இந்தியப் பண்பாடு-30
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் துணைவேந்தர்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
இதில் இன்னும் கூட ஒரு வேடிக்கை.வேந்தர்கள் மட்டும் தானா கட்டினார்கள் என்று பார்த்தால் மக்கள் எல்லோரும் அதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய வேந்தன் இராசராசன், அவன் கட்டியிருக்கிறான், அதில் புதுமை ஏது?
குருச்சேவ் இங்கு வந்தபொழுது அவருக்குத் தாஜ்மகாலைக் காட்டியபோது, இந்த மாளிகையினுடைய பளிங்குச் சுவர்களின் வெண்மை எனக்குத்தெரியவில்லை, உழைப்பாளிகளுடைய சிந்திய இரத்தம் தான் தெரிந்தது என்று சொன்னார். ஆனால், அவர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்?
இராசராசன் கோயிலைப் பற்றி ஒரு கதை சொல்கிறார்கள்,
மன்னன் தானே கட்டுகிறான் என்று எண்ண முடியாதபடி ஒரு
கதை. கோயிற் சிற்பிகளெல்லாம் பகல் நேரத்தில் வெயில்
தாங்காமல் வெற்றிலை பாக்கு மென்றபடி ஒரு கிழவியின்
குடிசை ஓரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்களாம். அவள்
தனியான கிழவி. உற்றார்களோ, சுற்றத்தவர்களோ யாரும்
இல்லை. அவர்கள் சொன்னார்களாம், ஏய் கிழவி! இந்தக்
கோயிலுக்கு நீ ஏதாவது கொடு என்று. அந்தக் கிழவி
சொன்னாளாம் `வருகிறவர்களுக்கு நீர்மோர் கொடுக்கிறேன்,
வேறு என்னாலே என்ன கொடுக்கமுடியும், வேண்டுமென்றால்,
இந்த முற்றத்திலிருக்கிற கல்லை எடுத்துக்கொள்ளுங்கள்`
என்றாளாம். அந்தக் கிழவி கொடுத்த கல்லை எடுத்துக்கொண்டு
போய்ப் பெரிய கோயிலின் உச்சியில் வைத்துவிட்டார்கள். அதை
வைத்ததில்கூட ஒன்றும் பெருமை இல்லை. அதற்குப் பின்னால்
ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார்கள். மறுநாள் இராசராசன்
தூங்கும்போது கனவில் ஒரு குரல் கேட்டதாம் `கிழவியின்
நிழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.` என்று பெருவுடையார்
பேசினாராம்.

Add a Comment