POST: 2015-06-01T20:56:06+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-6

சேக்ஸ்பியர் பிறந்த மண்ணிலேயே தோன்றிய பென் ஜான்சனைக் காட்டிலும் சிறப்பாகப் பிறிதொருவர் சொல்லிவிட இயலாது. அவருடைய எழுத்தோவியம்;

‘‘காலத்தின் ஆன்மா! பாராட்டு, பேருவகையின் திருவுருவம்!

நமதுலக மேடையின் விந்தை!

சேக்ஸ்பியரே, மீட்டெழுவாய்!

சாசருடனோ, ஸ்பென்சருடனோ, பீமோன்ட்டுடனோ

உனைக் கிடத்த நான் ஒப்பவில்லை!

மேலும் சிறந்ததோர் உறைவிடம் உனக்கு வேண்டும்!

கல்லறையல்ல; நினைவாலயம் நீ!’’
அவர் மேலும் வியந்துரைத்தார்;

‘‘செருக்குமிக்க கிரீஸ் அறிஞருள்ளும்,

பீடுமிக்க ரோமாபுரி மேதையருள்ளும்

ஒப்புவமை கொள்ள இயலாத

தனிப்பெரும் தகைமை உன்னுடையது!

புவிக்கு அனுப்பப்பட்டாயா, அல்லது

சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்தாயா?

பிரிட்டனே, வெற்றிமுரசு கொட்டு!

பெருமிதத்துடன் இந்த உலகுக்குக் காட்டிக் கொள்வதற்கு

ஒருவருண்டு உனக்கு!

ஒட்டுமொத்த ஐரோப்பாவும்

மதிப்பளிக்கக் கடன்பட்டிருக்கும் ஒருவர்!

அவர், ஒரு குறிப்பிட்ட காலம் கட்டும்

கட்டத்திற்குக் கட்டுப்பட்டவரல்ல;

காலகாலத்திற்கும் உரியவர்!

கிரீஸையும் ரோமாபுரியையும் பென் ஜான்சன் குறிப்பிட்டுள்ள விதத்தைக் கவனியுங்கள். சேக்ஸ்பியரைப் போற்றிப் பரவும் பரவசப் போக்கிலே ஹோமரையும், விர்ஜிலையும், சாக்ரடீஸையும், அரிஸ்டாட்டிலையும் தனது இரண்டே வரிகளில் புறந்தள்ளத் துணிந்துவிட்டார். இதனை சேக்ஸ்பியரைக் கற்றறிந்த மேதையர் நன்கு புரிந்து கொள்வர். அரிஸ்டாடிலைக் குறிப்பிடும் பொழுது அலெக்ஸாண்டர் போப் இப்படிச் சுட்டிக்காட்டினார்; அரிஸ்டாடில்களால் நிரம்பப் பெற்ற ஒட்டுமொத்த கோள்கள் கூட்டமும் இயற்கையின் ஒளிவெள்ளத்தைத் தொடர்ந்து செல்லும் ஒரு சேக்ஸ்பியருக்குச் சமமானது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *