நேர்காணல்-14.3.2011
கேள்வி 2 : நல்ல கருத்து. ஆதினங்களிலும், இன்னும் சில கோயில்களிலும் இப்படியான ஓலைச்சுவடிகள் இன்னும் கட்டுக்கட்டாகச் சாக்குமூட்டைகளில் கட்டிவைக்கப்பட்டிருக்கின்றன என்ற ஒரு தகவலை அண்மையில் அறிந்தேன். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இது ஒரு புதிய தகவல் இல்லை. காரணம் என்னுடைய வீட்டிலேயே ஒரு ஏழெட்டு ஓலைச்சுவடிகள் கிடந்தன. நான் இந்த அலுவலகத்தில் இங்கே பணியாற்றுகின்ற இடத்திலேயே, ஒரு நான்கைந்து ஓலைச்சுவடிகளை ஒருவர் கொண்டுவந்து கொடுத்தார். நான்கூட சொன்னேன். எனிடத்தில் கொடுத்ததை நீங்கள், தூக்கி எறிந்திருக்கலாமே என்றுகூட கேட்டேன். காரணம் அதில் ஒரு தொடர்பும் இல்லை. ஒருபக்கதில் படம் இருந்தது. ஒரு பக்கத்தில் எழுத்து இருந்தது. நான்கு பக்கத்தில் கணக்கு இருந்தது. ஏன் மறைந்துவிட்டார்(மறைத்துவிட்டார்) நண்பர் சங்கரவள்ளி நாயகம், அவர் கோயில்பட்டியில் திருக்குறள் மன்றம் நடத்தியவர். நான் இரண்டாண்டுகளுக்கு முன்பு திருக்குறள் விழாவிற்குச் சென்றபோது, இந்த ஓலைச்சுவடியை என்னிடத்தில் கொடுத்தார்கள். நீங்கள் அதை வெளியிடலாம் என்று கொடுத்தார். நான் அதைக் கொண்டுவந்துகூட அதை யாராவது படிக்கத்தெரிந்தவர்கள் படித்து வெளியிடலாம் என்று சொன்னேன். அதற்குப்பிறகு வாங்கிச்சென்றவரும் ஒன்றும் மறுமொழி தரவில்லை.
ஆதினங்களில் ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு என்று எடுத்துக்கொண்டால், மருத்துவச் சுவடிகள் இதுபோன்ற சுவடிகளையெல்லாம் கட்டுக்கட்டாக எடுத்துவைக்கிற வழக்கம் உண்டு. அப்படியே கட்டுக்கட்டாக ஆதினங்களில் இருந்தால், ஆதினங்களைப் போல தமிழ்த்தொண்டாற்றுவதற்கு யார் வரப்போகிறார்? தருமை ஆதினம், ‘ஞானசம்பந்தம்’ என்ற இதழ் வெளியிடுகிறது. திருவாவடுதுறை ஆதினம் இதழ் வெளியிடுகிறது. திருப்பனந்தாள் ஆதினம் இதழ் வெளியிடுகிறது எனவே அவர்கள் அப்போதே வெளியிட்டுருப்பார்களே? அதை அவர்கள் படிக்க முடியவில்லை என்று பொருளா? பிறகு கட்டுக்கட்டாக ஏன் போட்டு வைத்திருக்கிறார்கள்? அதை உடனே வெள்ளைத்தாளில் எழுத வைத்துவிடலாம். அல்லது, வெள்ளைத்தாளில் அச்சிட்டு விடலாம். இதை ஒரு பழம்பொருள்போல கட்டி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்குக் கவலை இல்லை என்று பொருளா? சொன்னவன் அந்தத் தகவலை எதற்காகச் சொன்னான் என்றும் எனக்கு விளங்கவில்லை.

Add a Comment