அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -3
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை
குறைமாதக் குழந்தைக்குத் தகுந்த வெட்பதட்பம், பிராணவாயு, உணவு ஆகியவற்றை அக்குழந்தையின் வளர்ச்சிக்கேற்ற வகையில் வசதியாகக் காக்கும் சூடுப்பெட்டி (Incubator) , மஞ்சள்காமாலையினால் தாக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு இரத்த மாற்றுதல் போன்றவைகளும் மற்றும் பல நவீன கண்டுபிடிப்புகள் குறைமாதக் குழந்தையின் வளர்ச்சியைக் கருதிய கற்பகங்களாக அமைந்துள்ளன.
பிறந்தவுடன் மனவளர்ச்சி
பிறந்த குழந்தைக்கும் மன உணர்வுகள் உண்டு.
முழுமையான வளர்ச்சிக்குக் குழந்தையின் மனவளர்ச்சியைக் குறைக்காமல் காக்கவேண்டும்.
மனவளர்ச்சிக்கு முதன்மையான இடத்தை இப்போது மருத்துவம் வழங்குகிறது.
குழந்தை பிறந்தவுடன் தாயும் சேயும் ஒன்றாக இருக்கவைப்பது, குழந்தைக்குச் சீம்பாலும், தாய்ப்பாலும் தொடர்ந்து அளிப்பது, தாய்க்கு அறுவைச்சிகிச்சையில் பிறந்த குழந்தையாக இருந்தாலும் குழந்தையைத் தாயுடன் சேர்த்து வைப்பது, தாய்சேய் பாசப் பிணைப்பை வளர்க்கும்.
இந்த வகையில்
கனிவு (Tender),
உறவு (Affection),
அன்பு (Love),
பரிவு (Care),
காப்பு (Security)
என்பதைத் தொடக்க நாள்களில் பெறாத குழந்தைகள் தான் பிற்காலத்தில் சமூக விரோதிகளாக மாறிவிடுகிறார்கள். தெருவில் அலையும் திக்கற்ற பறவைகளாக மாறிவிடுகிறார்கள்.
குழந்தையின் உணவு
குழந்தை பிறந்த நான்கு மாதத்திலிருந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டுவது மிகமிக அவசியமாகும்.
குழந்தைக்குத் தேவையான அளவில் உணவுச் சத்துக்கள், நோய்த் தடுப்புச் சக்திகள் அனைத்தும் தாய்ப்பாலில் தான் உள்ளன. தாய்ப்பாலே தலைசிறந்த பாலென்று அனைவருக்கும் இப்போது உணர்த்தப்படுகிறது.
தாய்ப்பால் ஊட்டும் முறையைக் கடைப்பிடிப்பதாலேயே இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம்
குழந்தையின் நான்காவது மாதத்திலிருந்தே திட உணவைச் சீருணவாக அளிக்கவேண்டும். மேலும் வளர்கின்ற குழந்தைகளுக்குப் புரதச்சத்தே அவசியமாகும். இந்தப் புரதச் சத்து குறைந்தால் குழந்தையின் வளர்ச்சி குறையும். அந்தந்த வயதிற்கேற்ற புரதச் சத்து, மாவுச்சத்து, வைட்டமின் சத்து, தாதுச் சத்து இவற்றையெல்லாம் பெற்றோர்கள் தாமும் அறிந்துகொண்டு, இல்லையென்றால் கேட்டறிந்து தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டும்.

Add a Comment