து வாங்கி வந்த நொய் அரிசியில் கஞ்சி காய்ச்சுகிறார். இருதம்ளர்களில் கஞ்சி ஊற்றிப் பிள்ளைகளிடம் கொடுத்து விடுகிறார். தான் குடித்து விட்டதாகத் தெரிவித்து, தண்ணீரை அருந்துகிறார்.
எம்.ஜி.ஆர்.இதனையும் கவனித்து விடுகின்றார்.
தாய் சத்யா சர்வசாதாரணமாகப் பிள்ளைகளிடம் வருகிறார்.
சத்யா: ராமு…சக்கு…வயிறு நிறைஞ்சுதா?
எம்.ஜி.ஆர்: எங்க வயிறு நிறைஞ்சுட்டுதும்மா. ஆனா…நாங்கக் குடியிருந்த வயிறு காயுதே.
எம்.ஜி.ஆர் கண்கலங்கியபடி கையிலிருந்த தம்ளரை நீட்டுகிறார். அதில் பாதி கஞ்சி இருக்கிறது.
கஞ்சி உள்ள தம்ளரைத் தாயின் வாயில் வைத்து குடிக்கும்படி வற்புறுத்துகிறார்.
சத்யா: பெத்த வயிறு மட்டுமில்லே, என்னைப் போல எத்தனையோ தாய்களுடைய……
மத்தவுங்களுடைய வயிறும், மனமும் உன்னாலே குளிரும்.
கஞ்சியைக் குடித்தபடி பிள்ளைகள் இருவரையும் வாரியணைத்துக் கொண்டு கண்ணீர் விடுகின்றார்.
காட்சி
பள்ளி ஆண்டு விழாவில், மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணசாமிராவ், ’லவகுசா’ நாடகத்தில், லவன் வேடத்தில் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கிறார். அப்போது அவருக்கு வயது ஏழு. சத்ருக்குனன் வேடம் போட்டவனுடன் மேடையில் சண்டை. எம்.ஜி.ஆர்.நடிப்புக்குப் பாராட்டு.
எம்.ஜி.ஆர்.மூன்றாம் வகுப்பு (7வயது)
சக்ரபாணி ஏழாவது வகுப்பு (11 வயது)
நாடகத்தைக் கண்டு ரசித்தவர்கள் கரவொலி. எதிரொலி.
காட்சி
மதுரை(பாய்ஸ்) நாடகக் கம்பெனிப் பாடகரான நாராயணன் நாயர், வேலுநாயர் இருவரும் உள்ளே நுழைகின்றனர். ‘லவகுசா’ நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பைப் புகழ்கின்றனர். நாடகக் கம்பெனியில் சேர்க்கலாம் என்று நாராயணன் யோசனை கூறுகிறார். அன்னை சத்யா மகன்களைப் பிரியக் கலங்கி, பின்னர்ச் சம்மதிக்கிறார். அண்ணனும் தம்பியும் நாடகக் கம்பெனியில் சேர்ந்தால்தான் அவர்களும், தாயும் பசியும், பட்டினியுமாக இல்லாமல் வாழ முடியும் என்கின்ற நிலை.
சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர முடிவு செய்கின்றனர்.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *