POST: 2019-11-11T10:07:29+05:30

===============================================உகரம் ஏப்ரல் 2019 இதழில் முனைவர் ஔவை நடராசன் அவர்களைப் பற்றி முனைவர் மலையமான் அவர்கள் எழுதிய கட்டுரை
===============================================

தமிழ்நாட்டின் பண்பாட்டுச் செல்வம் வாழ்க!
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
– முனைவர் மலையமான்

திருவண்ணாமலையை அடுத்து, செங்கம் என்ற ஊர் உள்ளது. இதன் பழைய பெயர் செங்கன்மா. சிவந்த கண்ணுடைய விலங்கு என்பது இதன் பொருள். செங்கண்மா என்பது காலப்போக்கில் செங்கம் என்று குறுகிவிட்டது. இவ்வூர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது சங்க காலத்துக்கு உரிய ஊர். இதை நன்னன் என்ற குறுநில மன்னன் ஆண்டான். மலைபடுகடாம் என்ற சங்க இலக்கியம் நன்னனைப் பற்றிச் சொன்னது.

செங்கத்தில் முன்பு ஒரே ஒரு உயர்நிலைக் கூடம் இருந்தது. 1944 ஆம் ஆண்டில் புகழ் பெற்ற ஆசிரியர்கள் அங்குப் பணியாற்றினார்கள் அவர்களில் ஒருவர் ஔவை துரைசாமிபிள்ளை . நான் இவருடைய மாணவன். இவருடைய மகளான பாலகுசம் என் வகுப்புத்தோழி. என் தந்தையார் இரா.நாராயணனும் புகழ்பெற்ற ஆசிரியர். இவரும் ஔவை துரைசாமியாரும் நண்பர்கள். செங்கம் சிவன் கோயில், பழைமையானது. அங்கு இசைக்கல்வெட்டு உள்ளது. அதனை ஔவை துசைாமியார் படி எடுத்தார். செங்கத்தைப் பற்றியும் அருமையான கட்டுரை ஒன்றை அவர் எழுதினார். இவர் நாவேந்தர், ஔவை நடராஜனின் தந்தையார். உரை வேந்தர் என்ற பெருமைக்கு உரியவர்.

கரந்தை புலவர் கல்லூரியில் படித்து, நான் பட்டம் பெற்றேன். செங்கம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தேன். பிறகு, சென்னைக்கு வந்தேன். குருசாமி முதலியார், தொண்டை மண்டலத்துளுவ வேளாளர் பள்ளியில் பணி செய்யதங் தொடங்கினேன். நச்சினார்க்கினியன் என்ற புனை பெயர் கொண்ட சிறுவை மோகன சுந்தரம் என்ற பெருந்தொண்டர், சென்னையில் இருந்தார். அவர் நக்கீரர் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் ஓர் உறுப்பாகத் திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியை அவர் நடத்தினார். மதிப்பியல் பேராசிரியராக நான் அங்குத் தொண்டாற்றி வந்தேன். பாரிமுனையில் இறங்கி கல்லூரிக்குச் செல்வதற்காக, வழக்கம் போல் அரண்மனைக்காரன் (அர்மீனியன்) தெருவில் நடக்கத் தொடங்கினேன். அத்தெருவின் முனையில் ஒரு மண்டபம் இருந்தது. அதில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நான் நின்றேன். உள்ளே சென்றேன். எட்டிப்பார்ததேன். ஓர் இளைஞர், மிக அருமையாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் யார் என்று அருகில் இருந்தவரிடம் வினாவினேன். பச்சையப்பன் கல்லூரி மாணவர் நடராசன் என்ற விடை கிடைத்தது. அவருடைய சொற்பொழிவில் மயங்கினேன். அங்கேயே நிலைத்து நின்று விட்டேன். சிறிது நேரம் கழிந்தது. கடமை உணர்வு விழித்துக் கொண்டேன். அன்று வகுப்புக்குத் தாமதமாகச் சென்றேன். மாணவரிடம் உண்மையைச் சொன்னேன்.

அந்த நடராசன் ஔவை நடராசன் ஆனார். அந்த மாணவர், உலகப் பேரறிஞர் திருவள்ளுவரின் சீடன் ஆனார்.

கேட்டார் பிணிக்கும் தகையவாய்ககேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

என்ற குறளுக்கு இலக்கணம் ஆனார். பட்டிமன்றங்களின் தாமைப் பேச்சாளர் ஆனார். பட்டி தொட்டிகளிலும் முழங்கினார். பாம்படப் பேசினார். எங்கும் வெற்றி வாகை சூடினார். ஒரு முறை, எதிரணியில் தீபம் பார்த்தசாரதி என்ற எழுத்தாளர் வாதம் செய்தார். அவருடைய கருத்தை மறுத்தார் ஔவை நடராசன். தன் முடிவுரையில் “இந்தச் செய்திகளைப் பார்த்தசாரதி, பாராத சாரதி ஆனார்”, என்று நயம்பட கூறினார் கையொலியால் மண்டபம் அதிர்ந்தது.

சைவ சிந்தாந்த மன்றம், ஒரு முறை கூட்டம் நடத்தியது./ ஔவையார் அதில் உரையாற்றினார். “தெற்கே இருந்து 3 பிள்ளைகள் சென்னைக்கு வந்தார்கள். சிறப்பைப் பெற்றார்கள், என்றார். கூட்டத்திலிருந்தவர்கள். சிந்திக்கத் தொடங்கினார்கள். “அந்த 3 பிள்ளைகள் யார், தெரியுமா? அவர்கள் கா.சு. பிள்ளை , சேதுப்பிள்ளை , சுப்பையாபிள்ளை” என்று ஔவையார் சொன்னார். அப்போது பேரொலி எழுந்தது.

பல்வேறு பணிகளைச் செய்த பிறகு நான் தலைமைச் செயலக நூலகராகப் பொறுப்பேற்றேன். ஒளயைாரும் பலப்பல பதவிகளிலிருந்த பிறகு தலைமைச் செயலகத்தில் மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் பதவியில் அமர்ந்தார். செய்தி – விளம்பரத்துறை, அப்போது அகவிதழ் (House Magazine) வெளியிட்டு வந்தது. அந்த இதழ் ஒளவையாரின் சிறப்புகளை எடுத்துரைத்தது. கிருஷ்ணா சீனிவாஸ் என்ற கவிஞர், அன்றைய சென்னை ராஜாஜி, மன்றத்தில் ஆசியக் கவிஞர் மாநாடு நடத்தினார். பேராசிரியர்) மே. சுந்தரத்தின் பரிந்துரை காரணமாக அம்மாநாட்டில் நான் ஏன் ஆங்கிலக் கவிதை ஒன்றைப் படித்தேன். எனவே, என் நிழற் படமும் நான் படித்த ஆங்கிலக் கவிதையும் அந்த அகவிதழில் இடம் பெற்றன. ஒளவை பற்றிய செய்தியுடன் என்னைப் பற்றிய தகவலும் வந்ததனால் நான் மகிழ்வடைந்தேன்.

ஔவை நடராசன் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர், என்ற உயர்வு நிறைபெற்றார். தமிழக அரசில், இ.ஆ.ப. என்ற பட்டம் பெறாத எவரும் செயலாளர் ஆக முடியாது. ஆனால் அந்தப் பட்டம் பெறாத ஒளவையார் செயலாளர் ஆனது தனிச்சிறப்புக்குரியது. இந்தச் சிறப்பு அவருக்கு முன்னும் யாருக்கும் தரப்படவில்லை . அவருக்குப் பிறகும் யாருக்கும் கிடைக்கவில்லை.

டி.கே, சிதம்பரநாதன் என்ற கம்பராமாயணப் பேரறிஞர், வட்டக் தொட்டி என்ற அமைப்பை வைத்திருந்தார். அந்த அமைப்பில் தமிழறிஞர்கள் இருப்பார்கள். ஒளவையாரின் அறை வட்டத்தொட்டியை நினைவூட்டியது. அவரைக்காண வரும் தமிழறிஞர்கள் பலர் அவரைக் சூழ்ந்திருப்பார்கள். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பிறகு பொறுப்பேற்ற பேரா.சி. பாலசுப்பிரமணியம் வாழும் பாவாணரான அரசேந்திரன் முதலியவர்களை அவரின் அறையில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

ஔவை நடராசன் நுண்ணறிவு மிக்கவர். அவர் என்னிடம் ஒரு சமயம் ஒரு வினா தொடுத்தார். ‘புலி ஓர் விலங்கு. அதற்கு வலப்பக்கம் எது, இடப்பக்கம் எது என்பது தெரியாது. புலி, மான் முதலிய விலங்கை அடித்து வீழ்த்தும் அப்படி சாயும் விலங்கு இடப்பக்கமாக விழுந்தால், அதை அந்தப் புலி தின்னாது’ என்று புறப்பாடல் ஒன்று சொல்கிறது.

“இடம்படுபு அறியாது வலம்படு வேட்டத்து’ என்ற தொடர் அது. அற்ப அறிவுடைய புலிக்கு இடப்பக்கம் தெரியுமா? என்று அவர் கேட்டார். நான் “தெரியாது” என்றேன். புலிக்கும் தெரியாது. அவருடைய வினாவுக்கு எனக்கும் விடை தெரியாது என்ற பொருளில் அமைந்தது என் பதில்.

ஔவையார், மொரிஷியஸ் நாட்டிற்குச் சென்றிருந்த போது நடந்தது இது. அங்குக் கூட்டத்திலிருந்த தமிழர்கள் தாங்கள் தாழ்வு நிலையில் இருப்பதாக உணர்ந்திருந்தார்கள். அதை மாற்றும் முறையில் “நீங்கள் பழுப்பு ஆங்கிலேயர்கள்” என்று அறிவித்தார். நடராசன் நிறம் வேறுபட்ட ஆங்கிலேயர் நீங்கள் என்று கூறய காரணத்தால், அந்த அவையினர் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.

தமிழர்கள், தம்மவர் முன்னேற முடியாதபடி தடுக்கும் இயல்பு கொண்டவர்கள் என்ற வருத்தம் ஒளயைாருக்கு உண்டு. இதை நண்டுக்கதை ஒன்றின் மூலம், அவர் தெரிவித்தார். பல நாட்டு நண்டினங்கள் தனித்தனி கலயங்களில் (சிறு சட்டிகளில் வைக்கப்பட்டிருந்த தன் அந்தக் தலயங்களின் மேற்பகுதி மூடப்பட்டிருந்தது. அவை திறந்திருக்குமானால் நண்டுகள் தப்பிச் சென்று வருமல்லவா! ஆனால் ஒரே ஒரு கலயத்தின் மேல் வாய் மட்டும் மூடப்படாமல் இருந்தது. இது “இது இக்கலயம் மட்டும் மூடப்படாமல் உள்ளதோ?” என்று ஒருவர் கேட்டாராம். இவை மேலே ஏறினால் கீழே உள்ள நண்டு தப்பிக்க முயன்று ஒரு நண்டு அதை இழுத்துக் கலயத்திற்குள் தள்ளிவிடும். ஆகவே, ஒரு நண்டு கூட வெளியே சென்று விடாது. என்று விடை கூறப்பட்டது. ஔவையாரின், இந்தக் கதையில் நகைச் சுவையுடன் அவலச் சுவை கலந்திருப்பதை உணர முடியும். இந்தப் பொருந்தாப் போக்கு மாறாதா என்ற ஏக்கமும் நிழலாடுவதையும் உணர முடியும்.

இன்று தமிழன், தமிங்கிலனாக மாறி வருகிறான். “அம்மா” அழிகிறது. ‘மம்மி’ எழுகிறது. இந்த வேதனையும் ஔவையாரின் உள்ளத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது அதைப் பின்வரும் செய்தியால் அறியமுடிகிறது. ஒரு சிற்றூருக்கு ஔவை சென்றாராம். அது ஆங்கில ஆதிக்கம் சிறிதும் இல்லாத ஊர். அங்கு ஒரு மூதாட்டி, “சாணியைத்’ ”திக்காகக் கரை” என்று இளையவளுக்கு ஆணையிட்டாளாம். ஆங்கிலச் சொல்லான “திக்” என்பதைக் கேட்ட ஒளவையின் மனம் திக்கென்று அஞ்சியதாம். திக்கென்ற பயமும் ஆங்கிலத்தில் திக்கென்ற சொல்லும் இங்கே நயமாக வெளிப்பட்டாலும் ஆங்கில மேலாண்மையைக் கண்டு அவருடைய மனம் நொந்ததை யூகிக்க முடிகிறது.

ஔவையார் நினைவாற்றல் மிக்கவர். ஜே.ஜி. கண்ணப்பன் – வாசுகி இணையர், தங்கள் குலதெய்வமான வீரபத்திரசுவாமிக்கு இருமுறை மாநாடுகள் நடத்தினார்கள். மாநட்டு மலர்கள் தயாரிக்கும் பொறுப்பு எனக்கும் எனது மனைவியாருக்கும் தரப்பட்டது. மாலை வேளையில் மாநாடு மேனாள் திரு. அமைச்சர் வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. சிறப்புரையாற்றும் வாய்ப்பு ஔவையாருக்குத் தரப்பட்டிருந்தது. வெளியூர்ப் பயணம் முடித்துவிட்டு வந்து ஔவையார். என்னைத் தனியாக அழைத்தார். வீரபத்திரர் மாநாட்டு மலரின் சுருக்கத்தைச் சொல்லும்படி அறிவித்தார். என் நினைவில் இருந்தவற்றை நான் சொன்னேன். அவற்றைக் கூர்ந்து கேட்டார் அவர். பிறகு மேடையில் மிக அருமையாக உரையாற்றினார். அவருடைய உரையை வீரப்பன் பாராட்டினார். நிகழ்ச்சி முடிந்தது. அவருடைய நண்பர் ஒருவர், “உங்கள் உரை சிறப்பாக இருந்தது” என்று கூறினார். அதற்கு அவர் “நான் எங்கே பேசினேன்? மலையமான் தான் பேசினார்” என்றார். அருகிலிருந்த நான் மனம் உருகிப்போனேன். அவருடைய உயர்ந்த உள்ளம் கண்டு மிகவும் நெகிழ்ந்தேன். அவருடைய நினைவாற்றலை வியந்தேன்.

ஔவையார் மனம் திறந்து பாராட்டும் பெரும் பண்பு கொண்டவர் பதின் கவனகர் கலைச்செழியனும் அவருடைய தந்தையும், பெரம்பூரில் பொன்னவைக்கோவுக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். அப்போது ஔவை நடராசன் இளையவரான பொன்வைக்கோவின் சிறப்பதனை விரித்துரைத்தார் பாராட்டினார். அவரிடம் தன் நூலுக்கு முன்னுரையை கேட்பவரின் பெருமைகளையும் அருமையாக எழுதித்தருவார். அவர் தமிழும், தமிழரும் என்ற என் நூலுக்கு அவர், சிறப்புரை வழங்கினார். “நண்பர் மலையமான் பல கலைப் புலமைச் சான்றவர். கதை, கவிதை கட்டுரை, நாடகம், அறிவியற் கலை எனப் பன்னூல்களைத் தமிழுக்குப் படைத்துள்ளார். சிந்தனை வளத்தோடு எழுதும் நூலாசிரியர் என்ற நிலையோடு தறுகண்மை வாய்ந்த செந்தமிழ் மறவராகவும் தமிழ்க் காப்புப் போராட்டங்களிலும் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்” என்று மிக மிக உயர்வாக எழுதியுள்ளார். என் துணைவியார் சரளா இராசகோபாலனைப் பற்றி “நாடறிந்த, பலர் புகழ் பரிசில் பல பெற்றா, நல்லிசைப் புலமையாளனர் என்று தன் சிறப்புரையில் அறிவித்துள்ளார்.

அவர், தன்னிடம் வரும் இளைஞர்களை “நாராஜ” என்றே சொல்வார். அவரிடம் உதவும் மனப்பான்மை உண்டு. தினமணியில் ஆதி தமிழரைப் பற்றி நான் கட்டுரை எழுதி வருகிறேன். சுணக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர் எனக்காக ஆசிரியரிடம் பரிந்துரை செய்தார்.

அவருடைய மகன் முனைவர் அருள் ஔவை நடராசனின் பாணியில் பேசி வருகிறார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. மரபு நிலை தொடர்கிறது. பண்பாட்டுச் செல்வமான நாவேந்தர். நடராசன் நெடுங்காலம் நலமாக வாழ வேண்டும். அதனால் மொழியும் வளம் பெறும். நாடும் மேன்மையுறும்..

————————

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *