இந்தியப் பண்பாடு-31
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் துணைவேந்தர்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
ஏழை எளியவர்கள் என்று கூடப் பாராமல் இந்தப் பொதுப்பணியில் தங்களை அவனிடமே ஆட்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். என்பதால், இந்தக் கோயிலைக் கட்டுவதன் மூலம்
கற்சிலை,
ஆடற்கலை,
ஓவியக்கலை
கல்விக்கலை
என்று எல்லாக் கலைகளையும் கோயிலில் வளர்த்துக் காட்ட முடியும் என்று கருதியிருக்கிறார்கள். எனவே பெருமக்களே, நான் திட்டமிட்ட ஒரு வரையறை இல்லாமல், திக்குத்தெரியாமல், இந்தியப் பண்பாடு என்பதை எண்ணிப்பார்த்தால் இப்படியெல்லாம் கருதலாம் என்று கூறியிருக்கின்றேன்.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கும் எனக்கும் தெரியாமல் கூட நம்முடைய உணர்வில் உதிரத்தில் கலந்திருக்கின்றன.
பொறுத்துப் போவதென்பதும்
பெரியவர்களை மதித்துப் போவதென்பதும்,
வணங்கி வாழ்வதென்பதும்,
இருப்பதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கலாமென்பதும் சிறந்த பண்பாட்டுக் கூறுகளாக நமது நாட்டில் மிளிர்கின்றன.
இந்தப் பண்பாடுகள் இன்று நேற்றுப்
பிறந்தவையல்ல;
எண்ணிப்பார்க்க முடியாத காலத்திலிருந்து
இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒற்றுமை என்பதும்
ஒருமை என்பதும் வளர்ந்துள்ளன.
எனினும் சில நேரங்களில் என் மதம், உன் மதம் என்றெல்லாம் மதப்போராட்டம் நடக்கும்போது மனம் வருந்துகிறது. என்றாலும் கூட இந்தப் போராட்டங்களெல்லாம் நீர் கிழித்துப் பிரிந்து போவதில்லை என்பது போல உறவாகப் பின்னால் இணைந்துகொள்ள வாய்ப்பை வளர்க்கவேண்டும்.

Add a Comment