சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-9
– பீட்டர் குயென்னெல்
சேக்ஸ்பியருடைய பன்முகப்பட்ட, சிக்கலார்ந்த இயல்பின் ஒரு பகுதியினை மட்டிலும் இதுவரை ஆய்ந்தளித்துள்ளேன். நட்பாம் கிழமை பாராட்டிய சேக்ஸ்பியரையும், மென்மையான குணம் படைத்த சேக்ஸ்பியரையும், வாழ்வியலிலும் வெற்றி ஈட்டியவரும், குடும்பத்தின் வளத்தை மீட்டெடுத்தவரும், தந்தைக்குப் புத்தம் புதிய, மரபுவழிப்பட்ட, படைவீரர் செருக்குக் காட்டும் ஆடைவகைகளைப் பெற்றுத் தந்தவரும், திறமிக்க முதலீடுகளைச் செய்தவரும், ஸ்ட்ரேட்ஃபோர்டில் மிகப் பெரிய மாளிகையை வாங்கியவருமான கவிஞரைப் பற்றி ஆய்வு செய்தேன்.
சேக்ஸ்பியருடைய ஆக்கங்களின் முதற் தொகுப்பின் முகப்புப் பக்கத்தில் மிளிரும் ஓவியத்தைத் தீட்டிய ட்ரோஷவுட் எனும் ஓவியர் அத்தகைய சேக்ஸ்பியரைத் தான் வரைந்தளித்துள்ளார்.
அந்த ஓவியம் பரவலாக திறனாய்வுக்கு உட்படுத்தப் பட்டது. அது உருவ ஒற்றுமையை மிகச் சிறந்த முறையில், முழுநிறைவாக உள்ளடக்கி இருந்த போதிலும், உணர்ச்சியற்று சோர்வாகக் காணப்படுவதாக விலக்கப்பட்டது. ஓவியம் உயிர்வாழும் மனிதனுடையதாக இல்லை என்றும் கவிஞருடைய உண்மையான அடையாளத்தை மறைக்கும் வகையில் முகமூடி அணிந்துள்ள ஒருவருடைய முகமாகக் காட்சியளிப்பதாகவும் கூறுமளவிற்கு சேக்ஸ்பியர் எதிர்ப்பாளர் ஒருவர் துணிந்துள்ளார். இருப்பினும், மற்றொரு பரந்த நோக்கில் பார்த்தால், சேக்ஸ்பியர் உண்மையிலேயே ஒரு முகமூடியை அணிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஓவியர் நட்புப் பாராட்டும் சேக்ஸ்பியரைத் தனது கலையின் நாயகனாகக் கொண்டிருந்த போதிலும் அதன் அடி ஆழத்தில் அவருடைய பல்வேறு பான்மைகளும் நிழலாடி இருக்கலாம்.

Add a Comment