மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை! 3
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
வேந்தன் என்று சொன்னாலே அவனொரு வேலேந்திய வேந்தன். வாளேந்திய வேந்தன் என்றுதான் கூறுவார்கள். வேல் தான் அந்தக் காலத்தில் வேந்தனுக்கு, படைக்குச் சிறப்பாக இருந்தது. அவன் பிடித்திருந்த செங்கோல் போல புகழ் வடிவமாகத் திகழ்ந்தது. வேந்தன் என்றாலே ஒரு நாட்டை வென்று வருவதுதான். இது இயல்புதான் என்று சொல்ல வருகிற திருவள்ளுவர், உறுபொருளும் உல்குபொருளும் ஒன்னார் பெறுபொருளும் வேந்தன் பொருள் என்கிறார். ஒன்னாருடைய திருப்பொருளும் பெறுபொருளும் என்கிறபோது பகைவரிடம் இருக்கும் பொருளை வேந்தன் வெற்றியால் பெறவேண்டும் என்ற கருத்து திருவள்ளுவருக்கு உண்டு. ஆனால் வேலன்று வென்றி தருவது மன்னவன் கோல் அதுவும் கோடாது எனின் என்று ஒரு குறட்பா இருக்கிறது. வேல் வெற்றி தருவது என்ற முடிவு அது. ஆனால் திருக்குறளில் வரும் வேல் என்ற சொல்லுக்கே வெல்வது வேல் என்று பொருள். ஆனால் வேலன்று வென்றி தருவது மன்னவன் கோல் அதுவும் கோடாது எனின் என்று சொன்னால், வேலால் வெற்றி பெறலாம் என்று கருதுவது சிறந்த கருத்து இல்லை என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார் என்பது வியப்பாக இருக்கிறது.

Add a Comment