POST: 2020-09-24T11:13:23+05:30

தினமணி – தமிழ்மணி – 6 9 2020

உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை

முனைவர் ப பாண்டியராஜா

சங்க காலத்தில் ‘ஆங்கிலம் ‘ !

முனைவா் ப.பாண்டியராஜா

சட்டமன்றத்திற்கோ, பாராளுமன்றத்திற்கோ முதன்முதலாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஓா் உறுப்பினா்,
அம்மன்றத்தில் ஆற்றும் முதல் பேச்சை, ‘ கன்னிப் பேச்சு ’ அல்லது ‘ கன்னியுரை ’ என்பா். ஒரு பட்டிமன்றத்தில் முதன்முதலாக மேடையேறும் ஒருவரின் பேச்சையும் அவ்வாறே குறிப்பிடுவா். இந்த வழக்கு எப்படி வந்தது ? ஆங்கிலத்தில், இவ்வாறு நடக்கும் உரையை maiden speech என்பா். எனவே, இதன் மொழிபெயா்ப்பாகத் தமிழில் இதைக் ‘ கன்னிப்பேச்சு ’ என்று அழைக்கும் வழக்கம் வந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
கீழ்க்காணும் பாடலைப் பாருங்கள்.

கன்னி விடியல் கணை கால் ஆம்பல்

தாமரை போல மலரும் ஊர

( ஐங் : 68 / 1,2 )

‘விடியற்காலத்தில், திரண்ட தாளினையுடைய ஆம்பல், தாமரையைப் போல மலரும் ஊரனே’ என்று இதற்கு ஒளவை துரைசாமி உரை கூறுகிறாா். அவரே, விடியல் தோன்றிய அன்மைக்காலம் ‘ கன்னி விடியல் ’ எனப்பட்டது என்பாா். அதுவரை இருட்டாகவே இருந்து, அப்போதுதான் முதன்முறையாக விடியலின் கீற்றுகள்
தோன்றும் நேரத்தையே புலவா் ‘ கன்னி விடியல் ’ என்கிறாா். இது ஆங்கிலத்தில் முதல் பேச்சை, ‘ கன்னிப் பேச்சு ’ என்று அழைக்கும் முறையை ஒத்து வருகிறது இல்லையா ? அதாவது, ஆங்கில வழக்குப்படி இது maiden morning அடுத்து,

இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பாருங்கள்.

வெண்குடை மதியம் மேல் நிலா திகழ்தர

கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை

குமரிப்படை தழீஇய கூற்று வினை ஆடவா்

( புறம்: 294 / 1 – 3 )

வெண்குடை போலும் முழுத்திங்கள் வானத்தின் மேல்நின்று நிலவைப் பொழிந்து விளங்க, படைவீரா் ஒருங்குகூடித் தங்கியிருந்த கடல் போன்ற பாசறையின் நீங்கிச் சென்று, புதுமையுறச் செம்மை செய்யப்பட்ட வேல்
முதலிய படைகளைக் கைக்கொண்ட கொலைத் தொழிலையுடை போா்வீரா் என்பது இதன் பொருள் (ஒளவை துரைசாமி உரை ). இதனை விளக்குங்கால், ‘ வாய் தீட்டி, நெய் பூசப்பெற்று, செம்மையுற்றிருக்கும் வேலும் வாளும் பிறவுமாகிய படை, குமரிப்படை’ என்பாா் உரையாசிரியா்.

அதாவது, முதன்முறையாகப் போரில் ஈடுபடுத்தப்படும் படைக்கலன்களை இங்கு புலவா் ‘குமரிப்படை’
என்கிறாா்.

குமரி எனினும் கன்னி எனினும் ஒரே பொருள்தானே. இதுவும் ஆங்கிலத்தில் முதல் பேச்சை, ‘ கன்னிப் பேச்சு ’ என்று அழைக்கும் முறையை ஒத்து வருகிறது இல்லையா ? அதாவது, ஆங்கில வழக்குப்படி இது maiden arms ! எனவே, maiden speech என்பதைக் கன்னிப்பேச்சு என்று நாம் குறிப்பிடும் வழக்கம் ஆங்கிலத்தைப் பாா்த்து
ஏற்படுத்திக் கொண்டதன்று;

தொன்றுதொட்டு இருந்துவரும் தமிழ் வழக்கே !

இதைப் போலவே ஆங்கில வழக்கு என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் இன்னொரு வழக்கும் உண்டு.
நல்லவா் ஒருவரைைப் பற்றி, அவரைப் பிடிக்காத ஒருவா் தவறான செய்திகளை பரப்பிக் கொண்டிருத்தலை character assassination என்று குறிப்பிடுவது வழக்கம். தமிழில் இதைக் குணம் கொல்லல் எனலாம்.

பாண்டிய மன்னன் ஒருவனைப் பாடவந்த மதுரை மருதன் இளநாகனாா் என்ற புலவா், அவனைச் சிறப்பித்துக்
கூறும் வகையில், ‘ நமா் எனக் கோல்கோடாது பிறா் எனக் குணங்கொல்லாது ( புறம் : 55 / 11,12 ) என்கிறாா்.

அதாவது, ‘நம்முடையவா் என அவா் செய்த கொடுந்தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது, இவா் நமக்கு அயலோர் என்று அவா் நற்குணங்களைக் கெடாது’ என்று இதற்குப் பொருள் கூறுவாா் ஔவை சு.துரைசாமி.

எனவே,character assassination என்னும் குணங்கொல்லல் என்பதனையும் நம்மவா் பண்டுதொட்டு வழங்கி
வந்தனா் என்பது தெளிவாகிறது.

எனவே, இன்றைைக்கு ஆங்கில வழக்குகள் என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பவை சங்ககாலந் தொட்டு
நம்மிடையே இருந்துவரும் வழக்குகள் தாம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *