குறளோடு விளையாடு நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரையிலிருந்து….
மாணவச் செல்வங்களுக்கு வாய்த்த இந்தப் பருவம் சேமிப்புப் பருவமாகும்.
சிந்தனையின் கருத்துகளைச் சேர்த்து வைக்கும் பருவமாகும்.
எண்ணங்களைப் பதிவு செய்து கொள்வதும், ஈடேற்றத்துக்கு உதவும் கருத்துகளை மனத்தில் பதித்து வைக்கவும் வாய்த்த பருவமாகும்.
நாளொன்று கழிந்தால் திருக்குறள் ஒன்று பயின்றோம் என்று மனத்தில் உறுதி பெற வேண்டிய பருவம்.
இந்த அரிய வாய்ப்பை மாணவச் செல்வங்கள் பயன் கொண்டு ஆயிரம் குறட்பாக்களையாவது மனனம் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.
திருக்குறள் என்பது, இன்று நாளைக்கு மட்டுமல்ல. வாழ்வில் என்றும் பயன் தரும் வாழ்க்கை விளக்கமாகும்.
திருக்குறளைக் கையில் வைத்திருந்தால், ஒப்பரிய ஒரு சான்றோரோடு நாம் உடன் இருப்பது போன்ற உணர்வு தோன்றும்.
மாணவச் செல்வங்கள் தங்கள் மதி நுட்பத்தைச் சிறப்பாக வளர்த்துக் கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி வழிகாட்டியாக உதவும்.

Add a Comment