இந்தியப் பண்பாடு-9
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
பாரதம் கற்றுத்தரும் பண்பாடு என்னும் தலைப்பில்தான் நான் உரையாற்றப் போகிறேன். மக்கள் என்று நினைக்கும்போது அவர்கள் உடுத்தும் உடை, சார்ந்துள்ள இனம், பேசும் மொழி என்று வேறுபாடு காணாமல் ஆட்சி செய்தவர்கள், ஆட்சியில் சிறைப்பட்டவர்கள் என்ற சிந்தனையில்லாமல் ஒன்றாகக் காணும் ஒரு பண்பு என்பதை இந்திய நாடு தான் உலகத்திற்கு எடுத்துக்காட்ட முடியும். இந்திய நாட்டினுடைய பண்பாடு இப்படிப்பட்ட ஒரு பொறையுடைமையை, பிறரைத் தாங்கிக் கொள்கிற ஒரு பெரிய சிறப்பைப் பெற்றிருக்கிறது. அதனாலேதான் குடும்பத்தில்கூட இணைந்திருக்கும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை என்பது இங்கேதான் உண்டு. பிறர் மீது பரிவு காட்டுவதுதான் நம்முடைய கடமையே தவிர, அவர்கள் மீளவும் பரிவு காட்டுகிறார்களா என்றுகூட எண்ணவேண்டாம் என்னும் கருத்துக்களை இந்திய இலக்கியங்கள் பல்லாண்டுகளாகப் பறைசாற்றுகின்றன.

Add a Comment