இரங்கலுரை
சான்றோர் மாதேவன் மறைவு
பேராசிரியர் சி.எஸ்.மகாதேவனுடன் நானும் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றியிருக்கிறேன். அடக்கமும், அமைதியும், பரிவும், பண்பும் பெருகிய நிலையில் இனிமையாகப் பழகும் பேராசிரியர் பச்சையப்பர் கல்லூரியில் எனக்குப்பின் ஓராண்டு இளையவராகப் படித்தவர். பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் தான் அவரை அழைத்துக்கொண்டு வந்து சேர்த்தவர். பேராசிரியர் மு.வ.வின் அன்பிற்கினிய மாணவராக இருந்து பேராசிரியரின் பி.எச்.டி. பட்டப்பேற்றுக்கு எழுதிய ஆய்வேட்டைத் தமிழில் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்று வனப்புற மொழிபெயர்த்த திறம் சான்றவர். கல்லூரியில் தேசிய மாணவர் படைப் பயிற்சியில் மேனிலைத் தளபதியாகத் திகழ்ந்தவர். பேராசிரியர் கருணாகரனுக்குப் பிறகு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக மிளிர்ந்தவரும் அவரே. ஏறக்குறையத் தமியராக ஓய்வுபெற்றபிறகு ஒடுங்கி மதுரையிலேயே வாழ்ந்திருந்தார். கிரேக்கப் பண்பாட்டோடு தமிழர் புறத்திணையியல் எவ்வாறு ஒத்திசைந்தது என்பது பொருளாகத் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை எழுதினார். அவருடைய மறைவு நமக்குக் கலக்கத்தைத் தருகிறது. மாதேவன் செயலும் சிந்தையும் இளையோர் உலகத்திற்கு வழிகாட்டுமாக !
இன்று காலை என் சிறிய தந்தையார் டாக்டர் மெய்கண்டான் அவர்கள் மதுரையில் அவர்கள் இல்லத்திற்குச் சென்று திரும்பியதும் கவலைதரும் இச் செய்தியைக் கூறினார்.
….. முனைவர் ஔவை நடராசன்

Add a Comment