தினசெய்தி நாளிதழில் இன்று (20.07.2020) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 44)
‘‘தலைமைச் செயலகத்தின் தகைமையும் திறமையும்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
ஓர் அரசு சிறப்பான ஆட்சி நடத்தி மக்களின் உரிமைகளை நிலை நாட்டும் என்றால் அந்நாட்டின் ‘அரசியலமைப்பு’ போற்றத்தக்க வகையில் அமைந்த திறமுடையதாகும்.
ஏறத்தாழ முப்பது மாநிலங்களின் ஒருங்கிணைப்பில், கூட்டாட்சி முறையில் இயங்கும் நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தினைப் பொதுமக்களும், மாணவர்களும் வாய்ப்பு நேரும்போது அறிந்து தெளிவடைய வேண்டும்.
நமது அரசியல் அமைப்புச் சட்டம் பல்வேறு நாடுகளின் அடிப்படைச் சட்டங்களில் உள்ள கருத்துகளையும் உள்ளடக்கியது. அமெரிக்கா, அயர்லாந்து, சோவியத்து ருசியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, செருமனி, ஆத்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அடிப்படை சட்டங்களிலிருந்து நமது அரசியல் அமைப்புச் சட்டத்திற்குத் தேவையான கருத்துகளை நம் நாட்டிற்கு ஏற்ற வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் வல்லவர்கள் அமைத்தனர்.
சட்ட மாமேதை அறிஞர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று உணரலாம். மேலும், தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள பல தரப்பினருக்கும் குறிப்பாகச் சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கேள்வி பதில் வடிவில் ஓய்வுபெற்ற உயர் அலுவலர் என்.எம்.பெருமாள் தனது நூலில் இச்சட்டத்தின் பல்வேறு நுணுக்கங்களைத் குறிப்பிட்டு உள்ளார்.
எழுத்துத்திலகமாக வாழ்ந்த சுஜாதா மூளையின் செயற்பாடுகளைப் பற்றிக் கேள்வி பதிலாக எழுதிய நூலுக்குப் பெயர் தலைமைச் செயலகம் என்பதாகும். தலைமைச் செயலகம் என்பது மிக அழகான தலைப்பு. உடம்பின் செயற்பாட்டுக்கெல்லாம் ஒரு முதன்மைச் செயலகமாக மூளை விளங்குவது போல அரசின் செயற்பாடுகள் அனைத்திற்கும் மாநில அளவில் தலைமைச் செயலகம் உருவாயிற்று.
பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பின்னர், தலைமைச் செயலகத்தில் பெருங்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது நீங்களும் நானும் அடிக்கடி தொட்ட, தொடுகிற கோப்பு இருக்கிறதே, அதற்கு ஆங்கிலத்தில் File என்று பெயர். அந்த நான்கு எழுத்துகளையும் நீங்கள் கொஞ்சம் மாற்றிச் சேர்த்தால் Life என்று வரும். எனவே, கோப்பினை தொடுகிறபோது, ஓர் ஏழையின் அழுகுரல் கேட்கும். இல்லாதவரின் குமுறல் கேட்கும். ஊரார் தனக்குத் தேவை என்று கேட்ட வேண்டுதல் கேட்கும். எனவே, கோப்பினைத் தொடுகிறபோது ஓர் ஏழையின் அழுகுரல் கேட்கும். இல்லாதவரின் குமுறல் ஒலிக்கும். ஊரார் தனக்குத் தேவை என்று கேட்ட வேண்டுதல் இரங்கி நிற்கும். எனவே, தொடுகிற போதெல்லாம் நடுங்குகிற குரல் உங்கள் காதில் கேட்பது போல, உங்கள் விரல்களும் அதை விரைந்து அனுப்பி, எப்படி நிறைந்த பலனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளவும் அவர்கள் சிந்துகிற கண்ணீரைத் துடைக்கலாம் என்பதற்கு முற்படும் கரங்கள்தான் தலைமைச் செயலகத்தின் அலுவலர் கரங்கள் என்று குறிப்பிட்டார்.
இந்திய நாடு விடுதலை அடைந்தபோதே சென்னை புனித ஜார்ஜ் கோட்டைதான் தலைமைச் செயலகமாகச் செயற்பட்டு வந்ததை நாமறிவோம். உத்தமர் ஓமந்தூரார் தான் விடுதலைக் கொடியை ஏற்றி வைத்த பெருமை கொண்ட முதலமைச்சர் என்று அனைவரும் சொல்வார்கள். அப்போது, அவருக்கு பெயரேகூட பிரதமஅமைச்சர் என்றுதான் இருந்தது.
தலைமைச் செயலகத்தில் முதன்மைக் கட்டடம் மூன்று தளங்களைக் கொண்டது. இரண்டாம் தளத்தில், தலைமைச் செயலாளர் இருப்பது போலவும், பிறகு சுற்றி வருகிற வட்டத்தைப் பார்த்தால், முதலமைச்சர் அறையும், அமைச்சர்களின் அறைகளும் வகுத்து வைத்திருந்தார்கள். சட்டப் பேரவையும், மேலவையும் முதல் தளத்தின் வட முனையில் பேரவைகளாக அமைந்துள்ளன.
தலைமைச் செயலகத்தில் இந்த மூன்று தளங்களில் பணியாற்றிய அலுவலர் எண்ணிக்கை காலந்தோறும் பல்கிப் பெருகியதால் பத்து மாடிக் கட்டடத்தை முதன்மை அலுவலகத்துக்கு எதிர்ப்புறத்தில் கட்டி அந்தக் கட்டடத்தை நாமக்கல் கவிஞர் மாளிகை என்ற நற்பெயரை முத்தமிழ் அறிஞர் கலைஞர் சூட்டினார். இக்கட்டடத்தை முதன்மை கட்டடத்துடன் இணைக்க ஓர் இணைப்பு நடை பாலம் கட்டப்பட்டது புதுமையும், பொலிவுடையதாகும்.
விடுதலை அடைந்த பிறகு, அரசு அலுவலரை Writer என்று குறித்தனர். கொல்கத்தாவின் தலைமைச் செயலகம் எழுத்தர் கட்டடம் என்றே அழைக்கப்படுகிறது.
இப்போது முப்பத்து ஆறுக்கு மேற்பட்ட துறைகளும், ஏழாயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்களும் பணியாற்றுகின்றனர்.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது ஒரு பெருமிதமான பணியாகும். தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவதற்குத்தான் தேர்வாணையத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை பணியமர்த்தம் செய்யும் நிலை இருந்தது. இந்நிலையில்தான் அரசு செயலாளர்கள் எல்லாம் ஆட்சிப் பணித் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்வு பெற்ற அலுவலர் பெருமக்கள் செயலாளர்களாக இருந்தார்கள். தமிழகத் தலைமைச் செயலக முடிவை இந்திய அரசு எப்போதும் பாராட்டும்.
புரட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்த பின்னர், அவரைக் கண்ணாரக் காண வேண்டும் என்ற பேரார்வத்துடன், கொடுத்துச் சிவந்த குமணனே இப்போது கோலோச்சி வந்திருக்கிறார் என்று அவரை தலைமைச் செயலக அலுவலர் சங்கத்திற்கு அழைத்து வந்தார்கள்.
அவர் ஆட்சிக்கு வந்தபோது, சில குறிப்புகளைக் கேட்டாராம். எத்தனை துறைகள் உள்ளன? அலுவலர்கள் எத்தனை பேர்? பணியாளர்கள் எத்தனை பேர்? என்று கேட்டுவிட்டு, அவர் கேட்டதிலே புதுமையானது என்னவென்றால், அந்தந்த மாநிலத்தில் தலைமைச் செயலகத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தமிழகத்தின் தலைமைச் செயலகத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை என்ன? என்ற ஒரு குறிப்பையும் தனியாக வைத்திருந்தார்.
ஆட்சித்திறம் என்பது, தன் நுண்ணறிவால், சிந்தனையால், உடனிருக்கும் உயர் அலுவலர்கள் சொல்வதைக் கேட்டு, தன் கருத்து வளத்தால் திருத்தி மேம்படுத்துவதுவதாகும்.
பெருந்தலைவர் காமராசர் தன்னுடைய சிந்தனை வளத்தாலும், தன் இயல்பான சமூக அக்கறை காரணமாகவும் சிறப்பாக செயற்பட்டதை ஒரு சான்றின் மூலம் அறியலாம். எங்களுக்கு பள்ளிக்கூடம் இல்லை. நாங்கள் பள்ளிக்கு போவதென்றால், ஐந்து கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, எங்களுக்கு ஒரு பள்ளியை உருவாக்கித் தர வேண்டும் என்று சிற்றூர்ப்புரத்தைச் சார்ந்த மக்கள் அருப்புக் கோட்டையிலிருந்து ஒருமுறை அவரைக் கேட்டார்களாம். பெருந்தலைவர் உடனே, பள்ளிதானே கேட்கிறீர்கள், நான் உடனே செய்கிறேன். படிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு தராமல் நான் பதவியில் இருப்பதில் என்ன பயன் என்று அவர் மறுநாள் தன்னுடைய அலுவலகத்திற்கு வந்தபோது கேட்டாராம். எங்கே பள்ளி வைக்கலாம் என்றாராம். அதற்கு அரசு செயலாளர், ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் இரண்டு மேநிலைப் பள்ளிகளை வைப்பது அரசின் விதிகளுக்கு புறம்பானது என்றாராம். அதற்கு பெருந்தலைவர், நீங்கள் சொல்லும் விதி சரிதான். அந்தப் பள்ளியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் நடந்த பிறகு வழியில் உள்ள வாய்க்காலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெள்ளம் வருவதால், அவர்கள் நீந்திக் கடக்கிறார்கள். இது எப்படிப் பொருந்தும் என்றாராம்.
அரசு செயலாளர் போய்த் திரும்பி வந்து, விதியில் மாற்றம் செய்யலாம். நடுவில் வாய்க்காலோ, தடையோ, வனப்பகுதியோ இருந்தால், ஐந்து கிலோ மீட்டருக்குள் இரண்டு பள்ளிகளை வைப்பதற்கு தடையில்லை என்றாராம். உடனே பெருந்தலைவர் கையெழுத்திட்டார்.
அதேபோல்தான் புரட்சித்தலைவர், தன்னைச் சூழ்ந்தவர்கள் கூறும் கருத்தை நிதானமாக கேட்டுக், கண்ணால் கண்டதைக் கையால் செய்வார்கள் என்று கூறும் திறமையைக் கொண்டிருந்தார். அந்த வகையில், எந்த அரசிலும் மாறாது நின்ற மதிநலம் மிகுந்த உயர் ஆட்சிப் பணி அலுவலர்கள் புகழ் சேர்த்திருக்கிறார்கள். சான்றாக, பன்னிரண்டு ஆண்டுகளாக நான்கு முதலமைச்சர்களிடம் ஒப்பற்ற நிதிச் செயலாளராகத் திகழ்ந்து எவர் மனமும் எள்ளளவும் கோணாமல் உயரிய திட்டங்களை உருவாக்கி வெற்றி கண்டதோடு இன்றைய தலைமைச் செயலாளர் க.சண்முகம் புகழோடு தலைமை தாங்குகிறார் என்பது பாராட்டத்தக்கது.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment