ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா
நாள் 05.02.2006
வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-1
இன்றைய விழாவிற்கு பொலிவூட்ட வந்திருக்கும் பெருமக்களாகிய பெருந்தகை சேசாயி அவர்களே,
இயக்குநர் சிகரம் என்றும் திரை உலகத்தின் தேயாத ஒரே முழு நிலவு என்று பாராட்டப்படுகின்ற டாக்டர்.பாலச்சந்தர் அவர்களே,
பாராட்டுப் பெறுவதற்காக வருகை புரிந்திருக்கும் பாரதி அன்பர்களே மூவர் வந்திருக்கிறார்கள்.
பாரதி சீனிவாசன் அவர்கள் தன்னுடைய வாழ்வெல்லாம் பாரதியின் பாடல்களைப் பரப்புவதிலும், அந்த நெறிகளை உலகுக்கு எடுத்துரைப்பதிலும், பழுத்த எழுத்தாளராக திகழ்கிற பாரதி சீனிவாசன் வந்திருக்கிறார்.
இளமைக்கு இளமையோடு சாதனா இராதாகிருஷ்ணன் அவர்கள் கோவையிலிருந்து சென்ற ஆண்டு ஸ்ரீராம் நிறுவனங்கள் வெளியிட்ட பாரதி அமுதத்தில் பாரதியார் எழுதிய பாப்பா பாட்டு பற்றி ஓர் ஆழ்ந்த கட்டுரை எழுதிய சாதனா இராதாகிருஷ்ணன் அவர்களும் விருது பெற வந்திருக்கிறார்கள்.
நான் ஒரு இரண்டு திங்களுக்கு முன்னால் லண்டன் மாநகரம் சென்றபோது எனக்கு லண்டனில் உள்ள ஒருவர் ஒரு புத்தகத்தைக் கையில் கொடுத்தார்.இதைப் பாருங்கள் என்று.அந்தப் புத்தகம் வந்து ஒரு ஐந்து ஆண்டுகள் இருக்கும்.அப்போதுதான் அந்த நூலை நான் புரட்டிப் பார்த்தேன்.பாரதியாரின் குயில் பாட்டின் தத்துவ மர்மம் என்பதாகும் அந்த நூல். எனக்கு ரொம்ப வியப்பாக இருந்தது. பாரதியாரின் குயில் பாட்டின் தத்துவ மர்மம் என்று ஒரு நூலாக எழுதி வெளியிட்ட கவிஞர் கருணாநந்த ராஜா அவர்கள் லண்டன் மாநகரத்திலிருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.
ஆக ஸ்ரீராம் நிறுவனங்கள் பாரதியாரின் புகழ் பரப்பும் பெருமக்களை எப்படியெல்லாம் தேடி அழைத்து வந்து சிறப்புச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அதை குறிப்பிட விரும்புகிறேன்

Add a Comment